Saturday 19 June 2021

பச்சோந்தி - அந்தோன் செகாவ்

             "அந்தோன் செகாவ்" அவர்களின்  "சிறுகதைகளும் குறுநாவல்களும்" தொகுதியில் உள்ள "பச்சோந்தி" சிறுகதை வாசித்தேன். கதை முழுவதும் சிரித்துக் கொண்டே வாசிக்க வாய்த்த சிறுகதை. வாசித்து முடித்த பிறகு ஒரு எதார்த்தத்தின் அவலை நிலையை, அடிமை மனதின் ஊசலாட்டங்களை அற்புதமாய் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார் செகாவ் என்று புரிந்தது.

            ஒரு சிறு நகர சந்தையில், ஒரு தொழிலாளியின் சுண்டு விரலை ஒரு சிறு நாய் கடித்து விடுகிறது. அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரும் ஒரு கான்ஸ்டபிளும் மக்கள்  கூட்டமாக இருப்பதைப்  பார்த்து அங்கு வருகிறார்கள். கடி வாங்கியவன் அந்த இன்ஸ்பெக்டரிடம் இந்த தெரு நாய் தன்னை கடித்து விட்டது என்று சொல்லி அதை பிடித்து வைத்திருந்தான். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், அந்த நாயைக் கொல்ல வேண்டும் என்றும், அவனுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

            தீடிரென்று கூட்டத்தில் ஒருவன் அந்த நாயினை ஜெனரல் வீட்டில் பார்த்ததாகச்  சொன்னான். தன் உயரதிகாரியின் நாயாய் இருக்கும் என்று நினைத்து, அந்த இன்ஸ்பெக்டர் சட்டென்று மாறி அந்த கடி பட்டவனை கடுமையாக திட்டினார். நாய் தானாக கடிக்காது, நீ தான் அதனிடம் ஏதோ செய்திருக்கிறாய் என்றும் கூறினார். மறுபடியும் இன்னொருவன் அந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்று சொல்கிறான். மறுபடியும் அந்த இன்ஸ்பெக்டர் அந்த தொழிலாளியை சமாதானம் செய்கிறார்.

            அப்பொழுது அங்கு வரும் ஜெனரல் வீட்டின் சமையற்காரன்  இந்த நாய் ஜெனெரலுடையது இல்லை என்றும் ஆனால் இது ஜெனரல் தம்பியடையது  என்றும் கூறுகிறான். இதனைக்  கேட்டு அதிர்ந்த இன்ஸ்பெக்டர்,  தன் கான்ஸ்டபிளிடம் அந்த நாயினை அதன் உரிமையாளரிடம் கொண்டு ஒப்படைக்கச்  சொல்லிவிட்டு, கடி வாங்கியவனை கடுமையாக வசை பாடுகிறார். குற்றம் புரிந்தது அவன் தான் என்றும், அவன்தான்  நாயின் வாயில் பட்டாசு வைத்து விளையாடி துன்புறுத்தினான் என்றும்  அவனை விளாசுகிறார்.

            கதையில் ஒவ்வொரு முறை இன்ஸ்பெக்டர் தன்  நிலையினை மாற்றிக் கொள்ளும் போதும், அதை தான் நம்பும் பொருட்டோ அல்லது மக்கள் அதனை நம்பும் பொருட்டோ அவர் தன் "மேல் கோட்டினை கலட்டியோ அல்லது திரும்பவும் போட்டோ" அதைச் சொல்கிறார். இரு முரண்பட்ட வாக்கியங்கள் அடுத்தடுத்து வரும் போது, அதற்கான காரணமாக இருப்பது அங்கு நிலவும் அதீத வெப்பமாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் என்று தன் இயலாமையை வெப்ப மாறுதலின் மேல் ஏற்றுகிறார். தான் செய்யும் தவறுக்கு ஏதாவொதொரு காரணம் இருக்கும் அல்லவே. காரணம் கண்டுபிடிப்பது தானே மனிதனின் வேலை.

            இக்கதை எழுதி 125 வருடங்களுக்கு மேல்  ஆனாலும், இன்றும் இது பல இடங்களில் மிகவும் பொருத்தமாகவே அமைகிறது. "அமைப்பு சார்ந்த" அத்தனை தொழிலும் இதனை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க எவ்வளவு தன்மானம் இல்லாத காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. இது காலப் போக்கில் பழகியும் போய்விட்டது. அதுவும் அடிமைப்பட்டு மீண்ட நாடுகளில், மக்களின் DNAவில் இது என்றோ கலந்துவிட்டது. இது மற்ற அடிமை முறைக்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது என்றே நினைக்கிறேன்.

            மற்ற அடிமை முறைகள் பொதுவாக வெளிப்படையானவை. ஆனால் இது வெளிப்படைத்தன்மை அற்றவை. ஒரு எழுதப்படாத ஆணை. ஆனால் ஏட்டில் எழுதிய சட்டங்களை மீறுவோர்களை விட இந்த எழுதாத சட்டங்களை மீறுவோர் மிகக்குறைவே. தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், தன் ஓய்வு வரை இதை செய்வோரின் மன நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஏன் இவ்வாறு நடைபெறுகிறது? இங்கு நிலவும் மற்ற அடிமை முறைகளின் தாக்கம், வேலையின்மை, தாழ்வு மனப்பான்மை, குடும்பச்சுமை போன்ற எத்தனையோ காரணங்கள் உள்ளன. 

            இந்த நிலையை "அமைப்பு சாரா" தொழிலில் காண்பது குறைவு என்றே நினைக்கிறேன். அங்கு ஒரு வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை என்று போய் விடுகிறார்கள். ஆனால் அங்கும் இது முழுமையாக இல்லை என்று சொல்லி விட முடியாது.

            இந்நிலை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து வருகிறது என்றே நினைக்கிறேன். சமூக மாற்றம், கல்வி, தாராளமயமாக்குதல் போன்றவை சென்ற கால் நூற்றாண்டுகளாக மாற்றத்தை  ஏற்பட்டுள்ளது. இவற்றால் வேறு பிரச்சனைகள் இருந்தாலும், "அதிகார அடுக்கு" அடிமை முறையின் அளவு குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது.

Friday 18 June 2021

ஊழல் - கடிதம்

                                                    ஊழல் - கடிதம் 

அன்புள்ள ஜெயமோகன், 

    தங்களின் 'ராஜாம்பாள்' கட்டுரை வாசித்தேன். ஆங்கிலேயே ஆட்சியில் இருந்த ஊழல் பிரமிக்க வைக்கிறது. ஒரு சொற்பொழிவிலும் நீங்கள் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். தாங்கள் நாடாள ஊழலினை பெரிதும் ஊக்குவித்து வந்திருக்கின்றனர் ஆங்கிலேயர்கள். அதனை இங்குள்ள மேட்டிமை வர்கத்தினர் மிகவும் பயன்படுத்தி உள்ளனர்.

    கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, இவ்வகையான ஊழலின் மேல் எந்தஒரு குற்ற உணர்வே இல்லாத ஒரு சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். அல்லது அதனை எதிர்க்கவோ யாரும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஊழலும் ஒரு படிமமாக  மாறியதோ என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு சமூகத்தில் ஒரு விஷயம் படிமமாக மாறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றே நினைக்கிறேன். அது எதுவாயினும். அது மக்களின் அன்றாடத்தில் ஆழமாக சென்று விட்டு படிமமாகிறது. நாம் இன்று கொண்டாடும் பல்வேறு நல்ல விஷயங்களும் சரி, தெய்வங்களும் சரி படிமமாகவோ ஆழ்படிமமாகவோ மாறியே இன்று நம்மிடம் இருக்கிறது.

    அப்படி இருக்க 'ஊழல்' என்ற படிமத்தை உடைக்க அதை நம் அன்றாடங்களில் இருந்து நீக்க வேண்டும். மக்களிடம் குற்ற உணர்வு இல்லாத வரையில் அது அப்படியே தான் இருக்கும். இன்றும் நாம் அப்படியே தான் வாழ்கிறோம். ஆனால் இன்று அதை விட ஒரு படி கீழே போய், ஊழல் செய்த அதிகாரியோ/அரசியல்வாதியோ கைதான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நாம், ஓட்டுக்கு காசு கொடுத்தால்  வரிசையில் நிற்கிறோம். இது என்றுமுள்ள மனநிலையே ஆனாலும், 'ஊழல்' படிமத்தில் இருந்து 'ஆழ்படிமமாக' மாற இது வழி வகுக்கும்.

    இதனை எப்போதும் ஒரு அசட்டு விவாதமாக, "அவன் கொடுக்கிறான், நான் வாங்குறேன்", "ஊரு உலகத்துல நடக்காததா", என்று நம்மிடம் 'ஊழல்' மீது வரும் குற்ற உணர்வை திசை திருப்பி நமக்கு நாமே ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறோம். இது மிகவும் அபாயகரமானது. 'மேலும் கீழும்', 'கீழும் மேலும்'  காரணம் சொல்லி இத்தீயை நாம் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

    நான் பலமுறை யோசிப்பது உண்டு. ஏன் இப்படி களை மட்டும் இவ்வளவு வேகமாக பரவி விடுகிறது என்று. அது பார்த்தீனியம் போன்ற பூண்டானாளும் சரி. அதன் வீரியம் பயனுள்ள/அறமுள்ளவற்றை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. அல்லது உலகில் மனிதன் பயன் கொள்ளும் செயல்கள் மிகவும் சொற்பமானவையே. அதனால் தான் அவன் சாதாரணமாக அறமில்லாவற்றை நாடிவிடுகிறானோ என்னவோ. 

    இவ்வளவும் இருக்க அன்பும், அறமும் இல்லாமல் இருந்தால் எதுவுமே நிலைத்திருக்காது. அப்படி நிலைத்திருந்தாலும் பொருளற்று இருக்கும். அப்பொருளின் மதிப்பினாலேயே அறம் என்றும் நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் அறமுள்ளோர் இருப்பதாலே ஒரு சமன் நிலை ஏற்படுகிறது. தங்களின் 'அறம்' சிறுகதை தொகுப்பில் போன்றோர்கள் இருப்பதால்தான் நம்மில் அந்த நம்பிக்கை என்றும் அணையாமல் உள்ளது. அவர்களைப் போலும் அவர்கள் செய்த செயலைப் போலும் நாம் நம் சமூகத்தில், அதனை என்று ஒரு ஆழ்படிமமாக மாற்றுவோமோ அன்று அறம் உச்சத்தில் நிலைத்து நிற்கும்.

    'தஸ்தயேவ்ஸ்கி'யின் 'கேலிக்குரிய மனிதனின் கனவு' சிறுகதையில் வருவது போல, அவன் ஒரு புதிய உலகிற்கு போய் அங்குள்ளவர்களை(அறமோடு வாழ்ந்தவர்களை) மாற்றி அனைத்து குற்றமும் செய்ய வைக்கிறான். ஏனோ அவர்கள் தாங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதனை ஏற்காமலும், அதனை கேலிசெய்தும் வாழ்கின்றனர். எதுவானாலும் அது படிமமாக மாறினால் சமூகத்தில் வேரூன்றி கிளைவிட்டு விடுகிறது. அதனை அன்பினால் மட்டுமே சமன் செய்ய முடியும்.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி 

அவரவர் வழி - நடன மங்கை சிறுகதை தொகுப்புகள்

                                                            அவரவர் வழி - நடன மங்கை சிறுகதை தொகுப்புகள் 

    'சுரேஷ்குமார் இந்திரஜித்' அவர்களின் 'அவரவர் வழி' மற்றும்  'நடன மங்கை' ஆகிய சிறுகதை தொகுப்புகளை வாசித்தேன். கதைகள் அத்தனையும் யதார்த்தங்களின் சித்தரிப்பில் மனித மனங்களையும் செயல்களையும் வலைப்பின்னல்களாக மோதவிட்டுள்ளார். 

    "அவன் மன உலைச்சல் வரும் போதெல்லாம் கோயில் பிரகாரத்தில் காராசேவ் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்", இதை வாசித்துவிட்டு ஒரு நாள் பூராவும் அதை கற்பனை செய்து சிரித்துக்கொண்டிருந்தேன். தன் இன்பத்தினை அடுத்தவர் கைகளில் பார்க்கும் எளிய மனிதர்களின் கதை. எப்பொழுதும், கிடைக்காத நன்மைக்காக புலம்பி காலம் தள்ளும் சாமானியர்கள். ஒருவேளை கிடைத்திருந்தால் ஏற்படும் தீமையை நாம் என்றும் நினைக்க மாட்டோம். நமக்கு வேண்டியதெல்லாம் 'புலம்பல்'.

    ஒரு நடிகை காரைக்கால் அம்மையாரைப்பற்றி அறிந்ததுமே, தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். அந்த நடிகையின் மகளும், எதோ ஒரு பயணத்தில் தன் கார் டிரைவர் சொல்லிய சிறு தத்துவத்தைக் கேட்டு தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறார். இந்த டிரைவரின் அப்பா தான், தன்  அம்மாவின் வாழ்க்கையை மாற்றியது என்பது மகளுக்கு தெரியாது. தற்செயல்களின் ஊடாட்டம். 'புதிர் வழிப் பயணம்' கதையிலும், இந்த தற்செயலின் பின்னலைப் பார்க்கலாம்.

    ஆசைக்கும், பேராசைக்கும் சடங்குக்கும், நம்பிக்கைக்குமான முடிச்சி 'பங்குப்பணம்'. ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத குற்றவாளிகளை தன், 'படைப்பும் குழந்தையும்' உரையில் அனைவரையும் ஒரு சரடில் கோர்த்து எடுக்கும் விதம் அருமை. அவர்களின் இளமையின் ஏதோ ஒரு செயலின் நீட்சியே அவர்களின் குற்றப்பின்னணி.  

    ஒரு சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைத்து காரணங்களும், அந்த சம்பவத்தை வேறு விதமாக மாற்றிவிடுகிறது. 'சம்பவத்தை' ஒரு தனிப்பட்ட செயலாகப் பார்க்காமல், அது முளைத்த வேர் வரை சென்று தேடி, வேருக்கு போகும் வழியில் உள்ள கிளைகளையும் ஆராய்வது பெரும்பான்மையான கதைகளில் உள்ளது. சில இடங்களில் வேருக்கும் பூவுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அதை ஆராய்தல் மட்டுமே நம் வேலை.

    ஒரு காரில் பயணம் செய்யும் ஐந்து நபர்கள் கார் ஓட்டுபவரை குறை கூறிக்கொண்டே உள்ளனர். அவர் காரை ஒழுங்காக ஒட்டவில்லை என்று நினைக்கின்றனர். அதற்கு அவரின் மேல் உள்ள வெறுப்பே காரணமாக உள்ளது. அவருக்கும் மிகுந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. காரில் உள்ள அனைவரும் ஒரு எதிர்மறை எண்ணத்திடனும் பயத்துடனும்  உள்ளனர். திடீரென்று கார் ஒரு குலுங்கு குலுங்குகிறது. முன்சீட்டில் உள்ள தனது மகள் காரை நிறுத்தச் சொல்லி அவளே காரை ஓட்டத் தொடங்குகிறாள். அனைவரும் பெருமூச்சு விட்டு அமைதியடைகின்றனர். மிகவும் தீர்க்க முடியாத சிக்கலான முடிச்சுகளுக்கு ஏதோ ஒரு சிறிய அவிழ்ப்பே உதவுகிறது. அந்த அவிழ்ப்பு ஒரு எதிர்பாராத தற்செயலாகவே பெரும்பாலும் உள்ளது.

    மனதின் கற்பனைகளுக்கு தூல வடிவம் கொடுத்து, அதை அனுபவிப்பதே ஒரு இனிய இன்பம். பெரும்பான்மையான மக்கள் அதையே தன் வாழ்நாள் முழுக்க செய்து கொண்டுள்ளனர். கடைத்தெருவில் பார்த்த பெண்ணிடம் ஒரு நிமிடம் கற்பனையில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் ஏராளம். சிறு சிறு இன்பங்களில் தன்னை போர்த்திக் கொண்டு சதா கற்பனை உலகத்தில் திளைப்பது சாமானியருக்கு தன் அகப் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு வழியாக உள்ளது. 'நடன மங்கை' , 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து..' போன்ற கதைகள் அந்த அழியாத ஏக்கத்தினை சொல்கிறது.

    சில கதைகளில் பெரியாரின் தாக்கங்கள் உள்ளன. முக்கியமாக பெண் திருமணம், மறுமணம்  விஷயங்களில். தன் சிறுவயது விதவை மகளுக்கு மறுமணம் செய்ய பெரியாரின் வார்த்தைகள் உதவி செய்கின்றன.  பழைய தேவையற்ற ஆசாரங்களை உதறி மேலெழ கால மாற்றத்தை கொண்டுசெல்ல தந்தையின் அன்பும் பெரியாரின் சொல்லும் கைகோர்த்து உதவி செய்கின்றன. அறிவால் முன்னகர்ந்து சென்றாலும் சில நேரங்களில் பழைய வடுக்களில் மனம் சிக்கித் தவிக்கிறது. 

    ஈழப்போர் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம், 'அனுமன்' வந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்களின் விவாதங்களைக் கண்டு மிரண்டுபோகிரதைப் படிக்கும் போது புன்னகையும் வேதனையும் வருகிறது . எந்த ஒரு அரசியல் கருத்தும் வன்முறையிலேயே பெரும்பாலும் எதிர்கொள்ளப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை. 

    நில உச்சவரம்பு சட்டத்தால் ஏற்பட்ட நன்மைகள் இருந்தாலும், நிலமிழந்தோருக்கு ஏற்பட்ட அநீதியும் இக்கதைத் தொகுப்பில் உள்ளது. நிலம் உழுதோர் நிலம் உடையார் ஆன பிறகு, நிலமிழந்தோரை தங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் செல்வ உயர்வும் சமூக உயர்வும் ஏறும் போது, நிலமிழந்தோர் இகழ்ந்து நகையாடப்படுகின்றனர். அவர்களின் எதிர்பாராத வீழ்ச்சியினால் உறவுகளை இழந்தனர். தற்கொலையிலும் தங்களை முடித்துக்கொண்டனர்.  

    மனிதன் கலையின் ரசிகன் எப்போதுமே. ஆனால் அக்கலை தன்  வாழ்க்கையே போராட்டமாக மாற்றினாலும் அவற்றிலிருந்து அவனால் விடுபடமுடிவதில்லை. ஏனோ அப்படி விடுபட்டால் அவன் அன்றே இறந்தவனாகிறான். அவன் கால்பந்து விளையாடும் அழகைக் கண்ட அவள் தன் வாழ்க்கையை அவனுடன் அர்பணிக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதும் அந்த கால்பந்திடம் அவன் விளையாடாவிட்டாலும் அவள் விளையாடிக்கொண்டே இருந்தாள். அவள் மகனைப் பொறுத்த வரையில் அவள் தாய்,  கால்பந்து - தந்தை 

    கதைகளின் வடிவமும் மொழியும் நேரடியாக இருந்தாலும், கதைகளின் ஆழமும், மனித மனங்களின் சிந்தனையும் செயல்முறையும் சில நேரங்களில் விசித்திரமாகவே உள்ளது.  

வெண்ணிற இரவுகள்

            'தஸ்தயேவ்ஸ்கி' அவர்களின் மூன்று குறுநாவல்கள் தொகுப்பான "உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்" புத்தகத்தினை வாசித்தேன். இது "பாரதி புத்தகாலயம்" வெளியீடு. அதில் உள்ள "வெண்ணிற இரவுகள்" குறுநாவல் வாசிக்கையில் என்னுடைய அனுபவங்களை கீழே தொகுத்துள்ளேன்.
            
            இது ஒரு கனவுலகவாசியைப் பற்றிய அதி அற்புத காதல் கதையாகும். பீட்டர்ஸ்பர்க் நகரில் நம் கனவுலகவாசி, வாழ்க்கையில் எப்போதுமே ஒரு கனவுலகத்தில் வாழ்பவர். நகரத்து மக்கள் எல்லாம் வேலை முடிந்து அவரவர் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கையில், இவர் மட்டும் கால் போன போக்கிலே நகரை சுற்றி வந்து கொண்டிருப்பார். நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவருக்கு ஒரு நண்பர் கூட இல்லை. அந்நகரதில் உள்ள அத்தனை தெருக்களிலும் அவர் நடந்துள்ளார். அவ்வீடுகழும் தெருக்களும் தான் அவரின் நண்பர்கள்.
           
            இப்படி ஒரு முறை அவர் நகரத்துக்கு வெளியில் சென்று விட்டு வரும் போது , பாலத்தின் ஓரம் ஒரு இளம்பெண் அழுதுகொண்டு இருப்பதைக் கண்டார். அப்பெண்ணை பார்த்ததுமே தன் தனிமையின் வேதனைகளை அனுபவிப்பவளாக தெரிந்தாள். அதனால் அவளிடம் இவருக்கு ஒரு இனம் புரியா அன்பு மலர்ந்தது. அவளை ஒரு குடிகாரனிடமிருந்து அன்று இவர் காப்பாற்றுகிறார். அவளைத்  தன்னிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். 
            
            இருவரும் அன்றைய முதல் நாள் சந்திப்பில் பேசிக் கொள்கின்றனர். நம் கனவுலகவாசி, தன் அக எண்ணங்களை எல்லாம் அவளிடம் கூறுகிறார். அவர் இந்த நகரில் வாழும் தனிமை வாழ்க்கையைப் பற்றி. தன கனவுலகத்தில் அவர் காணும் அற்புத காதலைப் பற்றி. அந்தப் புனிதமான காதலை வெறும் கனவாகவே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் காதல் என்னும் கனவின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார். 'நாஸ்தன்கா'வும் அவரிடம் நட்பு பாராட்டுகிறாள். 
            
            அவள் தன் கதையை கூறுமுன் அவரிடம் ஒரு சத்தியம் செய்து வாங்கிக் கொள்கிறாள். அவர் அவளின் மேல் காதல் கொள்ளக் கூடாது என்று.  அவள் தன் கண் தெரியாத பாட்டியிடம் தனியாக வாழ்கிறாள். அவள் ஒரு முறை செய்த ஏதோ ஒரு தப்பிற்காக,  அவள் சட்டையையும் தன் சட்டையையும் சேர்த்து ஒரு ஊக்கு போட்டு எப்போதும் வைத்துள்ளார் அவள் பாட்டி. இவள் அதனை எப்போதும் வெறுத்தாள் . தான் நினைத்த இடத்திற்கு போக முடியவில்லயே என்று இவள் எப்போதும் விடுதலைக்காக ஏங்குவாள். அப்போது அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவனிடம் இவள் காதல் கொண்டு விடுகிறாள். ஒரு வருடம் முன்பு அவன் இந்நகரை விட்டு போய் விடுகிறான். போகும் முன் தான் இன்னும் ஒரு வருடத்தில் வந்து அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் .
            
            ஒரு வருடம் முடிந்து விட்டது. அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தான் நம் கனவுலகவாசி அவளைக் பாலமருகே காண்கிறான். அவளும் அவனும் இதையெல்லாம் அந்த வெண்ணிற இரவில், வெளியில் ஒரு பெஞ்சின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் இரவில், அவள் தனது இந்தக் கதையினை அவரிடம் சொல்லி முடித்துவிட்டு, அவன் மீண்டும் வந்து விட்டதாகவும் அது தமக்கு தெரியும் என்றும், அவன் என்னைப் பார்க்க வராதது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவரிடம் கூறுகிறாள்.  
        
            நம் கனவுலகவாசி அவள்மீது தீராக் காதல் கொண்டு விடுகிறார். இது வரையில் கனவில் மட்டுமே காதலித்து வந்தவர் இப்பொழுது நிஜத்தில் காதலிக்கிறார் அவளை. அனால் அவளிடம் அவர் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவர் இதை அவளிடம் சொல்லவில்லை. 
            
            அவளை இந்த கவலையிலிருந்து போக்க அவளிடம் பல சமாதானங்கள் கூறுகிறார். அவள் அதையெல்லாம் உண்மை என்பது போலவே நினைத்து சமாதானம் அடைகிறாள். இது அவருக்கு வியப்பாக இருக்கிறது. இந்தப்பெண் உண்மையிலே நாம் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட்டு சமாதானம் அடைந்துவிட்டாளா? இவ்வளவு அப்பாவிப் பெண்ணாக அல்லவே இருக்கிறாள். அவர் அவளிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லி கேட்கிறார். அவள் அக்கடிதத்தினை எழுதி, அவனிடம் கொண்டு சேர்க்கும்படி மன்றாடுகிறாள். அவரும் சரியென்று, அதைச் செய்வதாய்ச் சொன்னார். 
            
            அடுத்த நாள் இரவு பெருமழையில் இருவரும் சந்திக்க முடியவில்லை. ஆனால் அவளின் வீட்டின் பக்கம் இவர் சென்று பார்க்கிறார். ஏதோ சொல்லவொண்ணா ஏக்கம் அவரின் நெஞ்சடைக்கவே  திரும்பவும் தன் வீட்டிற்கு வந்து படுத்துறங்குகிறார். அடுத்த நாள் மூன்றாம் இரவில், அவள் இவருக்கு முன்னாடியே வந்தமர்ந்து இவருக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறாள். தான் அந்த கடிதத்தை சேர்த்து விட்டதாகவும், அவன் நிச்சயம் இன்று உன்னை வந்து சந்திக்கப் போகிறான் என்றும் அவளிடம் சொன்னார். அவள் அவரின் கையைபப்  பிடித்துக் கொண்டு ஆனந்தம் அடைந்தாள். அவள் அவரிடம், நாம் இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும் எப்போதும் பிரியக் கூடாது என்றும் கூறினாள்.
            
            அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினருகே யாரோ ஒருவர் தென்படவே, அவர் தன் கையை அவளிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்குள் அது வேறு யாரோ ஒருவர் என்று தெரிகிறது. அவள் அவரிடம, ஏன் நீ கையை எடுக்க வேண்டும், அவன் வந்தாலும் கூட இப்படடியே நாம் கைகோர்த்துத் தான் அவனை வரவேற்போம்என்று சொன்னாள். அவர்கள் ரொம்ப நேரம் அங்கேயே அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாரகள். அவள் அழத் தொடங்குகிறாள். அவர் நிறைய சமாதானம் சொல்கிறார். இறுதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுகிறார். அவளும் முதல் அதிர்ச்சி  முடிந்த உடனேயே அவரை கட்டி அணைத்துக்கொள்கிறார். அவள் அதற்கு தனக்கு தானே பல்வேறு சமாதானங்கள் சொல்லிக் கொள்கிறாள். அவர் தான் தன்னை உண்மையாக  காதலிக்கிறார் என்றும், அவன் அவளை காதல் செய்யவே இல்லை என்றும், தான் தான் அவன் மீது காதல் கொண்டனென்றும், இனிமேல் அவனை காதலிக்க போவதில்லை என்றும், அவரைத்தான் காதலிக்கப்  போவதுமாகச் சொன்னாள். அவரும் தன் காதல் கைகூடியதை நினைத்து மிதமிஞ்சிய இன்பம் கொள்கிறார். அவர்கள் இருவரும் நெடு நேரும் இரவு முழுவதும் நடந்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவரும், அவளும் காதலித்தார்கள். அவள் அத்தனையும் மறந்து அவரிடம் மிகவும் இன்பமாக பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். செல்ல சண்டைகள் போட்டார்கள்.
            
            அப்பொழுது திடீரென்று அங்கு ஒரு உருவம் வந்து நிற்கிறது. அது யாரென அவர் யோசிக்குமுன், நாஸ்தென்கா அவர் பிடியிலிருந்து விலகி அவனைப் போய்  கட்டிக்கொண்டாள். திரும்ப அவரை நோக்கி வந்து அவரை ஒரு முறை கட்டிதழுவிவிட்டு அவனிடம் அவள் சென்று விட்டாள்.
            
            அடுத்த நாள் அவர் அவளிடம் தான் கொண்ட காதலினை பற்றி யோசித்துக் கொண்டுருக்கையில், அவளிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதை அவர் படித்துவிட்டு அமைதியாக அவரும் அவளும் காதல் கொண்ட அந்த ஒரு சில கணங்களையே எண்ணி கொண்டிருந்தார். 
            
            காதலுக்காக ஏங்கும் ஒரு இளம்பெண்ணும், கனவிலே காதல் கொண்ட ஒரு ஆணும் இதற்கு மேல் காதல் செய்ய ஏதும் இல்லை. அவளின் செய்கைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவுக்கு அவ்வளவு சமூகத்தில் சேராதவை. இங்கு சமூக கட்டமைப்பினால் காதலை ஒரு வடிகட்டிய பொட்டலம் போன்றெ அணுக வேண்டியுள்ளது. அல்லது இந்த சமூக கட்டமைப்பு இருப்பதால்தான் இந்த மாறி காதல்கள் உருவாகிறதா என்றும் தெரியவில்லை. ஊழின் வசத்தால் மனங்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகிறது. ஒன்றை மறுத்து எழும் காதல் உண்மையில் காதலே இல்லை. அது தன்னிச்சையாக நிகழ்வது. அவளின் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு பிள்ளையின் செயலாகவே உள்ளது.ஆனால் அது தான் உண்மையான உணர்களோ? அதற்கு மேல் நாம் கட்டி அமைத்த நாகரிகம் நம்மை தர்க்கத்தில் கொண்டு வந்து கணக்கு போட வைத்து விடுகிறது.
            
            நாகரிகம் வளர்ந்து நம் உணர்வுகளை வகைமைப்படுத்தி பொட்டலமாக்கிவிட்டோம். அதனால் முரண்களினால் வரும் உணர்வுகள் ஒன்று சண்டையினால் அல்லது தியாகத்தினால் முடிவடைகிறது.  இதற்கு எங்கும் விதிவிலக்கே இல்லை என்றே தோன்றுகிறது. இது அப்படித்தான் நடக்கும், வேறு வழியே இல்லை என்றும் நினைக்கிறேன்.

Saturday 5 June 2021

The Social Dilemma - ஒரு தொடக்கம்

            'The Social Dilemma" என்ற ஆவணப்படம் பார்த்தேன். அதன் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=uaaC57tcci0

https://www.netflix.com/in/title/81254224

            பொதுவாக நாம்  ஒரு செயலை செய்து கொண்டே இருப்போம், அது நமக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் கூட. உதாரணமாக, காலையில் எழுந்து முதலில் மொபைல் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிந்தும் அதை நாம் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் ஏதாவதொரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது யாரவது நம் பின் மண்டையில் அடித்து சொல்லும் போதோ தான், அந்த தவறின் விளைவுகளை பற்றி தெரிந்து அதை கைவிட முயல்வோம்.

            அப்படி ஒரு பின் மண்டையில் அடித்து சொல்லும் ஆவணப்படம் தான் 'The Social Dilemma'. நாம் இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரன்டு வகையாகவே அதன் உபயோகத்தை வைத்து பிரிப்போம். ஒன்று அது நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை. அடுத்து அது மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவை.ஒன்று அதை முழுமையாக ஏற்போம் அல்லது அதனை வசைபாடுவோம்.

            `இந்த "cellphone" வந்ததிலிருந்து, எல்லாம் நாசமா போச்சு` போன்ற வசைகள். `இந்த செல்போன் வந்து நம் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியது`, போன்ற புகழ்ச்சியை. ஆனால்  நாம் உண்மையிலே அதன் நன்மை/தீமைகளை பட்டியலிட்டு ஒரு விவாதப்பொருளாக்கி அதில் இருக்கும் ethical/moral சவால்களை நாம் சீண்டியதே இல்லை.

            அந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறது இந்த ஆவணப்படம். ஒருவன் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது, அவன் மொபைலுக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் `செயற்கை நுண்ணறிவுடன்` விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. இந்த `செயற்கை நுண்ணறிவு` நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிகவும் பெரியது. நம் ஒவ்வொரு ரகசியமும் அதற்குத் தெரியும். அதை வைத்து நாம்  என்ன செய்வோம் என்றும் அதற்குத் தெரியும். அதன் அடிப்படையிலேயே அது நமக்கு 'Suggestions'ஐ சொல்கிறது.

            இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கும். இந்த சமூக ஊடகங்கத்தின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்று தான். "நம் ScreenTimeஐ அதிகரிப்பது". இது தான்  இங்கு சந்தை. நம்முடைய நேரம் தான் சந்தைப்பொருள். இந்த சந்தைப்பொருளுக்குத்தான் எல்லா சமூக ஊடகங்களும் போட்டி போடுகின்றன. 

         “If you are not buying any product, then you are the product”

            அடுத்து நமக்கு இரு முக்கியமான கேள்விகள் வருகிறது.

1. இதனால் அந்த ஊடகங்களுக்கு என்ன லாபம்?

2. இதனால் நமக்கு என்ன நஷ்டம்?

            சமூக ஊடகங்கள் லாபம் அடைவது "Advertisement" வழியாகவே. நீங்கள் பார்க்கும் விடீயோவையோ, போடும் போஸ்டாயோ வைத்து, உங்கள் விருப்பங்களை அது ஊகிக்கும். அதன் பொருட்டு, Advertisement வரும். உதாரணமாக, நீங்கள் "How to cook gulab jamun" என்று Search செய்தால், அதற்கு தகுந்தவாறே "Jamun" கம்பெனி விளம்பரங்கள் வரும். அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போதும், அது சம்பந்தபட்ட வீடியோக்களே வரும். நீங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள்.

           நாம் ஒரு போஸ்ட்ஐ, ஒரு போட்டோவை போடுகிறோம் என்றால், நாம் அதற்கு "likes" எதிர்பார்ப்போம். நம் எதிர்பார்ப்பு தான் இங்கே சந்தைப்பொருள். நம்மை மேலும் மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டிக்கிட்டே இருக்க செய்வது தான் அந்த செயற்கை நுண்ணறிவு programsஇன் வேலை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது. இது தான் இங்கு நிகழ்வது. நாம் இதனை மறக்கச் செய்தால் கூட "Notifications" மூலம் நம் ஆசையினை கிளறச்செய்வது.

            நாம் இதற்கு அடிமை ஆகிறோம் என்பது நம்மை அறியாமலேயே நடக்கும். மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கும். நம் அரசியல் நிலைப்பாட்டை, காதலை, அன்றாட விருப்பங்களை, என்று அனைத்தும் அதற்குத் தெரியும்.  இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

            மேலும் இந்த சமூக ஊடகங்கள் நம் "Data"வை  விற்கலாம். ஆனால் அதனை விற்காமலே நம் அனைத்து விருப்ப/வெறுப்புகளை பயன்படுத்தி, நம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும்  மாற்றலாம். உதாரணமாக, நம் அரசியல் நிலைப்பாட்டினை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த சமூக ஊடகங்கள் நேர்முகமாக, இதில் ஈடுபடுவதில்லை. அது ஒரு "platform"ஐ நமக்குத் தருகிறது. அதில் நம் அத்தனை வெறுப்புகளையும் , காள்புகளையும் நாம் ஏற்றுகிறோம். இதனால் ஒரு மெய்நிகர் தளத்தில் நடக்கும் வெறுப்புகளை, நம் அன்றாட பொதுவெளிக்கு மாற்றி சண்டையிடுகிறோம். 

            சமூக ஊடகத்தினால் ஏற்படும் சமூகம்,அறம், உளவியல்   சார்ந்த சிக்கல்களின் ஆய்வுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது இங்கே வந்து 10 வருடங்கள் தான் ஆகின்றன என்றாலும், அதன் தாக்கம் எந்த ஒரு தொழில்நுட்பமும் செய்யாத அளவு மிகவும் பெரியது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நம்மை அதற்கு அடிமை அடையச்செய்கிறது. நம் குழந்தைகளின் நேரத்தை நம்மிடமிருந்து பிரிக்கிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நாம் நம் கையில் வைத்திருப்பது (Mobiles) நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம், அதன் சாத்தியங்கள் எல்லையற்றது. அதனாலே அது மிகவும் பயங்கரமானது.

            எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனுக்கு உதவவே உருவாக்கப்படுகிறது. அதை யாரும் இங்கே மறுக்க முடியாது. இந்த தகவல் தொழில்நுட்பமும் அவ்வாறே. ஆனால் இது வளர்ந்து வளர்ந்து மனிதனை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது.  நம் ஒவ்வொரு clickஉம் சேமிக்கக்ப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் அதனை கையாள்வதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அதுவே நம்மை கையாளுகிறது. 

            இந்த ஆவணப்படத்தில், இதை ஒரு விவாதமாகவே கொண்டு செல்கிறார்கள். இது ஒரு தொடக்கமே. நாம் உருவாக்கிய பொருள் நம் கையையே கடிக்கும் போது, அதன் தேவையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் என்ன தான் முற்றிலும் இதனை தவிர்க்க முடியாமல் போனாலும், நமக்கு உகந்தவாரு நாம் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் குடும்பத்துடன் உரையாடி, நமக்கு நாமே ஒரு கொள்கையினை வைத்துக் கொண்டு தான் இதனை இப்போது சமாளிக்க தொடங்க வேண்டும். 



Wednesday 12 May 2021

பித்தப்பூ

                                                          பித்தப்பூ 

    க.நா.சுப்ரமண்யம் அவர்களின் 'பித்தப்பூ' குறுநாவல் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் க.நா.சு வின் முதல் நாவல். மனநலம் பற்றிய நாவல் இது. 'பைத்தியம்' என்பதன் அர்த்தத்தை அறிய முயலும் முயற்சியே இந்நாவல். 

    கதை தியாகராஜன் (எ) தியாகுவைப் பற்றியது. கதை கூறுபவர் (க.நா.சு) தியாகுவின் குடும்ப நண்பர். தியாகுவிற்கும், கதை கூறுபவருக்கும் (க.நா.சு)  நடக்கும் உரையாடல்கள் ஒரு பகுதி விட்டு விட்டு வருகிறது. முதல் பகுதியில் உரையாடல் என்றல் இரண்டாம் பகுதியில் காட்சிகளும், சம்பவங்களும் , பிறகு மீண்டும் மூன்றாம் பகுதியில் உரையாடல்கள். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தியாகு தன் மனவோட்டங்களையும், தன் மீது பிறர் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் உடையது. 

    கதையில் சில "பைத்தியம்" அடைந்தவர்களின் சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளது. தன் மனைவியின் செயலால் திடீரென்று "பைத்தியம்" ஆகுபவர், தந்தி கொடுக்கும் தபால்காரன் பைத்தியம் ஆவது, போன்ற சிறு கிளை கதைகள் வருகின்றன. உண்மையில் பைத்தியம் என்பது என்ன? தியாகுவின் அப்பாவையும் அண்ணனையும் கூட சிலர் பைத்தியம் என்கிறார்கள். பொதுவான மனித செயல்களை செய்யாமல் தனியே செய்பவரை உலகம் காலம் தோறும் பைத்தியம் என்று தான் சொல்லிக்கொண்டு வருகிறது. மக்கள் தன்னால் செய்ய இயலாததை, பிறர் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை செய்வோரை பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுகிறது. இது ஒரு வகையான "பைத்தியத்தின்" வரையறை.

    அவனின் தந்தை பெரிய பணக்காரராக இருந்து தான தர்மத்தால் தன் சொத்தினை முக்கால்வாசிக்கும் மேல் இழந்தவர். அவரின் இரண்டாம் மனைவியின் கடைசி மகன் தான் தியாகு (பத்தாவது பிள்ளை).  தன சிறு வயது முதலே படிப்பிலும், ஓவியத்திலும் படு சுட்டி. காலேஜ் படிக்கும் போது அவன் கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டான். அதிலேயே அவன் எப்போதும் திளைத்திருந்தான். 

    கதை கூறுபவரும்(க.நா.சு) ஒரு பைத்தியம் என்றே மக்கள் நினைப்பர். தன் வாழ்நாள் முழுதும் "எழுத்து" மட்டுமே நம்பி வாழ்பவரை உலகம் எப்படி சொல்லும். தியாகு தான் ஒரு பைத்தியமோ என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் சிக்கி அவன் காதலியயை இழந்த பின்னர் அவன் இன்னும் அந்த எண்ணத்தில் மூழ்கிவிட்டான். அவன் தொடர்ச்சியாக "தான் ஒரு பைத்தியமா இல்லையா" என்பதைப் பற்றியே தன் வாழ்நாள் முழுதும் போராடிக்கொண்டிருந்தான்.

   தியாகு இறுதியில்  "electric shock" மருத்துவத்தின் கொடுமையால் உயிரிழக்கிறான். தன் மனைவியும் மகளும் வெளியூரில் இருக்க, தான் மட்டும் தனியே வாழ்ந்து மனச்சோர்வுடனே இறந்தும் போனான்.

    "நான் பைத்தியமா?" என்ற கேள்வி பெரும்பாலும் தன் வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது சிந்தித்திருப்போம். மனச் சோர்வு உடையவர்கள், அதில் உள்ளே சென்று தங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவரவர் சுற்றமும் நட்பும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று "மனநோய்" பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மேலை நாடுகளில் இருந்தாலும், இன்றளவும் நம்மிடையே அதை ஒரு stereotype செய்து ஒதுக்கியே வைத்துள்ளோம். மனம் குன்றினாலும், மனம்  இல்லாவிட்டாலும் அனைவரும் ஓர் உயிரினமே. அடிப்படை அன்பும், பரிவுமே நாம் கொடுக்கும் மருந்து.  

    

Friday 30 April 2021

குற்றமும் தண்டனையும்

                                                    குற்றமும் தண்டனையும்

        'தஸ்தயேவ்ஸ்கி' அவர்களின் 'குற்றமும் தண்டனையும்' நாவலின் முதல் வாசிப்பை முடித்து விட்டேன். Wordsworth classics பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே வாசித்தேன். தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னொரு முறை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

        19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் மிக முக்கியமான நூற்றாண்டு. அறிவியலில்  மட்டுமில்லாமல் கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த பங்களிப்புகள் நிறைந்த நூற்றாண்டு. சமூகவியல் மாற்றங்கள், மக்களின் விடுதலை சிந்தனைகள், மனிதன் என்னும் சுய நோக்கு ஆகிய அனைத்தும் மேலோங்கி இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் ருஷ்ய சமுக, இலக்கியத்திலும் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகோவ் அவர்களின் நூற்றாண்டு.

        தஸ்தயேவ்ஸ்கியின் சுய வாழ்க்கைச் சித்திரத்தை பின்னணியாய்க் கொண்டு,  'குற்றமும் தண்டனையும்' வாசித்தால், அவர் வாழ்ந்த கால கட்டத்தின் எழுச்சிகள், அவரின் சிறை அனுபவங்கள், மற்ற சிந்தனையாளர்களினால் தான் அடைந்த எண்ணங்கள், தன் சொந்த வாழ்க்கையின் அத்தனை இன்னல்கள், இந்நாவல் மேலும் ஒரு திறப்பாக இருக்கும்.

        நாவலின் நாயகன் 'Raskolnikov'. சட்டம் படிக்கும் ஒரு மாணவன். தன்  சொந்த ஊரை விட்டுவிட்டு, st. petersberg நகரில் சட்டம் படித்து வருகிறான். படிப்பும் பாதியில் நின்று விடுகிறது, தான் மேற்கொண்ட வேலையும் இப்போது இல்லாததால், மிகுந்த வறுமையில் உள்ளான். தான் குடியிருக்கும் சிறு அறைக்கு வாடகை கூட பல மாதங்களாக கொடுக்க இயலாமல் இருக்கும் நிலை.

        தன்னுள்  ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்றே அவனுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணத்தோடு தான் அவன் கடந்த சில மாதங்களாகவே அலைந்து கொண்டிருந்தான். இந்த எண்ணத்தின் அர்த்தம் என்ன? ஏன் அந்த எண்ணம் தன்னுள் முளைத்தது என்று அவனுக்கு தெரியவில்லை. அந்த எண்ணம் அவனுக்கு ஒரு கனவு போல் எப்போதும் தோன்றியது அதை அவன் பூர்த்தி செய்வான் என்று அவனே நம்பவில்லை. ஆனால் அந்தக் கனவின்  பின்னாலேயே அவன் அதற்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறியாமல் அந்த கனவை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.

        அந்த வயதான அடகுப் பெண்மணியை அவன் கொலை செய்ய எண்ணியதே அவனுடைய எண்ணம். அவன் எப்போதுமே எங்கு போகிறான் என்று அவனுக்கே தெரியாது, எப்போதும் சிந்தனையிலேயே இருப்பான். அவன் தற்செயலாக அந்தப் பெண்மணியின் தங்கை, மார்க்கெட்டில், வேறு யாரோ ஒரு கடைக்காரரிடம் நாளைக்கு இரவு 7 மணிக்கு வந்து பொருளை வாங்கிக் கொள்வதாக பேசிக்கொண்டிருக்கிறாள். அதை இவன் ஒற்றுக் கேட்டு விடுகிறான்.

        அடுத்த நாள் இரவு 7 மணிக்கு அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான். ஒரு கோடாரி  அவனுக்கு தேவைப்பட்டது அதை லாவகமாக இன்னொரு அறையிலிருந்து களவாடிக் கொண்டு விட்டான். அதை தன்கோட்டில்  வைத்து மறைத்துக்கொண்டு அந்த வயதான அடகு  பெண்மணி வீட்டிற்கு சென்றான். வீட்டிற்குச்  சென்று அவள்  வீட்டின் முகப்பில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்தினான். அந்த வயதான பெண்மணி கொஞ்ச நேரம் கழித்து கதவை மிகவும் எச்சரிக்கையுடன் திறந்தாள். அவன் சட்டென்று உள்ளே புகுந்தான். அவள் ஒரு நிமிடம் திமிரி விட்டாள். இவன் தன்னிடம் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து இதை அடகு வைக்க வந்திருப்பதாகவும் இதற்கு பணம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டான். அந்த பொருளை அவள் கையில் வாங்கி பார்த்துக் கொண்டிருக்கையில் கோடாரியை  எடுத்து அவள் மேல் மண்டையில் ஓங்கி அடித்து அவளை கொலை செய்கிறான். பின்பு அவளின் உள்ளறையில் சென்று அங்கிருக்கும் பெரிய பீரோவில்  கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்து க்கொண்டான்.

        அப்பொழுது திடீரென்று முன் அறையில் யாரோ இருப்பது போல் உணர்ந்ததால் அங்கு வந்து பார்த்தபோது , "Lizavetta" தன்  அக்காவின் பிணத்தை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் முகத்தின் மேல் கோடாரியை எடுத்துச் சென்ற பொது, அவள் ஒரு சிறு சத்தம் கூட போடாமல் , உணர்வுகளற்று கிடந்தாள். அந்த தருணத்தில் அவனுக்கு ஏற்பட்ட உணர்வினை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்து அவன் ஓட எண்ணினான். ஆனால் அவன் அந்த கோடாரியை அவளின் தலையில் பாய்ச்சினான்.

        அவன் அந்த 'குற்ற'த்தை செய்து முடித்தான்.

        குற்றம் செய்து முடித்து பல நாட்களும் அவன் ஒரு மயக்க நிலையிலேயே காணப்பட்டான். அவனின் செயல்கள் அனைத்தும் ஒரு வகையான மயக்க நிலையிலேயே செய்து கொண்டிருந்தான். ஆனால் அந்த குற்றத்தைப் பற்றி யாரவது பேசும்போது  மட்டும் மிகுந்த கவனிப்புடனும், ஒரு எச்சரிக்கை உடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அந்த குற்றம் அவனை தன்னில் இழுத்துக்கொண்டது. அதில் அவன் தினமும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் களவாண்டப் பொருட்களை அவன் முழுதாகக்கூட பார்க்கவில்லை. எல்லாவற்றயும் ஒரு பெரிய கல்லின் அடியில் புதைத்து வைத்துவிட்டான்.

        அவன் அந்த கொலை புரிவதற்கு முன்னால், Marmeladov என்னும் அரசு அதிதாரியை ஒரு உணவகத்தில் சந்திக்கிறான்.  Marmeladovவே  இவனிடம் வந்து பேச ஆரம்பிக்கிறான். தன்னுடைய வாழ்க்கையும், தான் எப்படி அரசு அதிகாரியாக இருந்து குடிக்கு அடிமையாகி அதை இழந்துவிட்டிருப்பதையும் சொல்கிறான். வறுமையின் காரணமாக தன் குழந்தைகள் பசியால் வாடுகின்றன எனவும், அவனின் இரண்டாம் மனைவி எப்படி ஒரு நாள் தன் மகளின் (இவனின் மூத்த மனைவிக்கு பிறந்த பெண்) உபயோகமற்ற நிலையைக் கண்டு வசை பாடினால் என்றும்,   அதற்கு அவள் தன் சின்னஞ்சிறு வயதில் எப்படி ஒரு விபச்சாரியாகி தன் வீட்டை பார்த்துக் கொள்கிறாள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பெரிய மகள் Soniya தன் இளம் வயதில் தன சகோதரர்களுக்காக விபச்சாரியாகி, தன்னை தியாகம் செய்கிறாள். 

        அவனின் மயக்க நிலை அவனை ஒரு இடத்தில இருக்க விடாமல் அலைந்து திரிய வைக்கிறது. St. petersbergஇன் வீதிகளில் அவன் அலைந்து  திரிகிறான். அவனின் கால்கள் போகுமிடம் எல்லாம் தானும் செல்கிறான். மனம் திடீரென்று நல்ல நிலைக்கு வரும் தான் எப்படி இங்கு வந்தோம் என்பதே தெரியாமல் திரும்பவும் 'மயக்க' நிலைக்கு செல்கிறான். அப்படி ஒரு தருணத்தில் ஒரு இளம் பெண்ணை சாலையோரம் சந்திக்கிறான். அவள் மயக்க நிலைமையில் உள்ளாள். தன உணர்வுகள் அற்ற நிலையில். அவளை அங்கு இருக்கும் ஒரு காமுகன் உபயோகப்படுத்தி கொள்வான் என்ற அச்சத்தால், இவன் அவனிடம் சென்று சண்டை இடுகிறான். ஒரு காவல் அதிகாரி அங்கு வரவே, அவன் நடந்தவற்றை கூறி அந்த பெண்ணை அவள்  இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்படுகிறான்.ஆனால் அந்த காமுகன் அவளை திரும்பவும் பின்தொடர்ந்து வருகிறான். இதை கண்ட அவன் திடீரென்று தான் எதற்கு அவளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து அப்படியே விட்டு செல்கிறான். அவளை காப்பாற்றுவதில் அவன் என்ன பயன் என்று யோசிக்கையில், அப்படியே மனம் அதை விட்டு விடுகிறது. அவளை அவன் அப்போது காப்பாற்றி விட்டால், அடுத்த கொஞ்ச நேரத்தில் வேறு ஒருவனால் சீரழிக்கப் படுவாள். இதை எல்லாம் அந்த பெண்ணும் விரும்பக் கூடும். தன் செயலால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கிறன்.  செயலின் அர்த்தமின்மையில் தன்னை இழந்துவிடுகிறான்.

        தன் அன்னை அவனுக்கெழுதிய கடிதத்தில், அவனின் தங்கை ஒரு பணக்கார வக்கீலை (Pyotr Petrovich) திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது நம் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு நற்செயல் எனவும் எழுதி இருந்தாள்.அந்த வக்கீலின்  மேட்டிமை எண்ணங்களும், பெண்ணடிமை எண்ணங்களும் ஓரிரு வரிகளில் எழுதி இருந்ததைக் கண்டு கொதிப்படைந்தான். அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் பொருட்டு அவன் தங்கை வாழ்க்கையை தியாகம் செய்கிறாள் என்பதை அவனால் சீரணிக்க முடியவில்லை. 

        அவனுடைய நண்பன் Razumihin அவன் மயக்க நிலையில் இருந்த எல்லா தருணங்களிலும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தான். அவனின் மருத்துவ நண்பன் zossimovவும் Raskolnikovஐ தங்களால் முடிந்த வரை பார்த்துக்கொண்டனர். தன தங்கையின் மாப்பிள்ளை அவனைக் காண அறைக்கு வந்தபோது அவனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். 

        Porfiryயும், Raskolnikovவும் தங்களின் முதல் சந்திப்பில் விவாதம் செய்தது ஒரு தத்துவார்த்தமானதாகும். அவன் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி Porfiry அதன் விளக்கங்களையும், அது எழுத முற்பட்ட காரணங்களையும் கேட்டார். அந்த கட்டுரையில் அவன் "சாமானியர்கள் மற்றும் சிறப்பு மக்கள்" என்ற வாதத்தை கொண்டு வருகிறான். "சிறப்பு மக்கள்" (extraordinary people) தாங்கள் சிறப்பானவர்கள் என்பதால் ஒரு சமூக கட்டுப்பாட்டு எல்லையை மீறலாம் என்றும், அந்த நோக்கில் கொலை கூட புரியலாம் என்றும் விவாத பொருளாக இருந்தது. இதனை பல்வேறு எடுத்துக்காட்டு (நெப்போலியன்) வழியாக அவன் விவாதம் செய்தான். அவர்கள் தங்கள் சம காலத்தில் இருந்த எல்லைகளை கடந்து தங்களுக்கென்று ஒரு எல்லையை (அல்லது எல்லையின்மையை) உருவாக்கிக் கொண்டார்கள். அதை சாமானியர்கள் நோக்கிற்காக செய்தார்கள். "Cause for the larger good" என்ற விவாதமே அது.

        மேலே உள்ள பேசு பொருளை சிந்திக்கும் போது, அது ஒரு வகையில் உண்மையாகவும் தோன்றலாம். அதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாதாரண மக்கள் கோட்டிற்குள்ளாகவே வாழ்வார்கள். அதை தாண்டி போகும் சிறப்பு மக்கள் போகும் வழியில் ஓரிரு குற்றங்கள் செய்வது பெரும் பிழை இல்லை என்றும் தோன்றும். இது என்றுமுள்ள சிந்தனை "Law of the collateral damage". ஆனால் சிறப்பு மக்கள் என யார் ஒருவரை முடிவு செய்வது. அப்படி ஒருவன் செய்தால்,   தன்  சுயநலத்திற்காக குற்றம் செய்தால், அதன் விளைவு என்ன? அப்படி ஒரு நிலைமையை சமூகம் எவ்வாறு பார்க்கும்?

        கதை நடக்கும் நூற்றாண்டு ஐரோப்பிய பின்னணியில் பல்வேறு புதிய கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விளையாடிக் கொண்டிருந்த காலம். Nihilism என்னும் மறுப்புவாதம் பரவலாக பேசிக் கொண்டிருந்த கால கட்டம். வாழ்க்கையின் அர்த்தமின்மையை வரையறுக்கும் தத்துவங்கள் மக்களை பலவாறு ஆட்கொண்டன. அவர்களின் பண்பாட்டுப் பின்னணிகளுடன் இதனை மோத விட்டு, ஒன்றுக்கு எதிராகவும் , ஆதரவாகவும் கருத்துக்கள் மேலோங்கின. அந்த பின்னணியிலிருந்து நாம்  Raskolnikovயும்,  அவனது குற்றம் மற்றும் அதன் பின்னணியையும் நோக்க வேண்டும்.

        காவல் அதிகாரி zametovவிடம் அவன் ஒரு சந்திப்பில், அவன் தான் அந்த கொலையை  செய்ததாக விளையாட்டாக சொல்வான். அவன் 'மயக்க' நிலையில் இருந்ததால் அதை அந்த அதிகாரி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.அவனுக்கு பல்வேறு சமயங்களில் இதை வெளிப்பபடையாக யாரிடமாவது சொல்ல முற்பட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். அதுவே அவனுக்கு ஒரு பெரிய "தண்டனை"யாகவும் இருந்தது. அவன் தன குற்றத்திற்கு "அங்கீகாரம்" தேடியே அலைந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஏன் அவன் அதைக் கோர வேண்டும்? அவன் தன்னை ஒரு சிறப்பு மக்களாக கற்பனை செய்து கொண்டான். அவனும் ஒரு நெப்போலியனாக தன்னை உருவகித்துக் கொண்டான். அதை தனக்கு தானே நிரூபிக்கவே அவன் அந்த கொலையை செய்தான்.    

        வீதியில் ஒருவன் குதிரை வண்டியில் அடிபட்டு சாகக் கிடப்பதைக் கண்டு, அவன் சென்று பார்க்கையில் அது Marmeladov என அறிந்து, அவனைத் தூக்கிக்  கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு Marmeladov இறந்து விடுகிறான். அவனின் இரண்டாம் மனைவியின் நிலமையைக் கண்டு, தன அன்னை அவனுக்கு அனுப்பிய பணம் இருபத்தைந்தை அவளிடம் எந்த ஒரு யோசனையும் செய்யமல் கொடுத்து விடுகிறான். அவனிடம் அடுத்த வேலைக்கு ஒரு பணமும் இல்லை. Marmeladov வின் மூத்த மகளை அங்கு அவன் காண்கிறான். அந்த குடியிருப்பில் தான் அவன் தங்கை மாப்பிள்ளையும் வாடகைக்கு வசிக்கிறான். அவனும் அதை பார்த்து விடுகிறான். 

        கொலை புரிந்த இரு நாட்கள் கழிந்து, அதே அறைக்கு சென்று அவன் பார்க்கிறான். அவன் மனம் கலங்கி இருந்தது. அந்த அறையில் வேலை செய்பவனிடம் "ரத்தம்" பற்றி விசாரிக்கிறான். அவன் ஏன் அங்கு சென்றான், எதை அங்கு எதிர்பார்த்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனின் இந்த செயல், அவன் மேல் ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணியது. இதைக்கண்டு  ஒரு வயதானவன், அவனைப் பின்தொடர்ந்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை ஒரு கொலையாளி என்று கூறிவிட்டுச் செல்கிறான். இதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கொலை புரிந்ததை தன் மூலமாகவே உலகிற்கு தெரிய வேண்டும் என்று அவன் தன்னுள் நினைத்துக் கொண்டிருந்தான். அவனே அந்த கொலையை தான் தான் செய்தது என்று சொன்னாலும் அதை கேட்பவர் நம்பவில்லை. ஆனால் இன்னொருவன் தன்னை கொலையாளி என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

        Porfiryயை இரண்டாம் முறை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறான். அவர்கள் இருவருக்கும் ஒரு மானசீகமான 'மனப்போர்' உழன்றுகொண்டே இருக்கிறது. Porfiry இவனை மனரீதியாக மிகவும் சோதிக்கிறார். அந்த "ரத்த" சம்பவத்தை அவனிடம் கேட்கும் போது , அவன் அதற்கு தான் ஒரு நிலையில் இல்லை எனவும், ஒரு 'மயக்க' நிலையில் காய்ச்சலுடன் அங்கு சென்றதாகவும் சொல்கிறான். அங்கு வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு கேள்விக்கு, அவன் ஒரு கணப்பொழுதில் அத்தனை சாத்தியங்களையும் யோசித்து அவருக்கு பதில் கூறுகிறான். அவன் அவரிடம் அந்த கொலையை அவன்  தான் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. இந்த 'மனப்போரில்' அவன் மூழ்கி விடுகிறான். இது நடந்து கொண்டிருக்கும் போது, தன சுய நிலையை இழந்து அவரிடம் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நேரத்தில், எதிர்பாராத விதமாக Nikolay ( பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி) Porfiry அறைக்குள் வந்து அவன் தான் கொலை செய்ததாகவும் , தன்னை கைது செய்து தண்டனை கொடுக்கும் படியும் கெஞ்சுகிறான். 

        நாவலின் ஒரு முக்கியமான கருத்தியல் விவாதமாக Nikolayயின் சுய தண்டனை ஏற்றலை குறிப்பிடலாம். அதனையே Porfiryயும் Raskolnikovவிடம் விவாதம் செய்கிறார. Nikolay ஒரு பழமைவாதி. பழைய கிருத்துவத்தின் மேல் நம்பிக்கை உடையவன். அவன் 'சுயவதை' என்பது கடவுளை அடையும் ஒரு வழியாகவே பார்க்கிறான். இது ருஷ்ய மட்டும் அல்லாமல் அனைத்து சமூகங்களிலும் மதங்களிலும் உள்ளது. நாம் 'நேர்த்திக்கடன்' என்று உடலை வருத்தும் செயல்களில் ஈடுபடுவதும் அதுவே. ஒரு சாமானிய மனிதனுக்கு அதுவே கடவுளை அடையும் வழி. தன்னை வருத்தி அர்பணித்தல். அதில் ஆணித்தரமாக இருத்தல். அவர்கள் வாழ அது ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 

        Raskolnikovவின் தங்கை அவன் பொருட்டு தியாகம் செய்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலில் முழுவதும் எந்த தியாகத்தையும் அவனால் புரிந்து கொள்ளவும், ஏற்று கொள்ளவும் முடியவில்லை. தன் தங்கையின், Marmelodov இரண்டாவது மனைவியின், Marmelodovவின் மூத்த மகள் Soniyaவின், இவை அனைத்தும் அவனுக்கு மேலும் உளக் கொந்தளிப்பை மட்டுமே அளித்தது.  ஏன் ஒரு மனிதன் தியாகம் செய்ய வேண்டும், மற்றவரின் பொருட்டு. தியாகம் ஒரு அன்பின் வெளிப்பாடு, கருணையின் உச்சமாகவே எனக்கு தோன்றுகிறது. சட்டென்று, Amitav Ghosh அவர்களின் 'The Shadow Lines' நாவலின் இறுதியில் அவர் கூறும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. 'Sacrifice is a real mystry'. 

        சோசியலிச "கம்யூன்" சிந்தனைகளும் அவற்றின் கருத்தியல் மோதல்களும் நாவலில் மேலோட்டமாக வந்து செல்கிறது. தஸ்தயேவ்ஸ்கி பார்வையில் "கம்யூன்" வழியாக உணர்வுகளற்ற, பண்பாடற்ற  ஒரு செங்கல் மனிதர்களை சோசியலிசம் உருவாக்க முற்படுகிறது என்றே சொல்லலாம். அவர்கள் வரலாற்றை அப்படியே நிறுத்தி, வெறும் கொள்கை வழியாக ஒரு சமூக கட்டுமானத்தை நிறுவ மேற்கொள்கிறார்கள். குடும்பம், திருமணம், உறவு, தொழில்  போன்றவற்றில் திறந்த மனப்பான்மை கொண்டால் மனிதன் அடையும் துன்பங்களில் பெரும்பாலானவை தவிர்க்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆனால் மனிதன் என்றுமே தன் பண்பாட்டை விடுத்து வாழ இயலாது, அப்படியே வாழ்தலும் அது வெறும் செயற்கை வாழ்வே என்ற எண்ணமே தோன்றுகிறது. பண்பாட்டுக் கூர்களினால் ஆனதே மனித மனம். 

        St. Petersbergன்அமைப்பு, மக்களின் பொது வாழ்க்கை, விழாக்கள் போன்றவை விரிவாக இல்லாமல் இருந்தாலும், கதையின் தத்துவ தளத்திற்கு போதுமானதாக உள்ளது. நகரத்தின் தெருக்கள், கேளிக்கை விடுதிகள், உணவுக்கூடங்கள், உழைக்கும் மக்களின் சாதாரண கேளிக்கைகள் போன்றவை வந்து செல்கின்றன. 

        தன் தங்கை  முன்னாள் வேலை செய்த வீட்டின் உரிமையாளன் St. Peterberg வருவது, கதையில் ஒரு திருப்பமாக உள்ளது. Svidrigailov நகரத்துக்கு வந்ததும் Soniyaவின் பக்கத்து வீட்டில் குடிஅமர்வது, Raskolnikovஐ பின் தொடர்வது, ஒரு புதிராக அமைந்துள்ளது. தன் தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததற்காக அவன் மேல் Raskolnikovவுக்கு ஒரு காழ்ப்பு உண்டானது. நகரத்துக்கு அவன் வந்த காரணமே அவன் தங்கையிடம் பேசுவதற்காக என்றும், அவளுக்கு பத்தாயிரம் rouble உயிலாக எழுதி வைத்திருப்பதாகவும் அவன் சொன்னான். பயனாக தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், ஒரேயொரு முறை மட்டும் அவளிடம் பேசினால் போதும் என்றும் அவனிடம் கூறினான். 

        Raskolnikov Soniyaவை, அவளின் தந்தை இறுதிச் சடங்கில், அவள்மேல் திருட்டுப் பழி சுமத்திய pyotr petrovichவிடம்  (தன் தங்கையின்  மாப்பிள்ளை) இருந்து காப்பாற்றுகிறான். தன் தங்கையின் பொருட்டு அவனை தான் கடிந்ததனால், தன்னை பழி வாங்கவே அவன் உன் மேல் திருட்டு பட்டம் கட்டினான் என்று பின் Soniyaவின் அறைக்குச் சென்று அவன் அதை அவளிடம் விளக்கினான். அப்போது அவன் தன்னுள்ளே வைத்திருந்த அந்த ரகசியத்தை அவளிடம் கூறினான். அவன்தான்  அந்த இரு கொலைகளை செய்ததாக சொன்னான். அதை கேட்டு அவளால் நம்ப முடியவில்லை. பிறர் துன்பத்தில் , தன் கையில் இருப்பதை அப்படியே அள்ளிக் கொடுக்கும் இவர் எப்படி கொலை செய்ய முடியும் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். 

        தன் அறையில் வைத்திருந்த பைபிளை எடுத்து "லாசர்" உயிர்த்தெழும் சம்பவத்தை வாசிக்கிறாள். அது அவனுக்கு தான் உயிர்த்தெழுவது போன்ற  எண்ணத்தை அளித்தது. தன் அனைத்து துன்பங்களின் தீர்வையும் கடவுளிடம் மன்றாடும் மனிதர்களிடம் இரக்கமும், கருணையும் இருக்கிறது. அவனுக்கு அப்போதே நன்றாக தெரிந்தது, அவள் அவனை விட்டு இனிமேல் ஒருபோதும் பிரியமாட்டாள் என்று. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அவன் இதை எண்ணியதும் அவனால் அந்த அறையில் இருக்க முடியாமலே வெளியே செல்கிறான்.

        Svidrigailov, இதை எல்லாம் பக்கத்து அறையில் இருந்து ஒற்றுக் கேட்டு, Raskolnikovவின்  தங்கையை தனிமையில் வரவழைத்து அவளை மிரட்டுகிறான். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். அவள் பயந்து தன்னிடம் இருந்த பழைய கைத்துப்பாக்கியை எடுத்து சுட முற்படுகிறாள். குண்டு அவன்மேல் உரசிச் செல்கிறது. அவன் அவளை நோக்கி முன்னேறும்  போது அவள் சட்டென்று அனைத்தையும் தூக்கி எரிந்து, அனாதையாக நிற்கிறாள். அந்த ஒரு நொடியை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சட்டென்று அவளை போய்  விடும்படி சொல்கிறான். அவளும் சென்று விடுகிறாள். அவன் கீழே இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொள்கிறான்.  

        Soniyaவின் சின்னன்னை இறந்த பிறகு, Svidrigailov தன் சொந்த செலவில் அவளின் குழந்தைகளை  ஒரு விடுதியில் சேர்க்கிறான். அவன் வாழ்ந்ததற்கு ஒரு அடையாளமாகவே அதை அவன் செய்தான் என்றே  நினைக்கிறேன். அவன் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறான், ஒரு சாட்சியின் பார்வையில். 

        தஸ்தயேவ்ஸ்கி கதையில் 'தற்செயல்'களை பல இடங்களில் தொட்டுச் செல்கிறார். Lizavettaவை Hay மார்க்கெட்டில் பார்த்து அவள் பேசியதை ஒற்றுக் கேட்டதனால் தான் அவனால் அன்று சென்று கொலை செய்ய முடிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் தருவாயில் Nikolay வந்து தான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்கிறான். Svidrigailov Soniya வின் பக்கத்துக்கு அறையில் இருப்பது. Pyotr Petrovitch, Marmeladov வீட்டின் குடியிருப்பில் வசிப்பது.  Marmeladov விபத்தை இவன் பார்ப்பது. தற்செயல்களின் ஊடாட்டமாகவே கதை செல்கிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் ஒரு கோடு இழுக்கும் போது, இது வெறும் தற்செயல் என்றும் கூறி விட முடியாது.

        Epilogueல், Raskolnikov குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒன்பது வருடம் சைபீரியாவிற்கு சென்ற பொது, Soniya அவனை பின்தொடர்ந்து அங்கு குடியேறுகிறாள். அவனுக்கு தெரியும் அவன் நிழலாக அவள் என்றும் இருப்பாள் என்று. அதை அவன் ஒருவாறு ஏற்றுக் கொண்டான். அன்பும், கருணையும் கொண்டவர்களால் மட்டுமே அத்தகைய செயலை செய்ய இயலும். அவளிடம் இருந்து அவன் பிரிகையில், அவள் கொடுத்த சிலுவையை தன்னுடனேயே அவன் வைத்துக் கொண்டிருந்தான்.

        தஸ்தயேவ்ஸ்கி அக்கால கட்டத்தின் எழுச்சிகளையும், Nihilism மேல் தனக்கு இருந்த அவ நம்பிக்கைகளையும், சோசியலிச செயல்பாட்டையும், தன் பண்பாட்டு வேர்களையும் ஒன்று திரட்டி அதன் மேல் கதையை கட்டமைத்திருக்கிறார். பல தருணங்கள், அவரின் சொந்த வாழ்வில் எடுத்தவையாகவே உள்ளன. நாவலில் பல பகுதிகள்  குறுங்கதைகளாகவும், விவாதங்களாகவும் நீட்டிச் செல்லலாம். மனித மனங்களின் எண்ணற்ற சிந்தனைகளை மொழியின் ஊடே கடைந்து நமக்கு அளித்திருக்கிறார். 




Thursday 11 March 2021

ஆமென்பது…

                                                    ஆமென்பது... கடிதம் 

அன்புள்ள ஜெ,

    தங்களின் "ஆமென்பது..." சிறுகதை வாசித்தேன். முதல் வாக்கியத்திலேயே ஆவலோடு உள்நுழைந்துவிட்டேன். "எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள்". ஆம், நாம் "எண்ணுவது" கோடி என்றால் , சொல்வது லட்சம், எழுதுவது வெறும் ஆயிரம் கூட இருக்காது. 

    நாம் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதை எழுதலாம் அல்லது எழுதாமல் இருக்கலாம். அதைப்போலவே சொல்வதையும். ஆனால் நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா. ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் உள்ள பாலம் எது. அந்த பாலம் எதனால் ஆனது. யார் கட்டுப்படுத்துவது. எண்ணங்களுக்கு இடையில் தொடர்பு உண்டா? அல்லது அவை தனித்தனி உலகத்தில் உள்ளவையா. சில சமயம் நினைத்துபப்  பார்த்தால், நாம் காலமெனும் சட்டத்தில் மட்டுமே எண்ணங்களை ஏற்றுகிறோம் என்றே தோன்றுகிறது. காலம் என்பது இல்லை என்றால் எண்ணங்களுக்கு எந்த பொருளும் இல்லை.

    கே.வி.ஜயானன் அவர்கள் தன் வாழ்க்கை பூராவும் ஒரு பிடிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். நோயுற்ற பிறப்பு, தாயின் இறப்பு, தந்தையின் புறக்கணிப்பு. இவை அனைத்தும் தனக்கு கிடைக்காததால், இவற்றை புறக்கணிக்கும் அனைத்து செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்க்கொள்கிறார். திருமணம் செய்து கொள்ளும்போது கூட, அதை வெறும் ஒப்பந்தமாகவே நினைத்தார். கதையில் அவரும் அவர் மனைவியும் பிரியும் தருணம் தான் உண்மையில் அவர் அனைத்தையும் தன் ஆழ் மனதில் இருத்திவைத்து அதற்கு நேர் எதிராகவே அனைத்து செயலையும்செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால்  அவரால் எந்த ஒரு செயலையும் செய்திருக்க முடியாது.

    அவரை வாழ வைத்தது எல்லாம் "இரு ஸ்டாலின்"கள் மட்டுமே. அதுவே அவரின் வாழ்க்கையின், சிந்தனையின், எழுத்தின் ஆணிவேர். அதனால் தான் சோவியத் ருஷ்ய உடைந்தபோது தானும் உடைந்து விட்டார். அந்த பிம்பம் நேர்மறையாக இருந்தாலும் , எதிர்மறையாக இருந்தாலும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அதுவே ஒருவரின் வேர். அப்பிம்பம் உடையும் போது, தானும் உடைந்து போகிறான்.

    சிறு வயது முதலே கண்ட புறக்ககணிப்பு அவரை அனைத்தின் மீதும் ஒரு பகடிப் பார்வைக் கொள்ள வைக்கிறது. அதுவும் ஒரு இருத்தலியியலே. பிடிப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். உறவுகளின் , உணர்வுகளின் மேல் மீது எழும் அவ நம்பிக்கை, வேறு ஒரு தூணைப் (பகடி) பற்றிக்கொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்கிறது. அது அவருடைய தடித்த கண்ணாடியின் உணர்வு. அந்த தடிமம் தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள தேவையாக உள்ளது. ஆனால் ஆழ்மனதில் வெறும் சிறகாகவே அது உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏங்கிக்கொள்கிறது. தன் மகன் கையால் செய்யும் இறுதிச் சடங்கே அவரை அந்த ஏக்கத்திலிருந்து விடுபட வைக்கும். 

    அவரின் மகனுக்கு அவர் மேல் பிடிப்பில்லை. தன் தந்தைக்கு செய்யும் சடங்கில் நம்பிக்கை இல்லை. தந்தையைப் போலவே அவனும். அவன் அப்படி ஆக இவரும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத தந்தையின் பாசத்தை (தன் இருத்தலியல் காரணமாக) தன் பிள்ளைக்கு இவர் கொடுக்கவில்லை. ஆனால் அதையே அவர் அவனிடம் கடைசியில் எதிர்பார்க்கிறார். இவரின் தந்தை கடைசியில் இவரை எண்ணி ஏங்கியது போல. ஏன் இவ்வாறு சக்கரமாக புறக்கணிப்புகளும் எதிர்பார்ப்புககும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் "தான்" என்னும் எண்ணதிலிருந்தே தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி `தான்` என்ற எண்ணத்தை விடுத்து உலகியலில் ஒன்றி இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைத்தும் "பிரதிகிரகை" தலை அசைப்பில்தான் உள்ளதோ. 

 நம் செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே "நாம்" என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன் உள்ள "எண்ணங்களே" இவற்றுக்கு காரணம். அந்த எண்ணங்களை தீர்மானிப்பதும் நம் "செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே" ஆகும். இது ஒரு சக்கரம் போன்றது என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி