Tuesday 2 January 2024

கிளிக்கோயில்

                                                             

கோபுரத்தை பார்த்தவுடன் கண்ணில் பட்டது கிளிகள் தான். என்னடா இந்த கோபுரத்தில் இவ்வளவு கிளிகள் உள்ளது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஐந்து அடுக்கு மாடம் கொண்ட கோபுரமாக இருந்தது. உள்ளே நுழையும் போதே கோவிலின் உள்ளே மரத்தில் கிளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கிளிக் கூட்டமே அந்த கோபுரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. சிற்பக் கிளிகளையும், பறக்கும் கிளைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தேன்.



கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ளது சோமேஸ்வரர் கோவில். அதனுடைய கூகுள் இணைப்பு https://maps.app.goo.gl/jfkYA1qqB2wAbSCy6. சோழர்களால் முதலில் கட்டப்பெற்ற இக்கோவில் பின்பு விஜயநகர அரசர்களால் விரிவாக்கம் செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கி உள்ளது இக்கோவில். சிற்பக்கலையில் விஜயநகர அரசர்களின் பெரும் பங்கு என்று கூறப்படுவது, அவர்கள் காலத்தில் தான் கோவிலினுள் அம்மனுக்கென்று தனி சந்நிதியும் (பிரதான கடவுளின் துணைத் தெய்வமாகவே எழுப்பப்படும். கருவறைக்கு வலது புறத்தில் இருக்கும் ), கல்யாண மண்டபமும் (கோவிலின் தென் மேற்கில்) வடிக்கப்பட்டது.  

கோவில் கோபுரங்களில் கிளிகளின் சிற்பங்களை காணலாம். கோவிலின் முக மண்டபத்தின் எதிரில் நந்தி உள்ளது. முக மண்டபத்தின் தூண்களில் உள்ள சிற்பங்கள் வெயிலில் பட்டு பொன்னால் செய்யப்பட்டவை போல காட்சியளித்தன. பொன் நகரத்தில் ஒரு பொற் கோவில். 



முக மண்டபத்தின் நுழைவாயிலிலும், உள்ளே செல்லும் வழியிலும்,  முக மண்டபத்தின் சுற்று தூண்களிலும்  அணி ஒட்டிய ஸ்தம்பம் முறையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் புராணக் காட்சிகளும், மிதுன சிற்பங்களும், கடவுளர்களும், போர் காட்சிகளும், முனிவர்களும், பாம்பாட்டி சிற்பம் போன்ற வட்டார நாட்டார் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.  பொதுவாக நாங்கள் கோவில்களுக்கு சிற்பங்களை காண செல்லும் போது, இந்த கோவிலில் ஏதேனும் புதுமையான சிற்பம் உள்ளதா என்று பார்ப்போம். அது நாங்கள் இது வரை வேறு எந்த கோவிலிலும் பார்க்காத சிற்பமாக இருக்கலாம். அப்படி என் கண்ணில் புதுமையாக பட்டவை.

    1. சிங்கம் ஒரு போர் வீரனை முழுவதுமாக தலையை கடிப்பது.

    2. வேட்டுவன் ஒரு விலங்கினை தோல் மேல் வைத்திருக்கும் சிற்பம்.  

    3. இரண்டு குரங்குகள் ஒன்றை ஒன்று தலை கீழாக பிடித்து நடனம் ஆடுவது போன்ற சிற்பம்



முக மண்டபத்தின் உள்ளே அர்த்த மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயரின் சிற்பம் மிகவும் அற்புதமாக உள்ளது.



பிரதான கோவிலின் வெளியே கருவறைக்கு வடக்கே, பார்வதி மண்டபம் உள்ளது. இங்கிருக்கும் அர்த்த மண்டப நுழைவாயிலிலும், உள்ளேயும் தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

இக்கோவிலின் தனி சிறப்பே தென் மேற்கு பகுதியில் உள்ள கல்யாண மண்டபமாகும். அதனை சுற்றி உள்ளே போக கூடாதென்று கயிறு கட்டி வைத்திருந்தனர். வெளியில் நின்று மட்டுமே பார்க்க முடிந்தது. மண்டபத்தின் சுற்றுப்புற தூண்களில் சிற்பங்கள் உள்ளது. ஆனால் நம்மை ஆட்கொள்ள வைப்பது உள்ளே க்ரானைட் கரற்களால் செதுக்கப்பட்ட உள் மண்டபமாகும். ஒரு இடத்தில கூட சிற்பியின் உளி படாத இடமே இருக்காது. அனைத்தும் சிற்பமே. மிகவும் நுண்ணிய அளவு சிற்பங்கள் முழுமையாகவே உள்ளன. மூன்று  cmக்கும் குறைவாக கொண்ட முழு யானை சிற்பத்தை பார்க்க முடியும். திடீரென்று பார்த்தால் ஒரு நகை கடையில் உள்ளோமோ என்றே தோன்ற வைக்கும் அளவுக்கு அவ்வளவு நுண் வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் உள்ளன. உள் மண்டபத்தின் மேல் வரிகளில் ஒன்றில்  நான்கு பக்கமும் வரிசையாக கிளிகள் உள்ளன. நான்கு பக்கமும் அணி ஒட்டிய தூண்களுடன், அலங்கார போத்திகை உள்ளது. தூண்களில் சிற்பங்களில் கூட கூர்ந்து பார்த்தால் நிறைய இடத்தில கிளிகள் செதுக்கப்பட்டுள்ளது தெரியும். 





பிரதான கருவறையின் விமானத்தில் தெற்குப்புறமும், மேற்குப்புறமும் பிச்சாடனர், விஷ்ணு, சூரியன் ஆகிய சிற்பங்கள் உள்ளது. வெயிலில் பட்டு இவை போன் நிறத்தில் காட்சியளித்தன. வடக்கில் மூன்று இடங்களிலும் பிரம்மா செதுக்கப்பட்டுள்ளது.

உள்ளே முக மண்டபத்தின் உயரிய மேடைகளில் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தோம். சிற்பங்களை அமர்ந்து பொறுமையாக பார்ப்பதுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே இரண்டு குரங்குகள் தலை கீழாக பிடித்து விளையாடிகே கொண்டிருந்தன. 

கோவிலினை சுற்றி இருக்கும் ஆதிஷ்டானத்தின் குமுதப் பகுதியில், யானைகளின் வரிசையும், பூத கணங்கழும், சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.