Friday 30 December 2022

சோர்பா எனும் கிரேக்கன்


வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழும் ஒருவருக்கும், எந்தவொரு பெரும் நிகழ்வுகளுக்கும் தன்னை முழுவதும் கொடுக்காமல் வெறும் தர்க்கங்களினால் அனைத்தையும் அறிந்து விட முயலும் ஒருவருக்கும் ஏற்படும் நட்பும், வாழ்க்கையும்  சொல்வதாக இருப்பது "சோர்பா எனும் கிரேக்கன்" நூல். ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்குப்  பிந்தைய காலகட்டத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டது. கதை முழுவதும் 'கிரீட்' என்னும் கிரேக்கத் தீவில் அமைந்துள்ளது. 

ஒரு கடற்கரை தேநீர் விடுதியில் கதை ஆரம்பமாகிறது. தன் நண்பன் தன் தாய் நாட்டு மக்களை காக்கும் பொருட்டு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தருணங்களையும், அப்போது  அவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட விவாதங்களையும் நினைத்தவாறே அமர்திருக்கிறார் கதைசொல்லி. அப்போது திடீரென்று அவரிடம் ஒரு முதியவர் வந்து பேசுகிறார். தன்னையும் அவர் செல்லும் கிரீட் தீவுக்கு அழைத்து செல்லுமாறும், அங்கு நிலக்கரி  சுரங்கத்தில் அவரே தலைமைப் பொறுப்பு ஏற்பதாகவும் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு நன்றாக சமைக்கவும், காய்கறி சூப் வைக்கவும் தெரியும் என்று சொல்கிறார். அவரும் சோர்பா என்ற அந்த அறுபது வயதிருக்கும் முதியவரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

கப்பல் பயணத்தின் போதும், 'கிரீட்' தீவினை நெருங்கும் போதும், சோர்பா அவருடன் பேசிக்கொண்டே வருகிறார். தான் சந்தூரி இசைப்பேன் என்றும், ஆனால் அது எப்போதும் தன்னிச்சையாகவே நிகழும் என்றும் சொல்கிறார். அவர்கள் கடற்கரையில் இறங்கி கிராமத்திற்குள் நடந்து சென்று அங்கிருக்கும் ஒரு "காஃபியக - இறைச்சிக் கடை"க்குள் நுழைகிறார்கள். அங்கு அவ்வூர் மக்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு , நிலக்கரி சுரங்கம் அமைத்து ஊர் மக்களுக்கு வேலை அமைத்து கொடுப்பதாகவும் சொல்கிறார் கதைசொல்லி.

அவர்கள் "ஹார்டென்ஸ்" என்ற முதிய கைம்பெண்ணின் வீட்டில் கடற்கரையோரம் தங்குகிறார்கள். சோர்பாவிற்கும் கதைசொல்லிக்கும் கதை முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒருமுறை தன் தாத்தாவிடம் நடந்த உரையாடலை கதைசொல்லியிடம் சொல்கிறார் சோர்பா. ஒரு பாதாம் மரச் செடியை நடும் போது , சோர்பா "எதற்காக இதை நடுங்குறீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு அவர் தாத்தா "நான் சாகாமல் இருப்பதற்காக இதை நடுகிறேன், இதன் மூலம் நான் உயிர் வாழ்ந்து கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார். அப்போது சோர்பா "நீங்கள் ஒரு நாளும் சாகக் கூடாது என்று வாழ்கிறீர்கள், ஆனால் நான் ஒவ்வொரு நொடியும் இறந்து விடுவேன் என்றே வாழ்கிறேன்" என்று சொல்கிறார். 

உணவின் மகத்துவம்:

மனித இருத்தலில் மிகவும் மேன்மையானதும் , அடிப்படையானதும்  உணவு. உணவினை எப்போதும்  சுவைத்து, அதில் தன்னை இழந்து உண்கிறார்  சோர்பா. அவருக்கு இந்த நொடி தன்  முன் இருக்கும்  வறுத்த பன்றியின் சுவைக்கு தன்னை முழுவதும் ஒப்படைப்பார். உணவும், ஒயினும் வாழ்வின் இன்பங்கள். 

அதே சமயத்தில் நாம் உண்ணும் உணவை நாம் எவ்வாறு மாற்றிக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. ஒரு முறை அவர் "சிலர் உணவினை கொழுப்பாக, சிலர் நகைச்சுவையாக , சிலர் கடவுளாக மாற்றிக் கொள்கிறார்கள்" என்று சொல்கிறார். உணவினை ஆன்மாவாக்குதல். பொருண்மையிலிருந்து ஆன்மாவாக மாற்றுதல். நாம் உணவினை தினமும் எவ்வாறாக மாற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும் அக விடுதலையும் முடிவாகிறது என்றே எண்ணுகிறேன். கதைசொல்லி கடவுளாக மாற்ற நினைக்கிறார்.  சோர்பாவோ நகைச்சுவையாக மாற்ற முற்படுகிறார்.

சோர்பா எப்போதும் அந்நொடியில் வாழ்வதால் வாழ்வின் நடைமுறை சாத்தியங்களோடுதான் அனைத்தையும் அணுகுவார். கதைசொல்லி தன்  பணியாளர்களிடம் அன்பு பாராட்டும் போது, அதை சோர்பா கடுமையாக எதிர்த்தார். "நீங்கள் அன்பு காட்டினால்  அவர்கள் தங்கள் வேலையை உங்கள் மீது கட்டிவிடுவார்கள். இவர்களிடம் ஒரு எல்லையோடு தான் பழக வேண்டும்" என்று கூறுகிறார். இது எப்போதும் ஒரு முரணாகவே மணித வரலாற்றில் அமைந்துள்ளது. நடைமுறையில் வாழ்பவர் புதிய கொள்கைகளில் எப்போதும் ஒரு சந்தேகப் பார்வையுடன் தான் பார்ப்பர். ஆனால் உண்மையில் கொள்கையில் வாழ்பவனே, வரலாற்றில் மக்களுக்கு விடுதலைப் படிகளை அளித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். அது அவ்வரலாறு நடக்கும் போது தெரிவதில்லை. 

சோர்பா கதையின் பல்வேறு பகுதிகளில் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பது, பெண்களை ஒரு காம பொருளாகவே பார்க்கிறார். அது அவர்களின் மேல் உள்ள கருணையால் அவ்வாறு நடந்து கொள்வதாகச் சொல்கிறார். அவருக்கு பெண்கள் சுய விடுதலையை விரும்பாதவர்கள். அவர்கள் ஆண் என்னும் ஊன்றுகோல் கொண்டே அவர்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களின் ஆசைகளையும் இச்சைகளையும் தீர்த்து வைப்பதே ஆணின் கடமை. 

விடுதலை என்றால் என்ன? 

மனித விடுதலை குறித்து வரும் விவாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு திறப்பை அளிக்கின்றன. 

ஒரு சிலையில் கடவுளின் கையில் நடனமாடும் இரு காதலர்களைப் பற்றி பேசுகையில்,ஒரு பெண் "அவ்விரு காதலர்களும் அக்கையிலிருந்து தப்பிச் சென்றாலே உன்னதமான விடுதலை" என்று சொன்னாள். அதற்கு கதைசொல்லி "ஒருவேளை அந்த கடவுளின் கைக்கு கீழ்ப்படிதலே விடுதலை என்று சிலருக்கு இருக்கலாம்" என்றார்.  ஏதோ ஒரு விடுதலையின் தீரா வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கிறது மனம். ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை அடைந்து சென்று கொண்டே இருக்கும் மனம், உண்மையில் விடுதலை தான் அடைகிறதா, இல்லை ஒரு சொல்லில் இருந்து இன்னொரு சொல்லுக்கு தாவிக் கொண்டே செல்கிறதா? அனைத்தையும் தாவித்தாவி இறுதியில் எஞ்சுவது தான் என்ன?

ஒரு முறை சோர்பா "கிரீட்" கிளர்ச்சியில் பங்கி கொண்டு பல உயிர்களை கொள்கிறார். அப்போது அங்கு வந்த அரசர், "கிரீட்" மக்களுக்கு விடுதலை கொடுக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒருவன் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கிழித்து "விடுதலை, விடுதலை" என்று கத்துகிறான். அவருக்கு இதுவே விடுதலை. ஆனால் 'கொலைகள்' விடுதலை அழித்ததால் அதற்கு உண்மையான பொருள் தான் என்ன?

சோர்பா தன முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு கம்பி, வடம் போன்ற பொருட்களை வாங்க 'காண்டியாகா' செல்கிறார். அங்கு ஒரு பெண் இவரை தாத்தா என்று சொல்லி விடுகிறாள். அதனைக் கேட்டு மனம் வெம்பி விடுகிறார். அவளைக் கவர இவர் பணம் நிறைய செலவு செய்கிறார். அவளும் இவரின் பின்னால் வந்து விடுகிறாள். ஆனால் உண்மையில் அவள் இவருடன் இருக்கும் போதும், அவருக்கு அவள் "தாத்தா" என்று அழைத்ததையும், அவர்கள் இருவரும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், ஒருவர் இவரை பெரியவர் என்று சொன்னதற்கும் சோர்பாவிற்குத்  தாங்க முடியாத கோபம் வந்தது. உண்மையில் இவர் தன் முதுமையைக் கண்டு அஞ்சுகிறார். முதுமை, மனிதன் வென்றெடுக்க முடியாத ஒரே பொருள். 

கதைசொல்லி, அனோனஸ்தி  மாமாவிடம் (வாழ்வில் நிம்மதியாக பெயரப் பிள்ளைகள் எடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்) பேசிக்கொண்டிருக்கும் போது, "ஒவ்வொரு மனிதனும் தளைகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மனதிடம் அதைக் கேட்டால் சொல்லும் என்கிறார்".   

இசை, நடனம்:  

சோர்பா சந்தூரி என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்தவர். அவர் அதை ஒரு வனவிலங்கு என்று தான் எப்போதும் சொல்வார். அது நாம் நினைக்கும் போதெல்லாம் இசையை தராது, அது நினைத்தாள் மட்டும் தான் அதிலிருந்து இசை உருவாகும். ஒரு வகையில், அந்த சந்தூரியே சோர்பாவின் ஒரு உருவகம் என்றே நினைக்கிறேன். அதைப்  போலவே அவரும் ஒரு வனத்தில் வாழும் ஆதி மனிதன் போலத்தான் எல்லா இடத்திலும் நடந்து கொள்கிறார். ஆதி மனிதனின் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கிறார். 

சோர்பா நடனத்தால் தான் சொல்ல வந்ததை சொல்லும் திறன் கொண்டவர். ஒரு போரின் போது , தன் சக வீரனும் (அவனின் மொழி இவருக்குத் தெரியாது) , சோர்பாவும் பேசிக்கொண்டிருக்கையில், அவன் பேசுவது இவருக்குப் புரியாமல் போகவே, புரியாதவற்றை அவனிடம் நடனம் ஆடி காட்டச் சொல்கிறார். அவனும் அவர்கள் செய்த போர் சாகசங்களை (மக்களை தீயிட்டு கொளுத்துதல், பெண்களை வன்புணர்வு கொள்ளல், போன்றவற்றை ) நடனமிட்டு காட்டுகிறான். அவர் நடனம் மூலமாக உலகின் அத்தனை உணர்வுகளையும் சொல்ல முடியும் என்று நம்புகிறார்.

அவர் கதைசொல்லியோடு இருக்கும்போது ஒருமுறை தன்னிலை மறந்து உச்ச நடனம் ஆடுகிறார். அவர் சன்னதம் வந்தவர் போல ஆடுவதைக் கண்டு அவர் அஞ்சுகிறார். ஆனால் சோர்பாவோ தன்னை மறந்து எம்பி குதித்து பரவச நடனம் ஆடுகிறார். அந்த எம்புதலில் அவர் இவ்வுலகைகே கடந்து, காற்று வெளியினைத் தாண்டி எங்கோ செல்ல விருப்பப்படுபவர் போன்று நடனத்தில் மிதக்கிறார். அப்போது கதைசொல்லி தான் ஒருபோதும் இவ்வாறு தன்னை மறந்து ஒரு நடனம் ஆட முடியாது என்று எண்ணுகிறார்.

சோர்பாவின் நடனம் எனக்கு பல்வேறு எண்ணங்களை உருவாக்கியது. உண்மையில் கலை தர்க்கதினை உடைக்கும்போது  தான் அது கலையாகிறது. அது நடக்கும் தருணத்தில் தர்க்கம் இல்லை. உண்மையில் கலை தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்கிறது.அதற்கு மனிதன் ஒரு கருவி மட்டுமே. அது கலையாக உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அது நிகழ்ந்த கணம் மீளப்போவதில்லை. நாம் பிற்பாடு பார்ப்பதெல்லாம் அதன் பிம்பத்தை மட்டும் தானோ? 

 நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கம்:

சோர்பா காண்டியாகாவிற்கு சென்ற பொழுது, 'ஹார்டென்ஸ்' அம்மையார் கதைசொல்லியிடம் அவரைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், "சோர்பா உங்களைப்பற்றி நலம் விசாரித்ததாகவும் , அவர் என்றும் உங்கள் நினைவாகவே இருப்பதாகவும், கடிதத்தில் காதல் வார்த்தைகள் எழுதி இருப்பதாகவும்"  அவளிடம்  சொல்கிறார். அதற்கு 'ஹார்டென்ஸ்' அம்மையார் "வேறெதுவும் இல்லையா" என்று கேட்கிறார். தன் இளமைப் பருவத்தில் பல நாட்டு சேனாதிபதிகளின் ஆசை ராணியாக இருந்த அவளுக்கு "ஆசை வார்த்தைக்கும், நடைமுறைக்கும்" உள்ள வேறுபாடு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால், கதைசொல்லி, "சோர்பா உங்களை மனம் செய்து கொள்ள மாலைகள் வாங்கிவருவதாக எழுதியுள்ளார்" என்று சொல்கிறார். ராஜ்யங்களைக் கட்டி போட்ட பேரழகியானாலும் வயது முதிரும்போது, ஒரு தோல் சாய துணை தேவைப்படுகிறது. 

ஒரு முறை சோர்பா தன் முதலாளியிடம், "இத்தீவிற்கு நீங்கள் வந்த உண்மையான காரணம் நிலக்கரி தொழில் இல்லை" என்று சொல்கிறார். கதைசொல்லியும் அதை ஒற்றுக்கொள்கிறார். நண்பனின் பிரிவால், தான் இவ்வுலகை ரத்தமும் சதையுமுமாக  வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற முடிவோடு தான் வந்ததாக சொல்கிறார். அவர் ஆழ்மனம் நம்பியது போல, சோர்பா அவருக்கு நெருங்கிய நண்பராகவும் அவரின் வாழ்வில், நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒருவராகவும் இருக்கிறார்.

தத்துவ விவாதங்கள்:

ஒவ்வொரு முறையும் சோர்பா செயலால் ஏதாவதொரு உச்சத்தை நிகழ்த்தும் போதும், கதைசொல்லி அவரை வியந்து பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, சோர்பாவினுள் இன்னும் அந்த ஆதி மனிதனின் எச்சம் , இயற்கையோடு உறவாடும் மனம் உள்ளது. 

ஒரு முறை சுரங்கத்தினுள் ஏற்படும் ஒரு பேராபத்தில் இருந்து முன்னமே அதை உணர்ந்து எல்லோரையும் காப்பாற்றுகிறார் சோர்பா. யாராலும் அறிய முடியாத சிறு மண் அசைவுகளையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர் அவர். அவர் மண் மீது மண்ணாக வாழ்வதால் தான் அவறால் அதை செய்ய முடிந்தது என்றே நினைக்கிறேன். அனைவரும் அடிப்படையில் மண் தானே. மண்ணின்  வெவ்வேறு உருவங்கள் தான் நாம் அனைவரும். சோர்பாவிடம் இன்னும் அந்த ஆதித்துகள் உயிருடன் உள்ளது. 

கதைசொல்லி அறிவைக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதால் தான், அவர் சோர்பாவைப் போல் இருக்க முடியவில்லை. சோர்பா தன் ஆன்மாவை கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் உலகத்தைப்  பார்க்கிறார். அவருக்கு ஒவ்வொரு செயலும் பெருவியப்பே. ஒவ்வொரு காட்சியும் பேரின்பம். ஒரு முறை நடந்து செல்கையில் ஒரு கல் உருண்டோடுகிறது. அதைக் கண்ட சோர்பா, "பள்ளத்தில் போகும்போது  மட்டும் கல்லிற்கு உயிர் வந்து விடுகிறது" என்கிறார். இதுபோல பல்வேறு தருணங்களில் இயல்பாக நடக்கும் ஒரு சின்ன அசைவையும் பெரு வியப்பாக காண்கிறார்.

கதையின் பல்வேறு இடங்களில் "மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? மனித வாழ்வின் பொருள் என்ன?" போன்ற கேள்விகள் வந்து கொண்டே உள்ளன. சோர்பாவின் கேள்விகளுக்கு கதைசொல்லியால் பலமுறை பதில் கூற முடியவில்லை. அதற்கு சோர்பா "நீங்கள் இது வரை ஒரு டன் எடை உள்ள தாள்களை விழுங்கி இருப்பீர்கள், ஆனால் எந்தக்  கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் இந்த நூல்களினால் என்ன தான் பயன் ?" என்று கேட்கிறார் . அதற்கு கதைசொல்லி "இந்நூல்கள் விடை அறியா கேள்விகளுக்கு, விடை காண முயலும் மானுட சிடுக்குகளை கூறுகிறது"  என்று பதில் சொல்கிறார். உண்மையில் நூல்களினால் எந்த ஒரு விடையும் நேரடியா அறிய முடியாது என்றே நானும் நினைக்கிறேன். அவை சொல்லும் தர்க்கங்களை, உணர்வுகளால் அனுபவங்களாக மாற்றிக் கொள்ளாத வரை அவை வெறும் சொற்களாகவே எஞ்சும் என்றே நினைக்கிறேன். அந்த அனுபவங்கள் வழியாகத்தான் ஒருவருக்கு விடை கிடைக்கும்.

கதைசொல்லி புத்தரைப் பற்றி புத்தகம் எழுதுவதும், அவரின் சொற்களால் தன்னை ஆராய்ந்து பார்பதுவமாகவே கதை முழுவதும் இருக்கிறார். மானுட உச்சத்தைத்தொட்ட  "கடைசி மனிதன்" புத்தர் தான் என்றும் நினைக்கிறார். அவர் கடைசியாக வாழ்ந்து விட்டார். ஆனால் இவரோ இன்னும் ஆரம்பத்திலேயே இருக்கிறார். புத்தர் அனைத்தையும் விளக்கியது போல, கதைசொல்லிக்கு புத்தரை தன் மனதிலிருந்து விலக்கினாள் மட்டுமே அவர் அகம் விடுதலை அடையும் என்று நினைக்கிறார். அது அவர் புத்தரைப் பற்றி எழுதிய புத்தகத்தை முடித்தவுடன் மட்டுமே, அவருக்கு கிடைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். 

தனக்கும் சோர்பாவுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடாக கதைசொல்லி பார்ப்பது, "சுய உரையாடல்". சோர்பா எப்போதும் உரையாடிக்கொண்டோ கேள்விகளைக் கேட்டு கொண்டோ இருக்கிறார். ஆனால் இவர் எப்போதும் தன் அறிவினால் மட்டுமே அனைத்திற்கும் விடை காண விரும்புகிறார்.  சோர்பாவிற்கு அக்கேள்வியின் விடைகள்கூட அவ்வளவு முக்கியமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு போதும் அறிவினால் உலகத்தைப் பார்க்கவில்லை.

நித்திய லயம்:

இயற்கையின் நித்திய லயத்தில் எப்போதும் ஒத்திசைவோடு இருப்பவர் சோர்பா. வாழ்க்கையின் இன்பங்களில் ஆனந்தம் கொண்டு , துன்பத்தில் கண்ணீர் சிந்தி , அதை கடந்து செல்பவர் சோர்பா. ஆனால் கதைசொல்லி எந்த ஒரு செயலின் பின்னாலும் தர்க்கங்களை அடுக்கி , அந்த தர்க்கத்தின் மேல் படுத்து வாழ்பவர்.  தான் காதல் கொண்ட கைம்பெண் கொடூரமான முறையில் தன் கண்ணெதிரே கொலை செய்யப்படுகிறாள். அந்த சம்பவத்தினை தர்க்கப் பூர்வமாக ஏற்று, அதற்கு தனக்கு ஏற்றவாறு விளக்கம் கொடுத்து தன்னால் கடந்து சென்று போக முடியும் என்றே கதைசொல்லி தன்னைப்பற்றி நினைக்கிறார்.  

ஒரு முறை கூண்டைவிட்டு வெளியே வந்து தன் சிறு சிறகுகளை அடிக்கத்துடிக்கும் பட்டாம்பூச்சியை பார்க்கிறார் கதைசொல்லி. அது தன் கூட்டை விட்டு கஷ்டப்பட்டு வெளிவருவதை பார்த்ததால், அதற்கு உதவி செய்யும் பொருட்டு அந்த கூட்டினை கொஞ்சம் கையால் இழுத்து விடுகிறார். இதனால் அந்தப் புழு சட்டென்று வெளியே வந்ததால் அதன் சிறகுகளில் போதிய வெப்பம் சக்தியும் இல்லாததால், அது பறக்கத் துடித்து பரிதாபமாக இறந்துவிடுகிறது. அவர் எப்போதும் தன் அறிவால் உலகத்தைப் பார்ப்பதால் அவரால் இயற்கையின் நடைமுறைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

கதைசொல்லி தனிமையில் காட்டில் ஒரு இடையனை காண்கிறார். இடையன் கேட்ட ஒரு சிகரெட் இல்லாததால் ,அவனுக்கு பணம் தருகிறார். அதற்கு அவன் அதனை மறுத்து விடுகிறான். அவர் ஆன்மாவினைபி பற்றி சிந்தித்தவாறே வஞ்சினக் கன்னி மரியாள் கோவிலுக்கு செல்கிறார். தன் கால்கள் தன் ஆழ்மனம் தேவை செய்ய அனிச்சையாக கோவிலை நோக்கி செல்கிறது. 

அற்புதங்களில் மனம்:

வனத்தில் கம்பி வழித்தடம் அமைத்து மரத்தொழில் செய்வதற்காக மதகுருவிடம் கையொப்பம் வாங்குவதற்காக மடாலயம் செல்கிறார்கள் சோர்பாவும், கதைசொல்லியும். அப்பொழுது அங்கு ஸஹாரியா  என்றொரு பாதிரி வழித்துணையாக வருகிறார். அங்கு அவர்கள் பாதிரிமார்களின் ஊழலையும், அயோக்கியத்தனத்தையும் காண்கிறார்கள். அவர்கள் அங்கிருக்கும் போது, ஒரு கொலை நடக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு சோர்பா அந்த வனத்தினை பாதி விலைக்கு வாங்குகிறார். தன் முதலாளியின் பணத்தை காண்டியாகவில் செலவு செய்வதை ஈடுகட்ட இதை அவர் செய்ததாக கூறுகிறார். வஞ்சினக் கன்னி மரியாள் பெயரை வைத்து இதை அவர் செய்து முடிக்கிறார். 

ஸஹாரியா மடாலயத்தை தீயிட்டு கொழுத்திவிட்டு கீழிறங்கி கடற்கரையோரம் வருகிறார். அவரைக் கண்டவுடன்  சோர்பா அங்கே என்ன நடந்தது என்று புரிந்து கொள்கிறார். அவரை அழைத்து ஊன் உணவையும், ஒயினையும் கொடுக்கிறார், ஆனால் அவர் வேண்டாம் என்கிறார். அதற்கு சோர்பா "உனக்கு இல்லை என்றாலும், உன்னுள் இருக்கும் சாத்தனான ஜோசேப்புக்கு சாப்பிடு" என்று சொல்கிறார். ஆனால் அதற்கு அவர் "மடாலயத்தை எரிக்கும் போதே , ஜோசேப்பும் சேர்ந்து எரிந்து விட்டான்" என்று பதில் கூறுகிறார். 

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு புள்ளியில் இவை அனைத்தும் அர்த்தமற்றவை என்று உணர்கிறான் என்றே நினைக்கிறன். ஆனாலும் அதற்கு மேல் செல்ல பெரும்பான்மை மக்களால் முடிவதில்லை. ஆதலால் அவன்  என்றுமே அற்புதங்களை எதிர்பார்க்கிறான். தன் நம்பிக்கையை உடைக்கும் அற்புதத்தை. அதுவே அவனின் மீட்சி. இவ்வுலகில் அவன் ஊன்றி  நிற்பதற்கு அது தேவைப்படுகிறது. கடலருகே இறந்த ஸஹாரியாவை சோர்பா மடாலயத்திற்கு தூக்கிச் சென்று "வஞ்சினங் கன்னி மரியாளின் ஈட்டிக்கு" கீழே இட்டுச் செல்கிறார். துறவிகள் இதைக் கண்டதும் அற்புதமாக நினைத்து மரியாளை மன்றாடுகின்றனர்.

நான் வாசித்ததிலேயே (அணைத்து புத்தகத்தையும் சேர்த்து) கண்ணில் நீர் வர, வயிறு வழிக்கச் சிரித்த பாகம் "கம்பிவடத்  தடம்" திறந்து, மரங்களை அதன் வழியே மலை மீதிருந்து இறக்குதல். பாதிரிகளும், ஊர் மக்களும், தொழிலாளர்களும் பார்க்க அது  அரங்கேறுகிறது. அன்னை மரியாளின் அற்புதன் தான் இந்தக் கம்பித்தடம் என்று ஆரம்பித்து சோதனை ஓட்டங்களை செய்கிறார்கள். பாதிரிமார்கள் அருள, சோர்பா கையசைக்க  ஒவ்வொரு முறையும் மரம் கம்பிதத்தில் வர மறுக்கிறது. சோர்பா , தன் முதலாளிக்கு ஒட்டு மொத்தமாக அனைத்தையும் ஒரு காலைப்பொழுதிலே நட்டம் செய்துவிடுகிறார். பின்னர் இவர்கள் மட்டும் அதனை நினைத்து நினைத்து தனிமையில் வெடித்துச் சிரிக்கின்றனர். 

விடுதலை என்பது இன்றிமையாதவற்றின் தோல்வியிலிருந்து உருவாகிறது என்று உணர்கிறார் கதைசொல்லி. அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும் நாம் சுதந்திரமானவர்களா என்ற கேள்வி எப்போதும் உள்ளது. ஒரு தோல்வியில் நாம் நம் காலடி நிலத்தை விட்டு மேல செல்கிறோம். ஏனென்றால் அந்த தோல்வியை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம் கைக்கு அப்பாற்பட்டது. அங்கு நம் கால்களை தூக்கி விடுதலையானவர்களாக உணர்கிறோம் என்றே நினைக்கிறன்.

தன் நண்பனை விட்டு கதைசொல்லி  பிரியும் பொது "ஒருவருக்கு ஆபத்து வருமாயின் இன்னொருவர் அதனை குறிப்பால் உணர்த்தும் பொருட்டு சிந்திக்க வேண்டும்" என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் இருவருக்குமே அதில் துளியும் நம்பிக்கை இல்லை. ஒரு நாள் ஸுரிச்சில் கதைசொல்லி இருக்கும்போது , ஒரு தீக்கனா காண்கிறார். அதன் பிறகு சிலநாட்கள் கழித்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அதைப் பிரித்து பார்க்காமலே அதில் உள்ளது என்ன என்று அவருக்குத் தெரிகிறது.

மனிதனின் உச்ச செயலாக இருப்பது "களங்கமற்ற வியப்பு". அது இருப்பதனால் தான் சோர்பா எப்போதும் மகிழ்வாக உள்ளார். அவர் எதைப் பார்த்தாலும் அதில் உள்ள வியப்பினை ஒரு போதும் விடுவதில்லை. 

சோர்பா தன் முதலாளியால் ஒரு போதும் விடுதலை அடைய முடியாது என்றே சொல்வார். விடுதலைக்கு தேவை மடமை. அது அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்று சொல்வார். ஆனால் அது சோர்பாவிற்கு செர்ரி போல, கதைசொல்லிக்கு மசியும், தாள்களும் எழுத்தும். அவர் கண்டடைந்தது அதுவே. "ஒரு வாசிக்கப்படாத இறை இசைக்கருவி எப்படி பக்தியை உருவாக்காமல் வெறும் கலையை உருவாக்குமோ அதைப்போல என்  இறை உணர்வுகள் அனைத்தும் கலையாக எழுத்தாக உருவாகியுள்ளது". இதுவே அவர் அவரையே கண்டடைந்த நேரம் என்று நினைக்கிறேன். 

இறுதியில் சோர்பாவும், கதைசொல்லியும் பிரியும் நேரம் வருகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்த வாழ்க்கை இன்பமயமாதக இருந்தது. சோர்பா அதன் பிறகு வேறு வேறு நாட்டில் வேலை செய்கிறார். கதைசொல்லிக்கு கடிதமும் அவ்வப்போது எழுதுகிறார். 

இறுதியில் சோர்பாவும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு மறைகிறார். கதைசொல்லிக்கு அப்பொழுதும் ஒரு கடிதம் வருகிறது. சோர்பாவின் இளம் மனைவி அவரது சந்தூரியை எடுத்து செல்லும்படி அதில் எழுதி இருந்தது.

பல வாசிப்புகளுக்கு உரிய புத்தகம் இது. ஒரு வாசிப்பில் நாம் இதில் கொஞ்சம் தான் பருக முடியும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு கல் புரண்டோடும் போதும் சோர்பா நம் கண் முன்னாள்  மின்னல் கீற்றாக வந்து செல்வார். வாழ்வின் பல்வேறு தருணத்தில் ஆழ்மனதில் இருந்து தானாக சோர்பா வெளிப்படுவார். ஒவ்வொரு அனுபவங்களும் ஒரு தனித்துவமான மனித அடிப்படையை நோக்கி கேள்வியாகவும், சில சமயம் பதிலாகவும் ,சில சமயம் மனித மனங்களின் முரணாகவும் வெளிப்படுகிறது. மீள் வாசிப்பின் ஊடே மனதில் விரிந்து  செல்லக்கூடிய புத்தகம் இது. 

Tuesday 2 August 2022

காடோடி



திரு. நக்கீரன் அவர்களின் "காடோடி" நாவலை வாசித்தேன். காடு சார்ந்த உணர்வும், அறிவும் ஒரு காடோடியிடமிருந்து ஒரு காடுவெட்டி உணர்கிறான். காட்டில் உள்ள கோடானு கோடி உயிர்களில் ஒருவனாக தன்னை உணரும் போதே அவன் இயற்கையை அறிய தொடங்குகிறான். கடலின் துளி தானும் ஒரு கடலே என்று உணர்வது போல. தானும் இயற்கையின் ஒரு அங்கமே என்று உணரும் நிலை.

காடோடி வாசித்து முடித்ததும் ஒரு காட்டுக்குள் சென்று வாழ்ந்து வந்த அனுபவம். காட்டின் அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து, அறிந்து கிடைக்கும் ஒரு உச்ச நிலை. இதில் வரும் கதை சொல்லியின் வழியாக நம்மை கினபத்தாங்கன் நதிக்கும், அதைச் சுற்றியுள்ள மழைக்காடுகளுக்கும் அழைத்துச் செல்கிறார். காட்டை அழித்து கட்டையாக்கி வணிகம் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் நம் கதைசொல்லி என்பது நகைமுரண்.

கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக்  காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி.

ஒரு காடுவெட்டும் தொழிலில் உள்ள அத்தனை நுண் தகவல்களையும் சொல்லும் வேலையில் அதில் ஈடுபட்ட அந்த மக்களின் பின்னணிகளையும், சூழல்களையும் விவரிக்கிறது இந்நாவல். பல்வேறு இன, மத, மொழி  கொண்டவர்கள் முகாமில் நட்போடு  உள்ளனர். 

கினபத்தாங்கன் நதியும், அதன் கிளை ஆறுகளும் நதி வெட்டிச் செல்லும் மழைக்காடுகளும் அக்காடுகளில் வசிக்கும் பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் இந்நாவலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை விலங்கினை பற்றியோ , பறவை பற்றியோ கூறும்போது அதன் உடல் அமைப்புகளும், மற்றும் அதன் செயல்பாடுகளும் அது நடமாடும் அழகினையும், பறக்கும் விதத்தினையும் , நிற வேறுபாடுகளின் அழகினையும், காட்டில் அணுவணுவாய் வாழ்ந்த ஒருவரால் தான் இவ்வளவு துல்லியமாக விவரணைகள் கொடுக்க முடியும். உதாரணமாக, ஒரு இடத்தில் வௌவால்கள் இரவில் குகை விட்டுப் போகும் நேர்த்தியினை விவரிக்கும்போது , ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு வௌவால்களாக வானமே ஒரு மிகப்பெறும் வௌவால் அடுக்குகளாக மாறின என்று கூறுகிறார்.

காடு சென்ற முதல் நாளே காட்டில் ஓமரும், கதை சொல்லியும் தொலைந்து விடுகிறாரகள். அவர்கள் அவ்விரவில் மழையில் திசைகள் தொலைத்து எங்கோ ஒரு பாறை இடுக்கில் தங்கி விடுகின்றனர்.  ஓமருக்கும், கதை சொல்லிக்கும் அங்கிருந்தே நல்ல நட்பு உருவாகிறது. ஒரு தகப்பன் போல ஓமர் அவரைப் பார்த்துக் கொள்கிறார். காட்டில் தொலைந்து மறுநாள் தன் சக ஊழியர்களை தேடி , இறுதியில் சந்தித்த போது  அவர்களிடம் இருந்த அந்த உணர்வினை, பிள்ளை அன்னையை தொலைத்துவிட்டு, மீண்டும் கண்டுபிடிக்கும் போது உருவாகும் உணர்வு. 

அந்த காட்டில் மட்டும் தான் பத்து  வகையான பிரைமேட்கள் இருப்பதாக அறிந்தவுடன், தான் இந்த காட்டை விட்டு போவதற்குள், எப்படியாவது அத்தனையும் பார்த்து விட ஆசைப்படுகிறார். அவர் ஒவ்வொன்றாக எதிர்பாக்காத தருணங்களில் பார்க்கிறார். காடு நினைப்பதைத்தான் நாம் காண முடியும். ஓரங் ஊத்தான், துபையா, பறக்கும் லீமர் போன்ற பல்வேறு பிரைமேட்களை அங்கு காண்கிறார். ஒவ்வொரு விலங்கும் தன் உடலமைப்பில், தான் உண்ணும் உணவில் வேறுபடுகின்றன. அதனை துல்லியமாக பதிவு செய்கிறார். 

நாவலின் தொடக்கத்தில் இருந்தே நம்முடன் பயணிக்கும் ஒரு பறவை இருவாசி. காட்டின் முதல் மரம்  வெட்டுப்பட்டதும், அந்த இருவாசிப் பறவைகளின் குமுறல்கள் காதில் கேட்டுக்கொண்டே உள்ளது. அவை காட்டின் முதல் நிலை காவலர்கள் போலும். அந்த இருவாசிப் பறவைகளின் கூடு கட்டும் திறன் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. அவை தன் எச்சலைக் கொண்டு கூடு கட்டி அதில் குஞ்சுகளை வைக்கிறது. 

மனிதன்  எங்கு வாழ்ந்தாலும் தன் பண்பாட்டுப் படிமங்களினாலே வாழ்கிறான். அவன் தன்னுள் உள்ள பயம், ஆசை, பற்று, அன்பு, குரோதம் ஆகிய அனைத்தையும் தன்னுடன் எப்போதும் சுமந்துக் கொண்டு தான் இருக்கிறான். முகாமில் பலருக்கு இரவில் யாரோ ஒருவர் தன்னை எழுப்புவதாக தோன்றுகிறது. அந்த முதியவர் தோற்றத்தில் இருப்பவர் ஒரு பேய் என்று அவர்கள் அஞ்சினர். அவர்களிடம் அதை மறுத்து நான் தனியாக தூங்குவேன் என்று பங்கலானில் தனியாக தூங்கும் போது, ஒரு சிறு படகில் ஒரு முதியவர் வந்திறங்குகிரர். நாவல் முழுதும் இம்முதியவர் தான் பல்வேறு கட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார். ஒரு எளிமையான காட்டு வாழ் உயிரி தான் அந்த பிலியவ்.  

நாவலில் பல்வேறு தொல்குடி மக்களைப் பற்றியும் அவர்கள் சடங்குகள், நம்பிக்கைகளையும் பேசப்படுகிறது. முருட் , தொரோஜா இனங்களை சேர்ந்தவர் தான் முறையே ஜோஸும், யோகன்னாவும். இவர்கள் இன வரலாறுகளையும், தொன்மங்களையும் பேசும் பல்வேறு கிளை கதைகள் நாவலில் உள்ளன.  

ஜோஸ் கதை சொல்லிக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகிறான். அவன் கம்போங்கிற்கு சென்று இரு நாட்கள் தங்குகிறார். அவருக்கு விருந்தளிக்க ஒரு நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் ஜோஸ் தன் பூர்வ குடி உடை அணிந்து அற்புதமாக நடனம் ஆடுகிறான். அங்கு ரலாவும்  இனிமையாகப்  பாடுகிறாள். அவர்களின் தூய அன்பினால் ஆட்கொள்ளப்படுகிறார். ரலாவுக்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. அவள் பாடும் இன்னிசையை துளி துளியாக தன்னுள் ஏற்றுகிறார். அவள் மொழி வேறு, அவர் மொழி வேறு. 

ஜோஸ் ஒரு முறை, தான் ஒரு இன்னிசையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கட்டையின், மேல் சாய்ந்து கொண்டிருந்தான். எந்த ஒரு கருவியும் இல்லாமல் எப்படி இசையை  கேட்க முடியும் என்று அவர் கேட்க, அவன் அதற்கு 'ஒவ்வொரு இலையும் காற்றில் மோதும் சத்தமே ஒரு பண்ணிசை, ஒவ்வொரு இலையும் வெவ்வேறு இசையினை உருவாக்குகிறது. மெலிந்த, தட்டையான, சொரசொரப்பான என்று வெவ்வேறு இலைகள் வெவ்வேறு இசையினை வாசிக்கிறது'. என்று கூறினான். இதனை கேட்டவர் , இதனை அனுபவிக்க தனக்கு ஒரு தொல்குடி மனம் இருந்தால் தான் முடியும் என்றார்.

காட்டில் நடக்கும் வேட்டையின் நியதிகளை பிலியவ் கூறுகிறார். அது அத்தியாவசிய/ஆடம்பர வேட்டைக்கும் , மற்றும் தொல்குடி/ துப்பாக்கிக்குடி வேட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறது. எந்த பருவத்தில், எந்த விலங்கை எப்படி வேட்டையாட வேண்டும் என்று விளக்குகிறார். கடமான் , பன்றிகள், தென்படாவ் என்ற காட்டுமாட்டு இனம் முதலியவை  வேட்டையாடப்படுகின்றன. அதில் தென்படாவ் வேட்டை மிகவும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது.

பிலியவ், தான் காட்டில் கண்ட ஒரு "மூதாய் மரம்" , தன்னுடன் பேசியதைக் கூறுகிறார். அந்த "சிலாங்கன் பத்து" மூதாய் மரத்தினை வெட்ட வேண்டாம் என்று ஓமர் முடிவெடுத்தாலும், அது வெட்டப்படுகிறது. இதனால் மனம் உடைந்து ஓமர் வேலையை விட்டுச் செல்கிறார். மனிதன் ஒரு நடமாடும் இயந்திரமாக மாறினாலும் அவனுக்குள் இருக்கும் முரண்களும், கோபங்களும் என்றோ ஒரு நாள், ஒரு புள்ளியில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாட்டின் ஒரு தூண்டுகோல் தான் வெட்டப்பட்ட அந்த மூதாய் மரம்.  அந்த காட்டிற்கே அது தான் தொல்மரம்.அங்குள்ள அனைத்து உயிர்களும் அதன் குடிகளே. அதன் கனியில் விளைந்த காட்டின் ஆணி வேர் வெட்டப்பட்டது.

பிலியவ் ஒரு சாகச மனிதராகவே எப்போதும் இருக்கிறார். அவருக்கு அந்த காட்டில் தெரியாதது ஏதும் இல்லை என்பது போன்றே தோன்றுகிறது. அவர் எப்போது வருகிறார், எங்கு தங்குகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு செயலையும் அறத்தோடு செய்கிறார். அறம் என்னும் விழுமியம் இருப்பதும் அவருக்கு தெரியாது. இறுதியாக கதை சொல்லி தான் அங்கு வந்து உழைத்த அத்தனை பணத்தையும் இழந்த பிறகு, "தான் செய்த மரம் வெட்டும் தொழிலில் கிடைத்த பாவங்கள் அனைத்தும் அந்த பணத்தோடு தொலைந்து போனது" என்று சொன்னபோது, பிலியவ் "நீ இன்னும் காட்டு மனம் அடையவில்லை" என்று கூறுகிறார். 

மனிதர்களின் அத்தனை மனக்கணக்கினையும் காடு இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதனால் திரும்பவும் ஒரு காட்டின் நியதிகளையும், கணக்குகளையும் முற்றிலும் உணரவே முடியாது. அது நம்மிடமிருந்து அறுந்து பல காலம் ஆகிறது. நாம் அதனை உணர காட்டிலேயே தவம் இருந்தால்கூட முடியாது. வெட்டப்பட்ட மரம் வேர் காணுவதில்லை. நாம் வெட்டிய-மரத்தினினுள்ள ஒட்டிய வேரையே  மரம் என்றெண்ணுகிறோம். ஆனால் உண்மையான வேர் காட்டின்  ஆழத்தில் கிளை பிரிந்து , கைகள் கோர்த்து பிரமாண்டமாய் உள்ளது. அது மானிடக் கண்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை. ஆனால் நாம் அதனை ஏன் காண வேண்டும். கண்டால் மட்டும் அதனை நாம் உணர்ந்து விடுவோமா என்ன?  அவ்வேரினை உணர இக்காடோடி ஒரு தொடக்கம். 

Monday 27 June 2022

தருமபுரி பூர்வ சரித்திரம்


தர்மபுரியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பினும், இவ்வூரின் வரலாறு பொதுவாக, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் ஆண்டது என்பதைத் தாண்டி வேறு எதுவும் தெரியாமல் இருந்தது.

'தருமபுரி பூர்வ சரித்திரம்' என்னும் நூல் D. கோபால செட்டியார் அவர்களால் 1939ல் எழுதப்பட்டது. இந்நூலின் பிரதிகள் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நூலினைப் பற்றி 'தருமபுரி மண்ணும் மக்களும்' என்ற நூலில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதனை வைத்துக் கொண்டு இந்த நூலினை எவரிடமாவது கேட்டுத் தெரிந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அலைந்து, அதனை ஒரு நூலகத்தில் கண்டு பிடித்து, அதனை பிரதி எடுத்து, ஒரு புதிய பதிப்பாக பதிப்பித்த ஆசிரியர் தங்கமணி அய்யாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

இந்நூலில் D. கோபால செட்டியார் அவர்களின் ஆளுமைச் சித்திரத்தையும், அவர் லேவ் டால்ஸ்டாய் உடன் கடிதத் தொடர்பில் இருந்துள்ளார் என்பதையும் வாசிக்கும் போது, இப்படியொரு ஆளுமையை நாம் அறியாமல் இருந்தது ஒரு பேரிழப்பே என்பதில் ஐயமில்லை. அவர் எழுதிய இன்னும் பிற நூல்களான 'New Light Upon Indian Philosphy' என்ற நூலினை லண்டனில் 100 ஆண்டுக்கு முன்னரே வெளியிட்டுள்ளார். இவர் சைவ சித்தாந்தத்தில் ஒரு நூலையும் , இன்ன பிற பூர்வ சரித்திர நூல்களையும் எழுதியுள்ளார்.

'சங்க இலக்கிய பாடல்களை வைத்து இன்றைய தர்மபுரி என்பது தகடூர் தான் என்றும், அதனை ஆண்டவன் அதியமான் என்றும், அவனது போர் வல்லமைகளை விவரிக்கிறது இந்நூல். அதே சமயம் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை எரித்தான் என்றும், அதற்கு பின்பு, சேரர்களாலும், சோழர்களாழும் ஆட்சி செய்யப்பட்டு, இதனை விஜயநகர அரசனின் மருமகன் ஜகதேவராயர் ஆட்சி செலுத்தி வந்துள்ளான். இப்பொழுது சேலம் என்று சொல்லப்படுகிற பாராமஹாலுக்கு அவனே அரசன். அவனே தகடூருக்கு தர்மபுரி என்று பெயர் மாற்றம் செய்தான்.

பின்பு இது நாயக்கர்களிடம், திப்பு சுல்தான் கைவசமிடமும் இருந்து ஆங்கிலேயர்களிடம் சென்றது. 1792 முதல் 1798 வரை தர்மபுரிக்கு சப் கலெக்டராக இருந்தவர் 'சார் தாமஸ் மன்றோ'. இவர் ஒரு வரலாற்று நாயகர். இவர் பெயர் கொண்ட கல்லால் அடித்த சாசனம் ஒன்று தர்மபுரியில் இன்றும் உள்ளது என்று கூறுகிறார்  கோபால செட்டியார். இவருக்கு பின் வந்த சப் கலெக்டர் காலத்தில் ஒரு குளம் வெட்டியதும், அந்த குளம் இன்றும் உள்ளதும் அவற்றினை சென்று பார்க்க ஆவலைக் கூட்டுகிறது.

வாசிப்பதற்கு 30 பக்கங்கள் கொண்ட நூலே ஆனாலும், வரலாற்றுப் பார்வையுடன் எழுதிய இந்நூல் தர்மபுரி மக்களுக்கு ஒரு பொக்கிஷமாகும். இதிலிருந்து இன்னும் பல நூல்களையும், ஆராய்ச்சிகளையும் நாம் சென்று சேரலாம்.

வரலாற்றில் நாம் மறந்த பல்வேறு மனிதர்கள், எங்கோ உறங்கிக் கொண்டுத்தானிருக்கிறார்கள். அவர்கள் உறக்கத்தை வரலாற்றின் ஊடாக அவர்களே திரும்பிப் பார்த்துக் கொள்கிறார்கள் நம் கண்களின் வழியாக. ஒரு வழியில் நாம் அவர்களை பார்ப்பது இல்லை, அவர்களே தான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். நாம் என்பது அவர்களின்  நீட்சி தானே.




Sunday 29 May 2022

வெள்ளை யானை

தங்களின் "வெள்ளை யானை" நாவலை வாசித்தேன். 

நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் மக்களின் முதல் உரிமை போராட்டமும், இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேலை நிறுத்தமும் சொல்லும் நாவல். 1870-களில் நடக்கும் சம்பவங்களாக நாவல் செல்கிறது. அப்பொழுது ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர். அதன் பின்னணியில், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்தவர்களின் ஒரு உரிமைப்போராட்டத்தையும், ஏய்டன் என்னும் ஒரு ஐரிஷ் கேப்டனின்  (சென்னை மாகாணத்தில் கடற்கரை பகுதிக்கு கேப்டன்) உளப் போராட்டத்தின் வழியாக ஆங்கிலேயர்களின் அறமீறல்களையும், இங்கு இருந்த மேல்சாதி மக்களின் கொடுமைகளையும் சொல்லும் நாவல். 

உலகத்தின் ஆண்டைக்கும், உள்ளூர் ஆண்டைக்கும் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதில் யார் மேலானவர்கள் என்னும் போட்டியே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த சமூக மக்கள். இவற்றுக்கு எந்த ஒரு பொறுப்பும் ஏற்காமல் மாறாக இவர்களையே பயன்படுத்திக் கொண்டு உலகம் வியக்கும் பல்வேறு கட்டிடங்களையும் கட்டியுள்ளனர் ஆங்கிலேயர்கள்.

'ஐஸ் ஹவுஸ்' என்று சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் அமெரிக்காவில் இருந்து பனிமலைகள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு, அதை உடைத்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பனிக்கட்டிகளை பெரும்பாலும் வெள்ளையர்கள் மது குடிக்கும் போது பயன்படுத்துவர். அந்த தொழிற்சாலையில் கூலிகளாக தாழ்த்தப்பட்ட மக்களே உழைத்தனர். அவர்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதற்காக மேல்சாதிகளை  சேர்ந்த கங்காணிகள் இருந்தனர். ஏய்டன், ஒரு கங்காணி இருவரை சவுக்கால் அடிப்பதை பார்க்கிறான். தன் கால்கள் ஐஸ் ஹவுசில் வேலை செய்து செயலிழந்து விட்டதனை அவன் சொல்லியும், கீழே விழுந்த அவனை அந்த கங்காணி தூக்க மறுக்கிறான். அது ஏய்டனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. தான் என்ன தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனை தொட வைக்க முடியாது. அதற்காக இவர்கள் செத்தாலும் கூட சாவார்கள் ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். 

ஐஸ் ஹவுஸில் மக்கள் வெறும் கைகளால் வேலை செய்கிறரர்கள். அதனால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. அவர்கள் ஒரு புழுக்களாகவே நடத்தப்படுகிறார்கள். நாட்டில் இருக்கும் பஞ்ச நிலையை பயன்படுத்திக் கொண்டு, முதலாளிகளும் மிகவும் குறைந்த கூலியியையே கொடுத்தனர். பனி மலை திடீர் என்று உருகி பக்கத்தில் உள்ள அனைவரையும் நசுக்கும். அதில் உயிர் பிழைத்தால் அதிர்ஷ்டம். அது எப்போது கால்கள் கொண்டு மக்களை கொல்லும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் இது அந்த மக்களின் ஆண்டையின் மனநிலையும் கூட. ஒவ்வொரு பனி மலையும் ஒரு வெள்ளை யானை. அது உருகி கால்கள் கொண்டு, எதிரில் இருக்கும் அனைவரையும் நசுக்கிவிடும்.  

சிப்பாய்க்கழகத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இந்தியாவின் சாதி மத அமைப்புகளில் கை வைக்க கூடாதென்று. ஏனெனில் அதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. மற்றும் இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் வழியாக இங்குள்ள மேல் சமூகத்தினர் தான் ஆட்சி செலுத்துகின்றனர். அவர்கள் வழியாகவே இங்கு ஆட்சி நடத்த முடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து உள்ளது. கேப்டன் ஏய்டனின் குதிரை வண்டியை ஒரு தீண்டத்தகாதவன் ஒட்டியதனால், அதனை அவன் வண்டி ஓட்டி (மேல் சமூகத்தினை சேர்ந்தவன்) முதலில் கழுவிவிட்டு ஓட்டுகிறான். ஏய்டன் அவன் ஹவில்தார் மற்றும் அவன் படைப்பிரிவில் உள்ள அனைவரும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

நாவலில்  ஏய்டனுக்கும் காத்தவராயனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக முக்கியமானவை.  காத்தவராயன் அடிமை சமூகத்தில் நன்கு படித்த ஒருவன். 'வெள்ளையர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சங்களால் கோடிக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படி இருந்தும் ஏன் அவர்களை நீ நம்புகிறாய்?' என்ற ஏய்டனின் கேள்விக்கு அவன் கூறும் பதில், இந்தியாவின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டியது. ஒரு மனிதன் அடிமையாக பிறப்பதில்லை, அவன் நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்து, அவன் அடிமை என்பதற்கு மேல் வேறெதுவும் யோசிப்பதில்லை. அவன் அடிமை என்று அவனிடம் சொல்ல, ஒரு வெளியாள் அவனுக்கு தேவை படுகிறது. அது ஆங்கிலேயர்களின் மொழியும், கல்வியுமே.

வெள்ளையர்கள் இவர்களை மீட்க அவர்களை மதம் மாற்றுகின்றனர். மதம் மாறினாலும் அவர்களின் சாதி, அவர்களோடு தான் வந்துகொண்டிருக்கிறது. வெள்ளைய மதவாதிகள்  இவர்களை சுயநலத்திற்காக மதம் மாற்றுகின்றனர். வெள்ளைய அரசியல்வாதிகள் இவர்களின் சோற்றில் கால் வைத்து பசியால் சாகவைக்கின்றனர். இந்திய மேல் சமூகத்தினர் இவர்களை புழுக்கள் போல நசுக்குகின்றனர்.

ஏய்டன் ஐயர்லாந்தை சேர்ந்தவன். அவன் இங்கிலாந்துக்காக, தன் நாட்டை விட்டு வேறு ஒரு வெப்பமண்டல  நாட்டில் ஒரு கேப்டனாக பணியாற்றி வருகிறான். ஆங்கிலேய நிர்வாகத்தில் அவன் ஒரு கண்ணி மட்டுமே என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரு நிர்வாகி. அதன் அனைத்து பலன்களும், பலவீனங்களும் அவனுக்கு தெரியும். ஒரு வேலை ஆங்கிலேயர் தங்களுடைய போதாமைகளை நன்கு  தெரிந்து கொண்டு அதனை கையாள பழகிக்கொண்டதனால் தான் அவர்கள் கண்டங்களை ஆள முடிந்தது. 

இங்கு நடக்கும் எந்த ஒரு கொடுமையையும் ஆங்கிலேயே அரசால் தர்க்கபூர்வமாக விளக்கவும், நியாயப்படுத்தவும் முடியும். இந்த கொடுமைகளின் மேல் தன் தர்க்கங்களை ஏற்றி, அதை உலகம் பார்த்து வியக்கும்  பெரு கட்டிங்களாகவும், கால்வாய்களாகவும் மாற்ற முடியும். மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க, தானியங்களை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பதை  அவர்கள் நியாயப்படுத்தும் விதம் அபாரம். பஞ்ச காலத்தில் மக்கள் கூலிகளாக தங்களை விற்று கொண்டிருப்பதை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்கள் சுயநல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். கோட்டைகள் கட்டுகிறார்கள், கால்வாய்கள் அமைக்கிறார்கள். அதில் குத்தகை தாரர்களாக மேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவே இருக்கிறார்கள். அதில் வரும் லஞ்சங்களை தங்கள் சுயநலத்துக்காகவும் , அரசியல் நோக்கங்களுக்ககவும் செயல்படுத்துகிறார்கள்.

ஐஸ் ஹவுஸில் வேலை செய்யும் இருவர் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார் என்று கேப்டன் ஏய்டனுக்கு நன்றாக தெரியும், ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஏய்டன் பல்வேறு சமயங்களில் தன்னை அந்த அடிமை மக்களோடு ஒருவராக நினைத்துக் கொள்கிறான். 

அவ்விருவரின் உடல்கள் கரை ஒதுங்குகிறது. காத்தவராயன் ஏய்டனிடம் இந்த இருவரின் உடல்களையும் ஐஸ் ஹவுஸ் கொண்டு வர கேட்கிறான். இவர்களை காண்பித்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் தங்களின் உரிமை உணர்வை கொஞ்சமாவது வர வைக்க வேண்டும் என்று எண்ணி, அங்கு ஒரு தற்காலிக  வேலை நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால், அவர்கள் தொழில்முறை கொஞ்சம் மேம்படும் என்றும், ஊதியம் கொஞ்சம் ஏறும் என்றும் எண்ணுகிறான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எப்படி படைகள், அந்த மக்களை நசுக்கியது என்றெண்ணவே கூசுகிறது. ஏய்டன், தான் ஆணையிடாமலேயே, அங்கிருந்த ஒவ்வொரு சிப்பாயும் அவனின் அந்த நெருக்கடி நேரத்தை பயன்படுத்தி, தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்கிறர்கள்.

இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இப்படி நொறுக்கப்பட்டது. ஆனால் காத்தவராயன் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், தாழ்த்தப்பட்டோரின் உரிமை உணர்வையும், சகமனித இருப்பையும் வெளிப்படுத்தி தங்கள் நலனுக்காக தாங்களே போராட முடியும் என்று காட்டியது. 

காத்தவராயன் இறுதியில் தன் சமயம், மதத்தை துறக்கிறான். இந்த கொலைவெறி தாக்குதலை முரஹரி ஐயங்காரின் நெற்றியில் உள்ள விஷ்ணு, அவர்கள் கொல்லப்படுவதை பரவச நிலையில் பேரானந்தத்துடன் பார்க்கிறார். அதை அவனால் சகிக்க முடியவில்லை. அதனால் அவன் பௌத்தத்திற்கு மாறுகிறான். 

 ஏய்டன் பஞ்சத்தினால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் குடியேறிய மக்களின் வாழ்விடங்களை பார்க்க கத்தவராயனால் கூட்டிச் செல்ல படுகிறான். அவன் அங்கு மக்கள் எலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சடலங்களாக. நோயிலும், வறுமையிலும், பயத்திலும்  அவர்கள் ஆன்மா அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவன் உணர்கிறான். அவன் திரும்பிச் செல்லும் போது, அங்கிருந்த ஒரு மூதாட்டி, அவனிடம் ஒரு நுங்கினை கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அது எப்போதும் அவன் மனதில் ஒரு ஈட்டியாகக் குத்திக் கொண்டே இருந்தது. அந்த மூதாட்டி தானே வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் போது, அந்த நுங்கினை ஏன் அவனுக்கு கொடுத்தாள் என்று கேட்க, அது அவளுடைய "தர்மம்" என்றாள். மக்களின் தீரா சோகத்திலும், கொடும் பசியிலும் பீறிட்டு வரும் கருணையை சொற்களால் அள்ளிவிட முடியாது என்றே நினைக்கிறேன். அந்த ஊற்றின் அடியில் தான் மனித குளம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஏய்டன் தன்னை மீட்க மரிசாவிடம் செல்கிறான். அவன் கவிதைகளை வாசிக்கும் ஒரே வாசகி அவள் தான். அவன் ஷெல்லியின் கவிதைகளில் வாழ்கிறான். ஷெல்லியின் எழுத்துகளில், அந்த விடுதலை உணர்வில் மிதக்கிறான். அவன் ஒரு கேப்டனாக இருந்த போதும், அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது அவன் ஒரு 'அதிகார அடிமை' மட்டுமே என்று. இங்கு இருக்கும் மக்களுக்கும் அவனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏய்டன் குற்ற உணர்வால் தற்கொலை செய்ய முயல்கிறான். 

ஏய்டன் இந்த பஞ்சத்தினை ஆவணப்படுத்தி, எப்படியாவது ஏற்றுமதியாகும் தானியங்களை நிறுத்தி, பஞ்சத்தினை போக்க முடியும் என்று நினைக்கிறான். அவன் பஞ்சத்தின் கொடுமைகளை பார்க்க சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு குதிரை வண்டியில் செல்கிறான். அந்த பஞ்ச சித்தரிப்புளை கண்ணீர் வராமல் யாராலும் வாசித்து விட முடியாது. மனிதனுக்கு வரும் கொடுமைகளின் உச்சம் பசி. பசி சாகடிப்பது முதலில் ஆன்மாவைதான். அடுத்து அவனை ஒரு புள், பூண்டாக, சருகாக அலைய  விட்டு கொள்கிறது. அவன் யாரென்று தெரியாமலே இறப்பான். பஞ்சத்தினையம், பசியையும்  உணரவே முடியாது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் அனைவரும் ஒரேகூட்டமாக , ஒருவர் இருப்பினை இன்னொருவரால் உணர முடியாது. இதனை வாசித்து முடித்தபின், இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கையிக்கு பின்னாலும் வரலாற்றில், ஆயிரமாயிரம் மக்கள் செத்தொழிந்துள்ளனர். இந்த பருக்கை , இதனை உருவாக்கிய கைகளுக்கும், வாய்க்காலுக்கும் சென்று சேரவே இல்லை. 

அன்புடன்,

பிரவின்