Thursday 25 June 2020

சிறகு - கடிதம்

                                                 சிறகு - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
   வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் 'சிறகு'கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் 'சைக்கிள்' கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
   சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
   அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  'சிறகு' கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் 'patriarchal' சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.
  ஆனந்தவல்லியின் 'சிறகு', சக்குவின் 'சைக்கிள்'.

அன்புடன்,
பிரவின்   

Sunday 21 June 2020

ஆமை - கடிதம்

                                                            ஆமை - கடிதம் 

அன்புள்ள ஜெ,
    தங்களின் 'ஆமை' சிறுகதை வாசித்தேன். இரண்டு parallel கோடுகள் கதையில் உள்ளதாக  உணர்கிறேன். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மற்றும் பனையின் வீழ்ச்சி. இரண்டுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை எனினும், எப்படி பனை மக்களின் ஒரு வாழ்வாதாரமாகவும், எளியோரின் உணவு, உடை, உறைவிடமாகவும் இருந்துள்ளது என்பதை அறிகையில், நாம் இன்று பனையின் மகத்துவத்துவதை அறிய கூட முற்படுவதில்லை என்றே தோன்றுகிறது.
   ஆயிரமாயிரம் கதைகள் வந்தாலும் சிந்திய ரத்தத்தையும், பட்ட வலியையும் எழுதி தீர்த்து விட முடியாது. கதையில் அனக்கன் பாட்டியைப் பற்றியும், அந்த கால கட்டத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்ட விதத்தையும் வாசிக்கையில் புதிதாக படிப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு வலியும், ஒவ்வொரு ஒடுக்கப்படலும் வெவ்வேறே. அதை வெறும் பொதுச் சொல்லோடு குறிப்பிட்டு, அதன் மொத்த எடையையும் அந்த சொல்லிற்குள் புகட்டி விட முடியாது. 
    பனை அன்றைய மக்களின் இன்றியமையாத பொருளாதார பொருளாக இருந்துள்ளது. பனையின் அடி  முதல், நுனி வரை எல்லாவற்றயும் நாம் பயன்படுத்தி உள்ளோம். பனையின் 'கொரம்பை' எப்படி நம் தலைக்கு மேல் கூரையாக இருந்தது, எப்படி அது நம்மை அத்தனை விதமான மழையிலும் (முதல் முறையாக இத்தனை மழையைக் கேள்விப்படுகிறேன்) காத்தது, எப்படி அது நம்மில் ஒரு பிரிவற்ற பொருளாக ஆனது என்பதை அறிய முடிகிறது.  அனக்கன் பாட்டி கொரம்பையிலே வாழ்ந்து, மடிந்தாள். அது அவளின் கூடாகவும், ஆமையின் ஓடாகவும் இருந்தது. அவளுடைய வாழ்நாளே கொரம்பயின் கீழ். அவளின் அனைத்து மனித உணர்வுகளுக்கும் கொரம்பையே சாட்சி. அது அவள் உடலின் ஒரு அங்கம். சாவும் போதும் அதனுடன் செத்தாள். அந்த பனையால் ஆன கொரம்பை இல்லையெனில் அவள் என்றோ மடிந்திருப்பாள். அது தான் அவளை வாழ வைத்தது. 
    இப்பேற்பட்ட பனையை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலர்கள் இருப்பதைக் கண்டு மனம் ஒரு சிறு அமைதி அடைகிறது. கதையில் வரும் ராஜேந்திரனைப் போல பனை மீட்டெடுப்பில் உள்ளவர்களால், அனக்கன் பாட்டி போன்ற எண்ணற்ற மக்களை அவர்கள்  மீட்டெடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பனை தவிர வேறு எதுவும்  முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. அதனாலே பனையின் அடியில் தெய்வங்கள் உள்ளன போலும்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 
    
    

சுக்ரர் - கடிதம்

                                             சுக்ரர் - கடிதம்

அன்புள்ள ஜெ,

      'சுக்ரர்' சிறுகதையில் வரும் 'அரிகிருஷ்ணன்' போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
    அரிகிருஷ்ணன் சொல்வது போல "அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்." , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
    உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், "நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்" என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
    கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் "தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?" என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 

Friday 12 June 2020

லட்சுமியும் பார்வதியும் - கடிதம்

                                                       

            லட்சுமியும் பார்வதியும் - கடிதம் 



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

         'லட்சுமியும் பார்வதியும்' சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக  ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.

        மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன்  போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி. 

       ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடம் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.

அன்புடன்,
பிரவின் 
தர்மபுரி