Friday 4 December 2020

விஷ்ணுபுரம்

                                                               விஷ்ணுபுரம் 

    விஷ்ணுபுரம் நாவலின் முதல் வாசிப்பு முடித்து விட்டேன். வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளுக்கு தர்க ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் விடை காண மேற்கொண்ட பெருமுயற்சியே இந்நாவல். தமிழின் மிகச்சிறந்தப் படைப்புகளில் இந்நாவலுக்கான தனி இடம் உண்டு.

    நாவல் மூன்று பாகங்களாக பிரித்து வாசிக்க வேண்டும். வரலாற்று பின்புலமுடன் கற்பனாவாதத்தையும் சேர்த்து வாசித்தால் இந்நாவலின் மொழி பிடி வரும். வாசிக்க தொடங்கிய ஆரம்ப பக்கங்கள் சற்று கடினமாக இருந்தாலும் அதன் மொழியும் கற்பனையும் விஷ்ணுபுரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். சம்ஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பகுதி கதையின் போக்கிலோ அல்லது கதை மாந்தரின் சொல்லாடிலோ அர்த்தப்பட்டுவிடும். 

    நாவல் நேர் கால வரிசையில் தொகுக்கப்படவில்லை. இருந்தாலும், வாசிப்பனுபத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். இரண்டாம் பாகத்தை முதல் பாகமா வாசித்து பிறகு முதல் பாகத்தை வாசித்தால் கூட, பொருள் முறை மாறாது என்றே நினைக்கிறேன்.

    நாவல் வாசிக்க தொடங்கியதுமே நம்மை ஆட்கொள்வது விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். அதன் பேருருவும், வானுயர்ந்த  கோபுரங்கழும், சிற்பங்கழும் வாசிக்கும் போதே நம்மை அண்ணாந்து  பார்க்கச் செய்யும். "விஷ்ணுபுரத்தின் மைய கோபுரத்தை நகரின் உள்ளிலிருந்து பார்க்க முடியாது". இதுவே நாவல் உள்ளடங்கிய  அனைத்து தத்துவ, ஞான விவாதங்களுக்கும் தொடக்கமான இடமாக நான் காண்கிறேன்.

    விஷ்ணுபுரத்தின் ஒழுங்கையும், மக்களின் சமூக கட்டமைப்பையும் விவரிக்கும்போது  அது ஒரு கனவு நகரமாக காட்சியளிக்கிறது. அதே சமயம், அந்நகரம் கொண்டிருக்கும் அழுக்கையும், பேதங்களையும் மக்கள் எண்ணாமல் அதன் சிறப்பை மட்டுமே போற்றிக் கொண்டிருந்தனர். அந்தணர்களின் ஒருவனான பிங்கலனுக்கு மட்டும் இந்நகரம் ஏதோ உவப்பாக இல்லை. மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே, முன்னோர் கூறுவனவற்றை ஏற்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலில் ஒரு பெருநோயாளியின் காலினை திருவடி என்பவன் மிதித்ததைக் கண்ட பிங்கலன், தன் மனதில் மிகப்பெரும் ஒவ்வாமையால் ஆட்கொண்டு விடுகிறான். 

    கிட்டத்தட்ட ஒவ்வொரு கதைமாந்தரும் ஏதாவதொரு புள்ளியில் தத்துவ கேள்விகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து மானிட அகம் சார்ந்த கேள்விகளும் விவாத பொருளாக வருகின்றன.  வாழ்வின் பொருளை, பிரபஞ்சத்தின் உண்மையை எங்காவது ஒரு இடத்தில தொட்டு, மொண்டு பருகிவிட நினைக்கும் ஒரு பேரிலக்கியம் இது. பல்வேறு மறுவாசிப்புகள் அவசியம் நிகழ வேண்டிய நூல் இது.

    ஸ்ரீபாத பாகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், மணிமுடியில் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, பிரம்மராயர் குருட்டு யானையை சரியாக பரிசோதிக்காததால் தண்டிக்கப்படுகிறார். ஆனால் அவரை பழி வாங்கவே, அவர் சோதித்த குருட்டு யானையின் கண்மணிகளில் வந்தமர்ந்து அவரை ஏமாற்றினர் விண்ணவர் என்று அதனூடாக ஒரு கதை விரிந்தோடுகிறது. இப்படியாக ஒவ்வொரு கிளையிலும் கதைகள் முளைத்துக்கொண்டே போவது, இந்நூலின் பிரம்மாண்டத்தையும் வாசகனின் கற்பனையையும் கூட்டிகொண்டே போகிறது.

    சோனா நதியில் இருந்து கிளம்பும் காற்று இனிய இசையாக விஷ்ணுபுர மண்டபத்தில் எதிரொலிப்பது, இயற்கையின் இசை மனிதன் அறிந்த அனைத்து தாளங்களை விடவும் இனிமையானதாக தோன்றுகிறது. யானைகளை மனிதன் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறான்.யானைகளின்றி அன்று எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது. 

    தான் கண்ட பெண் மேல் முடிவிலா ஆசை கொண்டு பித்துப் பிடித்துப் பிறகு ஒரு துறவியாக மாறும் திருவடி. பிங்கலன், சங்கர்ஷணன், திருவடி அனைவரும் பெண்ணின் மீது கொண்ட காமத்துடன் சேர்ந்து தன் ஞான கேள்விகளுக்கு விடை தேடவும் முயற்சிக்கின்றனர்.

    அக்கால சிற்பக்கலையின் சிறப்பும், நேர்த்தியும் அதன் கணித ஒழுங்கும் விஷ்ணுபுரமெங்கும் வருகிறது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் விண்ணவர் மண்ணில் இறங்கும் ஊர்திகள். மேகத்திற்கு மேலே வானில் உள்ளன கோபுர உச்சிகள். அதன் பிரம்மாண்டமே விஷ்ணுபுர வாசிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுவே மக்களிடம் ஒரு அமைப்பையும், ஒழுங்கையும் நிர்மாணிக்கும். 

    விஷ்ணுபுரம் 'அக்னிதத்தனால்' உருவாக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகிறது. அவரது சந்ததிகளே அதன் ஞானாதிபதியான 'சர்வக்ஞர்' என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுபுரம் பல்வேறு முறை முழுவதுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் உருவாகும் போது அங்கே விஷ்ணு 'நிர்மால்ய'மாக படுத்திருப்பார். அங்கிருந்தே விஷ்ணுபுரம் மீண்டும் தன்னை வளர்த்துக்கொள்ளும்.

    மனதினை கட்டுப்படுத்துவது என்றால்  என்ன? மனம் மனமற்ற பொழுதில் என்னவாக இருக்கும். அதுவே ஞானத்தின் கடைசிப் படியா? அனுபவத்தை அறிய முடியுமா? அறியும் பொருட்டு அது முழுமையான அனுபவமா இருக்குமா? போகத்தின் உச்சம் தான் என்ன? காமமா? காமவிடுதலை ஞானத்தின் திறப்பா? அல்லது காமத்தினை அப்படியே ஏற்றல் ஞானத்தை பெருக்குமா? பிரம்மம் என்பது எது? அதை அறிய முடியுமா? பிரபஞ்ச உண்மை என்று ஒன்று உள்ளதா? அல்லது அனைத்தும் தற்செயலின் பேரமைப்பா? பிரபஞ்ச அமைப்பின் விதிகளை யார் உருவாக்கியது? அல்லது அவ்விதிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட வெறும் பிரமையா? மனமற்ற நிலையிலேயே பிரபஞ்ச உண்மையை அறிய முடியுமா? அனைத்திற்குமான ஆதி எது? அல்லது ஆதியற்ற அனாதையா இப்பிரபஞ்சம்? 

    மேலே உள்ள கேள்விகள் இந்நூல் முழுவதும் வரும் விவாதங்களின் ஒரு சிறு தொகுப்பே. இவை குரு-சிஷ்ய போதனைகள், பொதுவான பேச்சுக்கள், அனைத்துலக ஞானிகள் மத்தியில் நிகழும் விவாதங்கள் என்று எந்த ஒரு பேதமும் அன்றி அனைத்து இடத்திலும் நூல் பூராவும் வந்துகொண்டே உள்ளது.  

    தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றும் பொருட்டு குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வந்து, தன் மகனை இழந்து, குடும்பத்தைப் பிரிந்து தாசித் தெருக்களில் தஞ்சம் அடைகிறான், சங்கர்ஷணன். தன்  மனைவியால் வெறுக்கப்படுகிறான். பித்துப் பிடித்து அலைந்து இறுதியில் மகாபுராணமான 'பத்மபுராணத்தை' பாண்டிய மன்னன் முன்னிலையில் அரங்கேற்றுகிறான்.  விஷ்ணுபுரத்தின் அத்தனை வரலாற்றையும் கூறுவது பத்மபுராணம். அதன் இறுதி பிரளயம் பாகத்தை முடிக்காமலேயே அதனை அரங்கேற்றினான் சங்கர்ஷணன். அதுவே காலம் காலமாய் விஷ்ணுபுர வரலாற்றை திரும்ப திரும்ப சொல்லும் பெரும் காவியமாகும்.

   கவிஞர்களை பகடி செய்யும் வகையில் நிறைய இடத்தில வருகிறது. "விஷ்ணுபுரத்தில் கவிஞர்களுக்கா பஞ்சம், இங்கு அனைவரும் கவிஞரே" என்று ஒருவர் சங்கர்ஷணனிடம் கூறுவது உச்சம். சங்கர்ஷணன் "ஆழ்வாருக்கு" மருத்துவனாக வேடமிட்டதனாலே, அரசவைக்குள் புகுந்து காவியத்தை அரங்கேற்றினான். அரசவைக் கவிஞரின் "கவிப்பெருமை" பகடிகளுள் ஒன்று. 

    பாண்டியனின் போக வாழ்க்கையம் அவனை சுற்றி நடக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டும், வல்லாளன் விஷ்ணுபுரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியும் விவரிக்கப்பட்டுள்ளது. 

    "மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக  வாழ்க்கையைச் சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். புதிதாக ஏதும் நிகழ விடக்கூடாது".   மனிதன்  அச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றும் போது  அது ஒரு பேரமைதியையும் அதற்கு மேல் ஏதும் சிந்திக்க இல்லை  என்னும் உணர்வையும் தரும் போது , அவன் வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்கிறான். மனிதன் எப்போதுமே சிந்திக்க பயந்தவன். அல்லது சிந்தனைகளை குறுக்கிக் கொண்டவன். எல்லாம் எழுத்தப்பட்டவை என்பதனாலே மக்கள் அமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர்வினையாகவே தத்துவம் பிறக்கிறது. அச்சத்தை மிதித்து வேறு திசையில் எழ அது உதவுகிறது. அந்த தத்துவத்தின் பல்வேறு கண்டடைதலே மதங்களாகவும், மார்க்கமாகவும் உருப்பெறுகிறது. மீண்டும் இதனை அவன் சடங்காக்கி அதன் மேல் நின்று சிந்தித்து புதியவற்றை அடைகிறான்  இதற்கு என்றுமே எல்லை இல்லை.

    விஷ்ணுபுரத்தை அழிக்க ஒரு சாரார் எப்போதும் முயற்சி எடுத்துக்கொண்டே உள்ளனர். மகாகாசியபரின் ஆணைப்படி சிற்பியினை தன் வசப்படுத்தி இந்த மிகப்பெரும் விஷ்ணுபுரத்தையே ஸ்ரீபாத விழாவின் இறுதி நாளன்று அழிக்க நினைக்கிறார்கள். அந்த சிற்பி பெரும் சேதம் விளைவிக்கும்  பொருட்டு  மைய கோபுரத்தின் மீது ஏறினான். அங்கு மிகவும் மனம் சஞ்சலப்பட்டு உச்சியிலிருந்து கீழே விழுந்து மாண்டு விடுகிறான். அவன் மனம் ஆட்கொள்ளப்பட்டது.

       சுடுகாட்டுச் சித்தன் ஒருவன் பட்டாச்சாரியாரை அவரின் சீடர்கள் முன் விவாதத்தில் தோற்கடித்த ஒரு சிறுவனை தன் சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அனைத்து போதனைகளையும் கற்பிக்கிறான். அவனை காஸ்யபன் என்று பெயர் வைக்கிறான். அவர்கள் இருவரும் புரியும் ஆனந்தத் தாண்டவத்தை வாசிக்கும்போது நாமும் எல்லாமும் விட்டு ஆட தோன்றுகிறது. அவனும் அவன் சீடனும் மகாஞான சபையில் பங்குகொள்கிறார்கள்.

      அஜிதன் என்னும் பௌத்த மார்க்கம் கொண்டவன் விஷ்ணுபுரத்தின் மகாஞான சபையை கூட்ட சவால் விடுகிறான். பாண்டியனின் ஆணைக்கு இணங்க சபை கூட்டப்படுகிறது. 

    இந்திய ஞான மரபில் இத்தனை மார்க்கங்களும், மரபுகளும் உள்ளது என்பதை ஞான சபையில் நடக்கும் பெரும் தர்க்கங்களையும், தத்துவ விவாதங்களையும் வைத்து தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. அந்த மார்க்கங்களின் உள்ளே செல்ல, இது ஒரு நுழைவாயிலாக இருக்கும். கற்பனை செய்யமுடியாத அளவு எண்ணிக்கையில் மிகுந்தவை. 

    ஒவ்வொரு தர்க்கமும் இன்னொன்றை விட சிறந்ததாகவும், ஏற்றுக்கொள்ளும் படியும் இருக்கும். அதனை எதிர்த்து சமன் செய்யும் தர்க்கமும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு மார்க்கமும் தங்கள் வாதத்தைத் வைத்து கொண்டிருக்கையில் விஷ்ணுபுர மகாசபையின் சர்வைக்ஞர்(பவதத்தர்) சரியான சந்தர்ப்பத்தில் வாதியின் தர்க்கத்தை உடைக்கும் பொருட்டு அல்லது வாதத்தினை விஷ்ணுபுரத்தின் கோட்பாட்டிற்கிணங்க பதில் கூற முடியாதளவுக்கு சமன் செய்து விடுவார்.

    பிரம்மம் என்பதே சத் மற்ற அனைத்தும் அசத். ஏழு வகை உடலை உதறி ஆத்ம, தூய நிலையானா பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே முக்தி என்று பவதத்தர் பல்வேறு வாதங்களில் நிறுவுகிறார்.  

    வேதங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களும், விவாதங்களும் வந்த வண்ணமே உள்ளன. வேதத்தினை ஏற்றும் மறுத்தும் செய்யும் விவாதங்கள் நிரம்பி உள்ளன. 

        விஷ்ணுபுரத்தின் ஞானசபையில் நடந்த விவாதங்களில் பல்வேறு மார்க்கம் கொண்டவர்களும் பங்கு கொண்டு தங்கள் தரப்பின் தர்கத்தினை முன்வைத்தனர். இந்திய பெருநிலப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பும் பங்கு கொண்டு விவாதித்தனர். அவ்விவாதங்கள் மட்டுமே தனியாக ஒரு நூலாக கொண்டு வரலாம். இதை மட்டுமே நிறைய முறை வாசிக்க வேண்டும். நமது சிந்தனை ஆழத்தினை சோதிக்கும் பல நூறு கேள்விகளும் தர்க்கங்களும் இதில் அடங்கி உள்ளது. நம்மை மேலும் சிந்திக்க வைக்க இது உதவும். அஜிதரின் தர்க்கங்களை அனைத்து பிரிவினரும் சோதனை செய்து தோல்வியுற்றனர். அணைத்து மார்க்கத்திலும் தர்க்கங்கள் தரிசனங்கலாக தாவும்  நேரம் வரும்போது , பவதத்தர் அதனை உடைக்கும் வகையில் கேள்விகளை தொடுத்து விஷ்ணுபுர கோட்பாட்டினை நிலை நாட்டுவார். அதே முறையை அஜிதர் பவததத்தருக்குக் கையாண்டு ஞானசபையில் வெற்றி கொள்ளகிறார்.

    அஜிதர், அனைத்தையும் அனுமானமாகவும், அறிய முடியாமையாகவும் கொண்டு தன் தர்க்கத்தை நிலைநாட்டுகிறார். பிரபஞ்சத்தின் ஆதி காரணத்தை நம்மால் அறிய முடியாது என்கிறார். "அறியமுடியாதென்பதை அறிவதே ஆகப் பெரிய மானுட ஞானம்." நாம் அறிந்தது "காலம்" ஒன்றை மட்டுமே. காலத்தினை சக்கரமாக உருவகம் செய்து அதன் மைய புள்ளியே மகாதர்மம் என்று நிலைநாட்டுகிறார். மகாதர்மம் எங்கும் என்றும் நிரம்பி உள்ளது. அது எதுவாகவும் மாறுவது இல்லை. இந்திய ஞானமரபில் பௌத்தம் தான் கொண்ட பெரும் பங்கினை இதில் காணலாம்.

    அஜிதர் ஞானசபையை வென்ற பிறகு, மிகவும் சோர்வடைகிறார். அவருக்கு அந்த வெற்றியில் உள்ளூர மகிழ்ச்சி இல்லை. இவை அனைத்தும் மனிதன் தன் அகங்காரத்தை பூர்த்தி செய்யும் செயல்களன்றி வேறில்லை என்று மனம் சஞ்சலப்படுகிறார். விஷ்ணுபுரத்தில் "அஜிதரை" சுற்றி நிறுவனங்கள் எழுப்பப்பட்டு, சமூகம் உருவாக்கப்படுகிறது. 

    நூலின் இறுதி பாகமான "மணிமுடி"யில் விஷ்ணுபுரத்தின் "பிரளயம்" வருகிறது.   பல நூறாண்டுகள் கழித்து வருவதாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் வந்த திருவடி, பிங்கலர், ஸ்ரீதரர், சங்கர்ஷணன்   ஆகியோருக்கு தனியாக மார்க்கமும், அவரை பின்பற்றுவோரும் வருகின்றனர். 

    பிரம்மாண்டங்களுக்கு பேர்போன விஷ்ணுபுரம் சிதைந்து அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.  போர்களால் கோபுரங்கழும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு பெரும் காடாக விஷ்ணுபுறம் காட்சி அளிக்கிறது. ஊரில் நூற்றுக்கும் குறைவான மக்களே வாழ்ந்தனர். அனைவரும் மதுரை போன்று ஊர்களுக்கு பெயர்ந்து  கொண்டே இருந்தனர்.  

    இமயமலை முகடுகளில் மகா அஜிதரையும் விஷ்ணுபுரம் என்ற ஊரையும் கேள்விப்பட்டு "யோகவிரதன்" என்னும் பௌத்தன் விஷ்ணுபிரத்திற்கு  வந்து "ஸ்ரீசக்கரம்" பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.  அவனுடன் சங்கர்ஷணன் மார்க்கம் கொண்டவனான "பாவகன்" பல்வேறு தர்க்கங்களில் ஈடுபடுகிறான். 

    செம்பர்களைப் பற்றியும், அவர்களின் மூப்பனானஆதிமூப்பனே விஷ்ணு என்றும் ஒரு மாற்று வரலாறு சொல்லப்படுகிறது. விஷ்ணுபுரம் காடாகி கோலம் கொண்டுள்ளதால், காட்டின் வர்ணனைகள் நிறைய இடம்பெற்றுள்ளது. வேதத்ததன் (கடைசி சர்வஞர்) சோலைபைத்தியமாக காடுகளில் மலைகளில் நதிகளில் சுற்றி அலைகிறார். மனம் மட்டுமே உடைய ஒரு தூய ஆத்மாவாக, எந்த ஒரு தர்க்க ஞானமும் , மனிதன் கட்டி அமைத்த பல்வேறு நெறிமுறைகளும் அன்றி வருவது, மனிதனின் ஏக்கத்தையும், சுதந்திரத்தின் தூய்மையையும் மனம் அற்ற நிலையின் மனிதத் தன்மையும் இருப்பதாக அமைகிறது.

    ஹரிததுங்காவின் இருப்பே இதில் எப்போதும் உள்ள இருப்பாகும். அதுவே விஷ்ணுபுரத்தின் அசையாத சாட்சி. அதன் தோற்றமும், வாழ்க்கையும், அழிவும் அச்சிகரம் மட்டுமே அறியும்.

    நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக் கண்ட பொழுதுமாக உள்ளது. தர்க்கத்திருக்கும் தரிசினத்திற்கும் நடக்கும் இடைவிடாத கண்ணாமூச்சி ஆட்டமாக இந்நூல் உள்ளதோ என்ற சிந்தனையும் எழுகிறது. அல்லது மனித மனதிற்கு அப்பாற்பட்ட வேறொன்றை தொட முயலும் ஒரு பெரும் முயற்சியாக நான் இதைப் பார்க்கிறேன். 


Wednesday 2 December 2020

காந்தி - கடிதம்

 

அன்புள்ள ஜெ,

            தங்களின் 'தகடூர் புத்தகப் பேரவையின்' காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை  நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் 'உரையாடும் காந்தி'  புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப்  புத்தகத்திற்கு அப்பால் உள்ள ஒரு காந்தியினை புரிந்து கொள்ள உதவி புரிகிறது. 

            காந்தியத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட இன்று மிகவும் தேவைப்படுகிறது. காந்தியை சொல்லால் முழுவதுமாக விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. எவ்வளவு விவரித்தாலும் காந்தியத்தை  செயலால் மட்டுமே முழுமைப் பெற வைக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும்,  'இலட்சிய செயலாற்றிக்கொண்டே' இருந்தவர்கள் வரலாற்றில் மிகவும் குறைவு. செயலே சொல்லாகவும், சொல்லே செயலாகவும் தன் வாழ்க்கையை  அர்ப்பணித்தார் காந்தி.

            உண்மையில் காந்தியை எதிர்த்தலும் ஒரு வகையான காந்தியமே. அவரின் ஏதோ ஒரு கூற்று நம்மை நிலைகொள்ள செய்யாமல் ஆழ் மனதில் உறுத்திக்  கொண்டே இருக்கிறது என்றால் , அதனை சரி செய்ய நாம் அந்த கூற்றுக்கு ஒரு எதிர்வினையை செய்து பார்ப்போம். அது அவர் கூறியதற்கு மாற்று கருத்தாக இருந்தாலும் அச்செயலும் காந்தியத்தினால் முளைத்த விதையே. அவற்றில் நாம் வெற்றி கண்டாலும் தோல்வி கண்டாலும் அதன் வேர் காந்தியத்தில் உள்ளது. செயலாற்றிக்கொண்டே இருப்பதன் முக்கியதுவத்தை அது உணர்த்துகிறது.

            தாங்கள் ஒரு வாசகர் கேள்விக்கு (இவ்வளவு அரசியல் திரிப்புகள் உங்கள் சொல்லின் மேல் சொல்லப்பபட்டாலும் , நீங்கள் ஏன் சலிக்காமல் திரும்ப திரும்ப உரையாடிக்கொண்டே இருக்குறீர்கள்? என்ற வகையான கேள்விக்கு), 'உரையாடிக்கொண்டே இருப்பது என் கடமை, அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர் மனதில் உள்ளது. வாசகனுக்காக நான் உரையாடவில்லை, எனக்காக உரையாடுகிறேன்'   என்ற வகையில் பதில் கூறினீர்கள். அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காந்தியின் கூற்றே.

அன்புடன் ,

பிரவின்,

தர்மபுரி 



Sunday 19 July 2020

காகிதம் - 2

                                                        காகிதம் - 2

   இன்று 'ராஜ் கௌதமன்' அவர்களின் 'தலித் பார்வையில் தமிழ்ப்  பண்பாடு' என்னும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் அக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை சங்கப் பாடல்களின் வழியே நிறுவ முயல்கிறது. 50 பக்கங்கள் வரை படித்து முடித்துள்ளேன்.
   தினமும் காலையில் 5 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக ஒரு ஒழுங்கு முறையோட கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் பின்பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எப்படியாவது காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சி செய்து ஒரு 2 மணி நேரம் தவறாமல் வாசிக்க வேண்டும். 
   

Thursday 9 July 2020

லாசர் - கடிதம்

                                                 லாசர் - கடிதம் 

அன்புள்ள ஜெ,

     'லாசர்' சிறுகதை வாசித்தேன். காலம் நெடுகிலும் அச்சிறுவன் லாசர் போன்றோரை பார்க்க முடியும். அன்று அந்த கை-கடிகாரத்தை பார்த்து வியப்புற்றோம், இன்று தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டு வியப்புறுகிறோம். 
    லாசர் கதையை படித்த பின்பு ஒரு 'சொன்னதை சொல்லும் கிளியுடன்' உரையாடியது போன்று  இருந்தது. மற்றவர்கள் சொல்லும் அத்தனையும் திரும்பச் சொல்லி, தொடர்ந்து வரும் இரு வாக்கியங்களில் நேர்மாறான கருத்து அர்த்தம் உள்ளது என்று கூட புரியாமல் இருக்கும் சிறுவன். 
    கை-கடிகாரத்தை வண்டாக நினைத்து அதனுள் பாதிரி உயிர் திரும்ப வர வைத்தபோது, தன் 'குட்டி'யே அந்த வண்டின் உருவத்தில் உயிர்த்தெழுந்து வந்ததாக கண்ணீர் வழிந்தான். உண்மையில் லாசரே உயிர்பெற்றான். அந்த 'உயிர்பெறுதல்' புற வயமாக உண்மை இல்லை என்றாலும்,  அதை நம்புவோர் அகத்திற்கு அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அந்த நம்பிக்கை தான் பல உயிர்களை நடத்தி செல்கிறது. ஆனால் உலகத்தில் எல்ல செயலுக்கும் ஒரு விலை உள்ளது போல, அந்த புற வயமான பொய்களால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் வராமலும் இல்லை. 

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.


நிழல்காகம் - கடிதம்

                                                       நிழல்காகம் - கடிதம்
அன்புள்ள ஜெ,

   மூலம் - போலி, உண்மை - நாடகம், shake - drape, பொருள் - நிழல்.
   அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. 'அது' 'தானா'கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.
    இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. 'பொருள் அற்ற ஏற்றல்' - என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
   அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள்  ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று  கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?
    உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக்  கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். 'ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது'. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால்  அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.
   உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் 'இன்பமும், துன்பமும்', 'ஆசையும், கோபமும்' அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய  மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக. மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. 'காமம்-பிரம்மம்', இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது.  'மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல' என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.
       மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. 'அறிதல்' நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 
   

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி




Thursday 25 June 2020

சிறகு - கடிதம்

                                                 சிறகு - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
   வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் 'சிறகு'கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் 'சைக்கிள்' கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
   சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
   அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  'சிறகு' கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் 'patriarchal' சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.
  ஆனந்தவல்லியின் 'சிறகு', சக்குவின் 'சைக்கிள்'.

அன்புடன்,
பிரவின்   

Sunday 21 June 2020

ஆமை - கடிதம்

                                                            ஆமை - கடிதம் 

அன்புள்ள ஜெ,
    தங்களின் 'ஆமை' சிறுகதை வாசித்தேன். இரண்டு parallel கோடுகள் கதையில் உள்ளதாக  உணர்கிறேன். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மற்றும் பனையின் வீழ்ச்சி. இரண்டுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை எனினும், எப்படி பனை மக்களின் ஒரு வாழ்வாதாரமாகவும், எளியோரின் உணவு, உடை, உறைவிடமாகவும் இருந்துள்ளது என்பதை அறிகையில், நாம் இன்று பனையின் மகத்துவத்துவதை அறிய கூட முற்படுவதில்லை என்றே தோன்றுகிறது.
   ஆயிரமாயிரம் கதைகள் வந்தாலும் சிந்திய ரத்தத்தையும், பட்ட வலியையும் எழுதி தீர்த்து விட முடியாது. கதையில் அனக்கன் பாட்டியைப் பற்றியும், அந்த கால கட்டத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்ட விதத்தையும் வாசிக்கையில் புதிதாக படிப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு வலியும், ஒவ்வொரு ஒடுக்கப்படலும் வெவ்வேறே. அதை வெறும் பொதுச் சொல்லோடு குறிப்பிட்டு, அதன் மொத்த எடையையும் அந்த சொல்லிற்குள் புகட்டி விட முடியாது. 
    பனை அன்றைய மக்களின் இன்றியமையாத பொருளாதார பொருளாக இருந்துள்ளது. பனையின் அடி  முதல், நுனி வரை எல்லாவற்றயும் நாம் பயன்படுத்தி உள்ளோம். பனையின் 'கொரம்பை' எப்படி நம் தலைக்கு மேல் கூரையாக இருந்தது, எப்படி அது நம்மை அத்தனை விதமான மழையிலும் (முதல் முறையாக இத்தனை மழையைக் கேள்விப்படுகிறேன்) காத்தது, எப்படி அது நம்மில் ஒரு பிரிவற்ற பொருளாக ஆனது என்பதை அறிய முடிகிறது.  அனக்கன் பாட்டி கொரம்பையிலே வாழ்ந்து, மடிந்தாள். அது அவளின் கூடாகவும், ஆமையின் ஓடாகவும் இருந்தது. அவளுடைய வாழ்நாளே கொரம்பயின் கீழ். அவளின் அனைத்து மனித உணர்வுகளுக்கும் கொரம்பையே சாட்சி. அது அவள் உடலின் ஒரு அங்கம். சாவும் போதும் அதனுடன் செத்தாள். அந்த பனையால் ஆன கொரம்பை இல்லையெனில் அவள் என்றோ மடிந்திருப்பாள். அது தான் அவளை வாழ வைத்தது. 
    இப்பேற்பட்ட பனையை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலர்கள் இருப்பதைக் கண்டு மனம் ஒரு சிறு அமைதி அடைகிறது. கதையில் வரும் ராஜேந்திரனைப் போல பனை மீட்டெடுப்பில் உள்ளவர்களால், அனக்கன் பாட்டி போன்ற எண்ணற்ற மக்களை அவர்கள்  மீட்டெடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பனை தவிர வேறு எதுவும்  முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. அதனாலே பனையின் அடியில் தெய்வங்கள் உள்ளன போலும்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 
    
    

சுக்ரர் - கடிதம்

                                             சுக்ரர் - கடிதம்

அன்புள்ள ஜெ,

      'சுக்ரர்' சிறுகதையில் வரும் 'அரிகிருஷ்ணன்' போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
    அரிகிருஷ்ணன் சொல்வது போல "அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்." , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
    உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், "நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்" என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
    கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் "தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?" என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 

Friday 12 June 2020

லட்சுமியும் பார்வதியும் - கடிதம்

                                                       

            லட்சுமியும் பார்வதியும் - கடிதம் 



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

         'லட்சுமியும் பார்வதியும்' சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக  ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.

        மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன்  போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி. 

       ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடம் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.

அன்புடன்,
பிரவின் 
தர்மபுரி  

Sunday 24 May 2020

தேனீ - கடிதம்

                                                            தேனீ - கடிதம்

    நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். "எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்."  என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
   
   தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த 'திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை' அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

   பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன  சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

   மிகப்பெரும் தவங்கள் கிட்டிய  பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்த சிதைவின்  தொடக்கமே மரணமாக முடிகிறது.

 
   

Wednesday 20 May 2020

முதுநாவல் - கடிதம்

                                                  முதுநாவல் - கடிதம்

   'முதுநாவல்' சிறுகதையில் வரும் இடும்பன் நாராயணனும், தலைக்கெட்டு காதரும் ஓர் மனம் கொண்ட இரண்டு உடல்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருவருக்கும் வித்தியாசமே இல்லை. உலகுக்கு ஒருவன் ரவுடி, இன்னொருவன் போலீஸ். ஆனால், அவர்கள் ஒரே ஒருவர் தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போர் புரிந்திருந்த போது தான் அதை தாங்களே உணர்திருப்பர்.

   இடும்பன், காதர், இருவரின் வாழ்க்கை சித்தரிப்புகள் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் ஊடாக அவர்கள் புரிந்த சண்டையை பார்க்க முடிகிறது. 'தான்' என்ற மனநிலை கொண்ட இருவரும், அயராது சண்டை செய்யும் போது, அது அவ்விருவரிடமிருந்தும் விலகுகிறது. பாறசாலை சந்தையில் நடந்த அந்த கடும் போரில், அவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு அதனை கண்டடைந்தனர். இரு பெரும் மலைகளின் போர் போல் இருந்தது அவர்களின் யுத்தம்.

   போரின் உக்கிரதைப் பாடும் 'தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்' சந்தைப்பாடல்  உண்மையில் புலிக்கும், கழுதைப்புலிக்கும் நடக்கும் யுத்தம் போன்றே உள்ளன. இங்கே அவர்கள் 'அடியடி' என அடித்துக் கொண்டும், சமயங்களில் இருவரும் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும், ஆயுதங்களை இருவரும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தாமல் இருந்ததும் வியப்பாகவே இருந்தது. அவர்கள் போரிட்டது தங்களுக்காக, வேறு யாருக்காகவும் இல்லை. இதில் வெல்வதும், வீழ்வதும் அவர்களுக்கு சமமே.

   இருவரும் ஓயாமல் அடித்துக் கொண்டு அந்த முதுநாவல் மரத்தடியில் வந்தமர்ந்த போது, முதியவன் ஒருவனிடம் நீர் வாங்கி இடும்பன் குடித்து பிறகு காதருக்கு கொடுத்ததும், காதரை இடும்பன் கட்டி இழுத்து வர ஊர்மக்கள் அவன் மேல் எச்சில் துப்பியதைக் கண்டு இடும்பன் கோபம் கொண்டதும், இருவரும் மற்றோரின் மேல் தாங்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டுவதாக உள்ளது. இது, உண்மையில் இவர்கள் இருவரும் தான் மூடர்களா அல்லது சுற்றிக் கூடி இச்சண்டையை வேடிக்கைப் பார்த்த மக்கள் தான் மூடர்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

   சண்டை முடிந்து, காதர் ஜெயிலிலும், இடும்பன் மலையிலும் வாழ்ந்த போதும், அவர்கள் இருவரும் அந்தச் சண்டைக்குப் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பேச நினைத்த அத்தனை வார்த்தைகளும், அவர்களின் 'அடியடி'களே பேசி ஓய்ந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு பேச ஒன்றுமே இல்லை. அவர்களின் மனம் அந்த போரினால் ஆழ்ந்த அமைதி அடைந்தது. இடும்பன் ஊமைச்சாமி ஆனதும், காதர் அந்த முதுநாவல் மரத்தடியில் சூஃபி ஆனதும் மனித மனங்களின்  இரு எதிர் எல்லைகளின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு  எல்லையிலிருந்து மற்றோரு எல்லைக்கு செல்ல, ஒரு வினாடியும் ஆகலாம், அல்லது ஒரு வாழ்க்கை முழுதாக வாழ்ந்தாலும் முடியாமலும் போகலாம்.

   இம்மாதிரியான மனித மனங்களின் போர்களை அந்த முதுநாவல் மரம் காலந்தொட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. போர்களின் முறையில் மாற்றம் வந்தாலும், போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த முதுநாவல் மரத்தடியில் இருவருக்கும் நீர் தந்த அந்த வயதானவருக்கும் அந்த முதுநாவல் மரத்திற்கும் வேறுபாடே இல்லை. அது  நிழல் தந்தது, அவர் நீர் தந்தார், போருக்கு. அல்லது போர் முடிவிற்கு!

Monday 18 May 2020

பிறசண்டு - கடிதம்

                                                 பிறசண்டு - கடிதம்

அன்புள்ள ஜெ,

   இரண்டு எதிரெதிர் துருவங்களாக 'பாட்டா'வும், 'கள்ள'னும் உள்ளார்கள். வாழ்வில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று 'இறகு' போல மனம் கொண்டவன் கள்ளன். இப்படித்தான் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வாழ்பவர் 'பாட்டா'. அப்படி  அவர் இருந்ததனாலேயே அவர் 4 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டியது ஆனது.
   கள்ளனோ திருட வந்த இடத்தில அமைதியாக குத்திட்டு ஒக்காந்து யோசித்ததை,  பாட்டாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை பொறுத்த வரையில் திருடன் என்பவன் அவசரத்திலும், பொறுமையின்மையிலும் செயல்படுபவன். அதனாலே அவன் திருடத்தான் வந்திருக்கான் என்று அவருக்கு தெரியவில்லை. மாறாக, கள்ளனோ அமைதியாக வந்து, அமைதியாக திருடி, அமைதியாக சென்றான்.
   சிரோமணி பாட்டா, தன்னைப்பற்றி மட்டுமே யோசித்து வாழ்வில் நன்றாக படித்து, அரசாங்க வேலைக்குப்போய்  கௌரவமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்ததால், அவர் ஒரு கடிவாளம் போட்ட குதிரை போல ஆனார். உலகின் நல்லது/கெட்டதுகளின் பிரித்தறியும் பக்குவம் அவருக்கு கிட்டவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முந்தைய தலைமுறையிலேயே பலபேர் இப்படித்தான் இருப்பார்கள். குறிப்பாக, குடும்பத்தில் முதல் பட்டதாரிகள். இவர்கள் தங்கள் ஊரையும் உடமைகளையும்  விட்டு வேறு எங்கோ சென்று படிப்பது, மிகப்பெரும் சவால். அவர்களால் தங்களின் இயல்பை விட்டு சமரசம் செய்து கொண்டு புதிய ஊர்களில் வாழசிரமப்படுவார்கள். அதனாலேயே அவர்கள் மிகவும் தனிமையாகிறார்கள். தனிமை ஆன பின்பு அவர்களுக்கு தெரிந்தது படித்து முன்னேறுவது மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவரகத் தான் சிரோமணி பாட்டாவை என்னால் பார்க்க முடிகிறது. 
   வீட்டில் உள்ளவர்களால் இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அவர்களின் உலகம் வேறு. உலகத்தின் நிகழ்வுகள் வேறு. கள்ளன், தன்னைக் காட்டிக் கொடுக்க கூடாது என்று தன்னுடன் சொல்லும் போது கூட, அவர் அவனிடம் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார்.  
வீட்டில்  கிடைக்காத உறவின் உரையாடல்கள் அவருக்கு அந்த கள்ளனிடம் கிடைத்தது. அதனாலோ என்னவோ அவன் விடைபெறும் முன், 'அடிக்கடி வீட்டிற்கு வாடே' என்று சொல்லி அனுப்பினார். 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 

Thursday 14 May 2020

லீலை, நஞ்சு - கடிதம்

                                                            லீலை, நஞ்சு - கடிதம்

அன்புள்ள ஜெ,

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், 'நஞ்சு'வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, 'நஞ்சு'விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் 'நஞ்சு'வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

'நஞ்சு' காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

 

சீட்டு - என் பார்வை

                                                                       சீட்டு - என் பார்வை


சீட்டு சிறுகதையை வாசிக்க கீழே உள்ள சுட்டியை தட்டவும். 
https://www.jeyamohan.in/131253/#.XrYh8RMzafU

பெண்-ஆண் உறவுகளின் சமரசங்களை உள்ளடக்கிய கதை. மனிதனுக்கு உணவும், உறக்கமும் நன்றாக கிடைத்த பின் அவன்/அவள் ஏங்குவது இந்த உறவுக்காகத்தான். இச்சிறுகதை  இரு அம்சங்களை மேலே தொட்டு அதன் ஊடே ஒரு பெரிய கலந்துரையாடலை தன்னுள் நிகழ்த்த இட்டுச் செல்கிறது.

உமையாளுக்கும் அழகப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அலுவலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அதை தாங்களே பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்கும் அது மனதிலே இருந்தது. கிட்டத்தட்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது நிச்சயம். இந்த மாத சீட்டுப் பணத்தை உமையாள் எடுக்க வேண்டும் என்று நினைத்தாள். அழகப்பனோ நாராயணன் அதை எடுக்க போவதாக சொன்னான். ஒருவேளை சீட்டு ஏலத்தில், அவர் ரொம்ப கீழே இறங்கி கேட்டால் உமையாளுக்கு நஷ்டம்.

அழகப்பன் தன்னுடைய உயரதிகாரியை சந்தித்துவிட்டு வரும் வழியில் உமையாளும், நாராயணனும் சிறிது பேசிக் கொண்டு இருப்பதைப்  பார்த்து ஒரு விதமான மனச்சோர்வும், ஒவ்வாமையும் அடைகிறான். அது அவனை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு உலுக்கு உலுக்கியது. அவன் மனம் அந்த காட்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. உமையாள் அவனைத்தேடி அவன் வீட்டு வந்ததும், அவளுடன் அவன் உடல் ரீதியாக மிகவும் நெருக்கம் அடைந்த பின்னரே அவனால் சற்று நிம்மதி அடைய முடிந்தது.

சீட்டு பணம் தன் அண்ணண் மனைவியின் அப்பாவின் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்டதால் தான் இந்த மாதமே எடுக்க நினைத்தாள். ஆனால் அவள் அம்மா, தன மருமகளின் சகோதரர்கள் தான்  அவர்கள் அப்பாவுக்கு செலவு செய்ய வேண்டும், நாம் எதற்கு செல்வு செய்யணும் என்று சொன்னனதால், அந்த சீட்டு பணத்தை ராமச்சந்திரன் எடுப்பதாக முடிவாகியது.  அழகப்பனின் குடும்பத்திற்கு வேண்டியப்பட்டவர் ஒருவருக்கு  அவசரமாக பணம் தேவைபட்டதால் அவனின் அம்மா அதை உமையாளிடம் கேட்கச் சொல்லி அவனிடம் சொன்னாள். அவன் அதை உமையாளிடம் கேட்கும் போது, அவள் ராமச்சந்திரனிடம் சொல்லி விட்டதாக சொன்னதரற்கு, அவன் அவளை அவனிடம் 'நைசாக' பேசி சீட்டை தனக்கு விட்டுத்தரும்படி சொல்லச் சொன்னான்.

இங்கே இரு நுட்பமான ஆழமான மனித உறவுகளின் சமரசங்களை காண முடிகிறது. அவள் இன்னொருவரிடம் குழைந்து பேசுவதனால் மிகவும் ஒவ்வாமை கொண்ட அவன், இறுதியில் அவனே அவளிடம் அதை செய்யச் சொல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் மனித மனம் எல்லா  தருணங்களிலும் வெவ்வேறு வகையாக செயல்படுவதை காணலாம். அவன் முதலில் மனம் சோர்ந்தது, அவன் அவள் மேல் கொண்ட ஒரு வகை obsession என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கு அவள் தனக்கு கிடைக்காமலே போய் விடுவாளோ என்ற பயமும், தன்னால் அவளை கவரவே முடியாதோ என்ற அவநம்பிக்கையினாலே அவனால் நிம்மதி கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உடலால் மிகவும் நெருங்கியபின் அவனுக்கு அது ஒரு மிக பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. அவன் அவளை அவன் ஆட்கொள்ளும் ஒரு பொருளாகவே அவனால் உணர முடிந்தது.

எல்லா உறவுகளுக்கும் ஒரு சாமரம் இங்கே தேவை படுகிறது. முக்கியமாக ஆண் - பெண் உறவிற்கு. அவள் தனக்கு வேண்டிய காரியத்தை நைசாக சாதித்து கொள்ள நினைப்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என அவளை நினைக்க வைத்தது ஒரு சமூகத்தின் செயலே. அது மட்டும் தான் வழி என்று அவள் நினைப்பதும் ஒரு சமூக அவலச் சித்திரமே. அந்த சமரசத்தோடே நாம் வாழ கற்றுக் கொண்டு விடுகிறோம். நாட்கள் செல்ல செல்ல அது ஒரு சமரசம் இல்லை, அது தான் வாழ்க்கை முறை என்றும் நமக்கு பழகி விடுகிறது.

தன் அப்பாவிற்கு மகன் தான் செலவு செய்யணும், மகள் வீட்டார் செலவு செய்ய கூடாது என்று சொல்லும் ஒரு அம்மா.  தன்  குடும்ப கஷடத்துக்காக மருமகளிடம் பணம் கேட்டு பாரு என்று இன்னொரு அம்மா. இவர்கள் இருவருக்கும் இடையில் தான் இந்த சமூகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை வெறும் குடும்பச் சிக்கலாக இல்லாமல் ஒரு சமூக சிக்கலாகவே எனக்குப் படுகிறது.

சற்றே யோசித்தால், இந்தக் குடும்ப அமைப்பில் தான் நாம் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு வேலை இந்த அமைப்பு தான் மனிதன் தானே அமைத்துக் கொண்ட ஒரு உச்ச நிலையான அமைப்பு. இதில் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள் இருந்தாலும்  இந்த குடும்ப சமரசத்தில் தான் மனிதன் ஒரு வகையாக நிம்மதியாக வாழ முடிகிறதோ!

அன்புடன்,
பிரவின்