Sunday 19 July 2020

காகிதம் - 2

                                                        காகிதம் - 2

   இன்று 'ராஜ் கௌதமன்' அவர்களின் 'தலித் பார்வையில் தமிழ்ப்  பண்பாடு' என்னும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் அக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை சங்கப் பாடல்களின் வழியே நிறுவ முயல்கிறது. 50 பக்கங்கள் வரை படித்து முடித்துள்ளேன்.
   தினமும் காலையில் 5 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக ஒரு ஒழுங்கு முறையோட கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் பின்பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எப்படியாவது காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சி செய்து ஒரு 2 மணி நேரம் தவறாமல் வாசிக்க வேண்டும். 
   

Thursday 9 July 2020

லாசர் - கடிதம்

                                                 லாசர் - கடிதம் 

அன்புள்ள ஜெ,

     'லாசர்' சிறுகதை வாசித்தேன். காலம் நெடுகிலும் அச்சிறுவன் லாசர் போன்றோரை பார்க்க முடியும். அன்று அந்த கை-கடிகாரத்தை பார்த்து வியப்புற்றோம், இன்று தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டு வியப்புறுகிறோம். 
    லாசர் கதையை படித்த பின்பு ஒரு 'சொன்னதை சொல்லும் கிளியுடன்' உரையாடியது போன்று  இருந்தது. மற்றவர்கள் சொல்லும் அத்தனையும் திரும்பச் சொல்லி, தொடர்ந்து வரும் இரு வாக்கியங்களில் நேர்மாறான கருத்து அர்த்தம் உள்ளது என்று கூட புரியாமல் இருக்கும் சிறுவன். 
    கை-கடிகாரத்தை வண்டாக நினைத்து அதனுள் பாதிரி உயிர் திரும்ப வர வைத்தபோது, தன் 'குட்டி'யே அந்த வண்டின் உருவத்தில் உயிர்த்தெழுந்து வந்ததாக கண்ணீர் வழிந்தான். உண்மையில் லாசரே உயிர்பெற்றான். அந்த 'உயிர்பெறுதல்' புற வயமாக உண்மை இல்லை என்றாலும்,  அதை நம்புவோர் அகத்திற்கு அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அந்த நம்பிக்கை தான் பல உயிர்களை நடத்தி செல்கிறது. ஆனால் உலகத்தில் எல்ல செயலுக்கும் ஒரு விலை உள்ளது போல, அந்த புற வயமான பொய்களால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் வராமலும் இல்லை. 

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.


நிழல்காகம் - கடிதம்

                                                       நிழல்காகம் - கடிதம்
அன்புள்ள ஜெ,

   மூலம் - போலி, உண்மை - நாடகம், shake - drape, பொருள் - நிழல்.
   அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. 'அது' 'தானா'கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.
    இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. 'பொருள் அற்ற ஏற்றல்' - என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
   அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள்  ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று  கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?
    உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக்  கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். 'ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது'. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால்  அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.
   உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் 'இன்பமும், துன்பமும்', 'ஆசையும், கோபமும்' அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய  மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக. மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. 'காமம்-பிரம்மம்', இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது.  'மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல' என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.
       மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. 'அறிதல்' நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 
   

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி