Sunday 21 June 2020

சுக்ரர் - கடிதம்

                                             சுக்ரர் - கடிதம்

அன்புள்ள ஜெ,

      'சுக்ரர்' சிறுகதையில் வரும் 'அரிகிருஷ்ணன்' போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
    அரிகிருஷ்ணன் சொல்வது போல "அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்." , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
    உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், "நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்" என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
    கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் "தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?" என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 

No comments:

Post a Comment