Sunday 24 May 2020

தேனீ - கடிதம்

                                                            தேனீ - கடிதம்

    நினைவு தெரிந்த நாள் முதல் உழைப்பு மட்டுமே செய்து முதுமை அடைந்து இறக்கும் பல்வேறு மனிதர்கள் நம்முடைய முந்தைய சமுதாயத்தில் நிறையே பேர் இருந்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணமாக அந்த கால கட்டத்தில், வருமானம் பெற பலவகையான தொழில்கள் இல்லை. பெரும்பாலும் குடும்ப தொழிலை நம்பியே பிள்ளைகள் பிறக்கிறார்கள். இன்னொன்று, நுகர்வு கலாச்சாரம் என்பது மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை. இன்றுள்ளவர்களில், அந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்வது சற்றே கடினமானது என்றே நினைக்கிறேன். "எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும்."  என்ற வரிகளின் ஆழம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
   
   தேனீ போல கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறார் சம்முகத்தின் அப்பா. வெறும் மூன்று மணி நேரம் தூக்கம். மூன்று வயது முதல் முதுமை காலத்தில் பக்கவாதம் வரும் வரை இதே பிழைப்பு தான். தனக்குப் பிடித்த 'திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை' அவர்களின் ஒரு கச்சேரியை கூட அவர் நேரில் சென்று பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் மற்றவர்கள் கேட்டு வந்து அதை பத்தி பேசும் போதே, அந்த வாசிப்பின் ராகங்களையும் இசையையும் அவரால் உணர முடிந்தது. இசை என்பது மனதின் உள்ளிருப்பது, அது வெளியில் இல்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து கலைக்கும் பொருந்தும். கலையின் ஆக்கத்திற்கு மட்டுமில்லாமல், அதன் உள்வாங்களுக்கும் கூட இது பொருந்துவது போல் உள்ளது.

   பிள்ளை அவர்களின் இசையை கேட்க (அவர் இறந்த பல வருடங்கள் கழித்து) சம்முகம் பிள்ளை தன் அப்பாவுடன  சுசீந்திரம் சென்று அங்கே உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் சென்றமர்ந்தனர். அங்குள்ள தூண்களிலும், சிற்பங்களிலும் அவர் இசையைக் கேட்க ஆரம்பித்து, ஒரு முழு கச்சேரியை கேட்டு முடித்தது, பெரும் வியப்பாக உள்ளது. இசை அவரின் மூச்சில் ஒன்றாக கலந்தது, அதன் மேல் அவருக்கு அலாதி பிரியமும், அதை அனுபவிக்க அவர் காலம் முழுதாகவும் தவம் செய்து கொண்டே இருந்தார். அந்த தவத்தில், இசை தன்னை மீறி தன்னிடமிருந்து தோன்றி தனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவர் இசையாகிய தருணம் அது.

   மிகப்பெரும் தவங்கள் கிட்டிய  பொழுது அதற்கு அப்பால் வாழ்வில் பொருள் ஏதும் இல்லாமல் மனம் தன்னைத்தானே சிதைத்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது. அந்த சிதைவின்  தொடக்கமே மரணமாக முடிகிறது.

 
   

No comments:

Post a Comment