Thursday 14 May 2020

லீலை, நஞ்சு - கடிதம்

                                                            லீலை, நஞ்சு - கடிதம்

அன்புள்ள ஜெ,

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், 'நஞ்சு'வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, 'நஞ்சு'விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் 'நஞ்சு'வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

'நஞ்சு' காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

 

No comments:

Post a Comment