Thursday 9 July 2020

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி




No comments:

Post a Comment