Thursday, 9 July 2020

லாசர் - கடிதம்

                                                 லாசர் - கடிதம் 

அன்புள்ள ஜெ,

     'லாசர்' சிறுகதை வாசித்தேன். காலம் நெடுகிலும் அச்சிறுவன் லாசர் போன்றோரை பார்க்க முடியும். அன்று அந்த கை-கடிகாரத்தை பார்த்து வியப்புற்றோம், இன்று தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டு வியப்புறுகிறோம். 
    லாசர் கதையை படித்த பின்பு ஒரு 'சொன்னதை சொல்லும் கிளியுடன்' உரையாடியது போன்று  இருந்தது. மற்றவர்கள் சொல்லும் அத்தனையும் திரும்பச் சொல்லி, தொடர்ந்து வரும் இரு வாக்கியங்களில் நேர்மாறான கருத்து அர்த்தம் உள்ளது என்று கூட புரியாமல் இருக்கும் சிறுவன். 
    கை-கடிகாரத்தை வண்டாக நினைத்து அதனுள் பாதிரி உயிர் திரும்ப வர வைத்தபோது, தன் 'குட்டி'யே அந்த வண்டின் உருவத்தில் உயிர்த்தெழுந்து வந்ததாக கண்ணீர் வழிந்தான். உண்மையில் லாசரே உயிர்பெற்றான். அந்த 'உயிர்பெறுதல்' புற வயமாக உண்மை இல்லை என்றாலும்,  அதை நம்புவோர் அகத்திற்கு அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். அந்த நம்பிக்கை தான் பல உயிர்களை நடத்தி செல்கிறது. ஆனால் உலகத்தில் எல்ல செயலுக்கும் ஒரு விலை உள்ளது போல, அந்த புற வயமான பொய்களால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் வராமலும் இல்லை. 

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி.


நிழல்காகம் - கடிதம்

                                                       நிழல்காகம் - கடிதம்
அன்புள்ள ஜெ,

   மூலம் - போலி, உண்மை - நாடகம், shake - drape, பொருள் - நிழல்.
   அசிதரின் சந்ததி நெடுக காகம் அவர்களை கொத்துகின்றது. இது உண்மை. இது ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பதைக் கடந்து, இது நடக்கிறது, இதனை எப்படி எதிர்கொள்வோம் என நினைத்து, அசிதர் தன்னை அந்த செயலுக்குள் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்படி அந்த கொத்தல் நிகழ்வு,கொத்தல் விளையாட்டாக மாறியது. 'அது' 'தானா'கும் போது, அதிலிருந்து நாம் அதை கடந்து செல்கிறோம்.
    இங்கே காலத்திற்கு காகத்தை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் பூர்வ கால செயல்களின் வினை, காகம் கொத்துவது போல தொடர்ந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு அதனுடன் விளையாட பழகவில்லை என்றால் வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்ற பொருளும் உள்ளது. 'பொருள் அற்ற ஏற்றல்' - என்ற தத்துவத்தை கூறுவதாகவும் ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
   அசிதர் எங்கு சென்றாலும், காகங்கள் அவரை கொத்துவது வியப்பாகவும் விந்தையாகவும் உள்ளது. ஆனால் உலகமே இவ்வாறு விந்தையான நிகழ்வுகள் கொண்டதே என்றே நான் நினைக்கிறேன். சில விந்தைகளை நாம் பகுத்தறிந்து பொருள் கொண்டோம். சிலவற்றை நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை அல்லது அதற்கு பொருள் ஏதும் இல்லை என விட்டு விட்டோம். ஒருவேளை நடப்பவை அனைத்திற்கும் பொருள்  ஏதும் இல்லை என்றே சில சமயம் தோன்றுகிறது. நாம் பொருள் கண்டவற்றிற்குக் கூட, நம் மனத்திருப்திக்காக பொருளை ஏற்று  கொண்டோம் என்றே நினைக்கிறேன். அல்லது நேர் மாறாக அனைத்திற்கும் பொருள் உள்ளதோ?
    உலகில் உள்ள அனைத்து காகங்களும் அவரை அடையாளம் கண்டு கொத்துவது, அவை அனைத்தும் ஒரே மனதால் கோர்க்கப்படுவது போல உள்ளது. பல உயிர்கள் ஒரே மனம். அவைகள் ஏன் அவரை கொத்துது என அவைகளுக்கே தெரியாது. அல்லது அவைகளுக்கு தெரியும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தெரியாத, புரியாத ஒரு செயலை செய்வதில் ஏன் அதற்கு அப்படி ஒரு ஆவல். அச்செயல் அதன் கடமை. தன் கடமையை யாரோ ஆணையிட அது செய்து கொண்டே போகிறது. அப்படி அது செய்து கொண்டே போகும் வேளையில், அச்செயலை அவர் ஏற்றுக்கொண்ட போது, அவரைக்  கொத்தும் உக்கிரமும் குறைந்து அது ஒரு தொடும் விளையாட்டாக மாறிப்போகிறது. அது காகத்தின் கருணையாகவும் கொள்ளலாம். 'ஏற்றுக்கொண்ட தண்டனைகள் அதன் பொருளை இழக்கிறது'. இங்கே அசிதர், காகங்கள் தன்னை தண்டிப்பதை ஏற்றுக்கொண்டதால்  அந்த செயலே காகத்திற்கு பொருள் அற்று போனது.
   உலகில் அனைத்தும் காம வடிவமே. அனைத்து புலன்களும் காமத்தின் செயல்பாடுகள். இதில் 'இன்பமும், துன்பமும்', 'ஆசையும், கோபமும்' அனைத்தும் காமம். ஆனால் கலையின் காணும் காமம், நம்மை அந்த கலையின் ஊடே இட்டுச்சென்று புதிய  மலர்தலை அளிக்கிறது. அந்த மலர்தலில் நாம் அதனில் ஒன்றாக உள்ளோம், மனமே கலையாக, கலையே மனமாக. மாறாக அதை முழுமையாக அறியாத மனம், கலையை தன்னுடன் பிரித்துப் பார்த்து அதனை அடைய முயன்று தோற்கிறது. 'காமம்-பிரம்மம்', இவை இரண்டிற்கும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு சிந்தனை வழிகள். பரதநாட்டியம் ஒரு காம நடிப்பு. அப்படி நாம் அதை நடிப்பதால் தான் அதிலிருந்து நாம் விடுபடுகிறோம். அந்த விடுதலை அளிப்பதாலேயே அது மிகப்பெரும் கலை ஆகிறது.  'மனதை விடுதலை செய்ய முடியாத எதுவும் கலை அல்ல' என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அசிதரும்-காகமும் அந்த கொத்தல் விளையாட்டை விளையாடுவதும் ஒரு நடிப்பே.
       மூலத்தை அறியவும் கடக்கவும் போலி உதவும் என்பதை யோசிக்க யோசிக்க மலைப்பாக இருக்கிறது. ஆனால் அறிந்து கடக்கிறோமா இல்லை அறியாமல் போகிறோமா என்பதே இங்கே முக்கியமானது. 'அறிதல்' நடக்குமிடத்திலே நாம் அதை கடக்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

அன்புடன்,
பிரவின்
தர்மபுரி 
   

முதலாமன் - கடிதம்

                                                           முதலாமன் - கடிதம்

அன்புள்ள ஜெ,

     'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்  என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் 'நடுகல்' நாயகர்களாக உள்ளார்கள்.
     சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
    கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
   1. காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் 'கருமலைப்பட்சி' போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்  குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் 'கிழிந்த நாக்குகள்' உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
   2. மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரை வெறுத்தாலும், தன் குடும்பம், தன்  ரத்தம் என்று வரும்  போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
   3. தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.

   இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத்  துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, 'கொரோனாவிற்கு' தடுப்பு கண்டுபிடிப்பதில் பல 'காளியன்'கள் பலியாகலாம்.
   காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி




Thursday, 25 June 2020

சிறகு - கடிதம்

                                                 சிறகு - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
   வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திற்காக நம்மை அறியாமலியே நாம் காத்திருப்போம். அந்த தருணம் வரும் போது, அதன் 'சிறகு'கள் கொண்டு நாம் பறந்து செல்ல முயல்வோம். ஆனந்தவல்லியின் அப்படிப்பட்ட தருணம் அவள் 'சைக்கிள்' கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்டது. அவள் அதை ஒரு சிறகாகப் பயன்படுத்தி தன்னை, வாழ்க்கையின் அடித்தள பகுதியிலிருந்து மீட்டெடுத்து பறந்து செல்கிறாள்.
   சங்கு போன்ற பண்ணையார்களின் அடக்கும் அதிகாரமும், ஆனந்தவல்லி போன்ற எளிய மக்களின் அடங்கும் குணமும், இதில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறர்கள் என்பதே மிகவும் முக்கியம். பெரும்பாலான சமயங்களில் சங்கு போன்றவர்களே வெல்கிறார்கள். மிகவும் சொற்ப சமயங்களிலே ஆனந்தவல்லி போன்ற எளியோர் தங்களின் மன உறுதியாலும் தீராத கனவாலும், அனைத்து தடைகளையும் மீறி முன்னகர்ந்து செல்கிறார்கள்.
   அப்படி அவர்கள் செல்லும்போது தங்கள் பாதையில் ஒரு சில சமரசங்களை செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. தன்  மீது தொடுக்கப்பட்ட அத்துமீறல்களிலிருந்து எப்படியாவது மீள அவர்கள் செய்யும் எதிர்வினையின் ஒரு சாரமே ஆகும். அதனாலேயே  'சிறகு' கதையின் கதை சொல்லியால், பெண்கள் செய்யும் சமரசத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேலுமொரு காரணம் நாம் வாழும் 'patriarchal' சமூகம். நாம் நம் பெண்களை  தெய்வமாக அல்லது கௌரவப் பொருளாக மட்டுமே நினைப்பது. அவளை ஒரு சக மனிதராக நினைப்பதையே ஒரு முற்போக்குச் செயலாகக்  கொண்டிருந்த காலம் நம்மில் உள்ளது.
  ஆனந்தவல்லியின் 'சிறகு', சக்குவின் 'சைக்கிள்'.

அன்புடன்,
பிரவின்   

Sunday, 21 June 2020

ஆமை - கடிதம்

                                                            ஆமை - கடிதம் 

அன்புள்ள ஜெ,
    தங்களின் 'ஆமை' சிறுகதை வாசித்தேன். இரண்டு parallel கோடுகள் கதையில் உள்ளதாக  உணர்கிறேன். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மற்றும் பனையின் வீழ்ச்சி. இரண்டுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை எனினும், எப்படி பனை மக்களின் ஒரு வாழ்வாதாரமாகவும், எளியோரின் உணவு, உடை, உறைவிடமாகவும் இருந்துள்ளது என்பதை அறிகையில், நாம் இன்று பனையின் மகத்துவத்துவதை அறிய கூட முற்படுவதில்லை என்றே தோன்றுகிறது.
   ஆயிரமாயிரம் கதைகள் வந்தாலும் சிந்திய ரத்தத்தையும், பட்ட வலியையும் எழுதி தீர்த்து விட முடியாது. கதையில் அனக்கன் பாட்டியைப் பற்றியும், அந்த கால கட்டத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்ட விதத்தையும் வாசிக்கையில் புதிதாக படிப்பது போலவே உள்ளது. ஒவ்வொரு வலியும், ஒவ்வொரு ஒடுக்கப்படலும் வெவ்வேறே. அதை வெறும் பொதுச் சொல்லோடு குறிப்பிட்டு, அதன் மொத்த எடையையும் அந்த சொல்லிற்குள் புகட்டி விட முடியாது. 
    பனை அன்றைய மக்களின் இன்றியமையாத பொருளாதார பொருளாக இருந்துள்ளது. பனையின் அடி  முதல், நுனி வரை எல்லாவற்றயும் நாம் பயன்படுத்தி உள்ளோம். பனையின் 'கொரம்பை' எப்படி நம் தலைக்கு மேல் கூரையாக இருந்தது, எப்படி அது நம்மை அத்தனை விதமான மழையிலும் (முதல் முறையாக இத்தனை மழையைக் கேள்விப்படுகிறேன்) காத்தது, எப்படி அது நம்மில் ஒரு பிரிவற்ற பொருளாக ஆனது என்பதை அறிய முடிகிறது.  அனக்கன் பாட்டி கொரம்பையிலே வாழ்ந்து, மடிந்தாள். அது அவளின் கூடாகவும், ஆமையின் ஓடாகவும் இருந்தது. அவளுடைய வாழ்நாளே கொரம்பயின் கீழ். அவளின் அனைத்து மனித உணர்வுகளுக்கும் கொரம்பையே சாட்சி. அது அவள் உடலின் ஒரு அங்கம். சாவும் போதும் அதனுடன் செத்தாள். அந்த பனையால் ஆன கொரம்பை இல்லையெனில் அவள் என்றோ மடிந்திருப்பாள். அது தான் அவளை வாழ வைத்தது. 
    இப்பேற்பட்ட பனையை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலர்கள் இருப்பதைக் கண்டு மனம் ஒரு சிறு அமைதி அடைகிறது. கதையில் வரும் ராஜேந்திரனைப் போல பனை மீட்டெடுப்பில் உள்ளவர்களால், அனக்கன் பாட்டி போன்ற எண்ணற்ற மக்களை அவர்கள்  மீட்டெடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பனை தவிர வேறு எதுவும்  முழுவதுமாக பூர்த்தி செய்வதில்லை. அதனாலே பனையின் அடியில் தெய்வங்கள் உள்ளன போலும்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 
    
    

சுக்ரர் - கடிதம்

                                             சுக்ரர் - கடிதம்

அன்புள்ள ஜெ,

      'சுக்ரர்' சிறுகதையில் வரும் 'அரிகிருஷ்ணன்' போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
    அரிகிருஷ்ணன் சொல்வது போல "அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்." , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
    உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், "நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்" என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
    கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் "தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?" என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.

அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி 

Friday, 12 June 2020

லட்சுமியும் பார்வதியும் - கடிதம்

                                                       

            லட்சுமியும் பார்வதியும் - கடிதம் 



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

         'லட்சுமியும் பார்வதியும்' சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக  ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.

        மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன்  போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி. 

       ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடம் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.

அன்புடன்,
பிரவின் 
தர்மபுரி