Wednesday 17 May 2023

வனவாசி

'விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய' அவர்களின் வனவாசி நாவல் வாசித்தேன். நான் வாசிக்கும் முதல் வங்காள நாவல் தமிழில். 

கல்கத்தா போன்ற பெரு நகரத்தினில் வாழ்ந்து, வக்கீலுக்கு படித்து, வேலையில்லாமல் அலைந்து, ஒரு ஜமீனின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டினை நிர்வகிக்கும் வேலை நிமித்தமாக காட்டிற்குச் சென்று ஆறு அல்லது ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி அந்த காட்டிடமும், அதில் உள்ள விலங்குகள், பறவைகள், செடி கொடிகளிடமும் ஒன்றாக வாழ்ந்த அவரின் அனுபவங்களை சொல்கிறது இந்நாவல். 

நாவல் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.  கதைசொல்லியாக இந்நூலின் ஆசிரியரே வருகிறார். தான் காட்டினில் உணர்ந்த, அனுபவித்த அற்புதமான உச்ச தருணங்களை நாவல் முழுக்க சொல்கிறார். நேரடி அனுபவங்களை, தான் சந்தித்த கதை மாந்தர்களை வைத்துக் கொண்டு சம்பவங்களை மட்டும் கூறிக்கொண்டு செல்கிறார். காட்டின் எண்ணற்ற ரகசியங்களையும், அழகினையும், அமைதியையும், குரூரத்தையும், அதில் வாழும் அத்தனை உயிரினங்களைப் பற்றியும் சொல்கிறார்.

காட்டில் அவர் விதவிதமான செடி கொடிகளை கண்டது போல, அவர் சந்தித்த வினோதமான மனிதர்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சொல்லிச் செல்கிறார். காட்டின் அழகினை பல்வேறு இடங்களில் கவித்துவமாக விவரிக்கிறார். தன் நேரடி அனுபவங்களை கூறினாலும் காட்டில் அவர் வாழ்ந்த நாட்கள் ஒரு மயிர்கூச்சளிக்கும் அனுபவமாகவே நமக்குள்ளது. தன் ஏழு ஆண்டு வனவாசத்தில், தான் கண்ட பல்வேறு இயற்கை காட்சிகளை சொற்களின் வழியே நமக்கு ஓவியமாக தீட்டிக்காட்டுகிறார். அவர் அனுபவித்த ஒன்றை நேரடியாக சொல்லும் போதும் அது கவித்துவமாகவே விளங்குகிறது.

இந்தியாவில் 1930 களிலும், 1940 களிலும் கிராமங்களிலும், மலைகளிலும் வாழ்ந்த மனிதர்களின் வறுமையின் சித்திரத்தை சொல்கிறது இந்நாவல். பீகார், வங்காளப் பகுதிகளில் இருந்த பூர்ணியா, லப்துலியா, மோகன்புரா, புல்கியா போன்ற காட்டுப் பகுதிகளைச் சுற்றியே நாவல் அமைந்துள்ளது. 

தன்னுடைய வேலை, ஜமீன் காட்டுப்பகுதிகளை அளப்பதும், அதனை மக்களுக்கு குத்தகை விடுவதுமே. ஒரு வகையில் காட்டை அழிக்கும் வேலை. அதை அவரே பல்வேறு தருணங்களில் உணர்கிறார். ஒரு பக்கம் இயற்கையின் ஒப்பற்ற இக்காட்டின் அழகை ரசித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதனை அழிக்கும் தொழிலையே செய்கிறார் என்பது நகைமுரண்.

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் காட்டில் நடக்கும் இயற்கை மாற்றங்களும், மக்களின் செயல்களும், விழாக்களும் நாவல் முழுவதும் வந்து செல்கிறது. கோடையில் குடி நீருக்காக மக்கள் கஷ்டப்படுகின்றனர். குளம், குட்டை, ஆறு என்ற அனைத்தும் வற்றி விடுகிறது. ஆற்றின் மணலில் குழி தோண்டி கிடைக்கும் நீரையே பயன்படுத்துகின்றனர். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் கோடை கொடியது. நீர் இல்லாமல் காடு விட்டு காடு வந்து  அலையும் விலங்குகள். அவரின் மஞ்சம் புள் போட்ட குடிசையின் பக்கத்தில் ஒரு சிறு குளம் உள்ளது. அதில் இந்த கோடையிலும் சற்று நீர் உள்ளது. 

ஒரு கோடை நாளில் அந்தி வேலையில் அந்த குளத்தின் அருகே அவர் செல்கையில், அதன் நாலு புறமும் பல்வேறு பாம்புகள் இருக்க, ஒரு புறம் காட்டு பசு மாடுகள் தன் கன்றுகளுடன் நீர் குடித்துக்  கொண்டியருக்கிறது. அதன் மறுபுறம் கழுதைப்புலி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டின் கண்களும் ஒரு சமயம் சந்திக்கிறது. ஆனால் அவை பழைய போலவே மீண்டும் தண்ணீரைக் குடிக்கிறது. கழுதைப்புலி பசுங்கன்றை துரத்தவில்லை. பசுவும் அங்கிருந்து ஓடவில்லை. 

காட்டினில் எளிதாக வழி தவறி போய்விட வாய்ப்புள்ளது. அப்படி வழி தவறி ஒருவன், வெய்யிலில் தேடி அலைந்து நீர் கிடைக்காமல் தன் சுயத்தை இழந்து திரிகிறான். அவனைக் கண்டு அவனுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று வாயைத் திறக்க சொன்னால், அவனுடைய நாக்கு மேலே ஒட்டிக்கொண்டு விட்டது. இவ்வாறு பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நாவல் முழுவதும் வந்து கொண்டிருக்கிறது.  காட்டில் வெயிலின் கோர தாண்டவமும், மழையின் உக்கிரமும் மாறி மாறி வந்து செல்கிறது.

காட்டில் சில இரவுகளில்  மிருகங்களுக்கு அஞ்சாமல், காட்டின் அழகினை முழு நிலா நாளில் ரசிக்க வேண்டியே அவர் துணீகரமான செயல்களை மேற்கொள்கிறார். சரஸ்வதி குண்டத்தில் அவர் காணும் நிலவு வெளிச்சமும், பூக்களின் வாசமும், குளிர்ந்த இரவும் நம்மை பரவசம் அடைய செய்கிறது. இதுபோல் தன் பல்வேறு உச்ச அழகியல் அனுபவங்களை வார்த்தைகளால் தர முயன்றிருக்கிறார்.

நாவல் முழுவதும் விசித்திரமான மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தன் குலத் தொழில் கடன் கொடுப்பது என்பதற்காக தன்னிடம் உள்ளவற்றை கடனாக கொடுத்து ஏமாந்தாலும் மீண்டும் அதையே செய்யும் தாவ்தால். தன் குடும்பத்தை விட்டு ஒரு சிறு நிலத்தில் குத்தகை எடுத்து வரகு விவசாயம் செய்து கொண்டே தனிமையில் தினமும் காலையும் மாலையும் பாராயணம் செய்யும் ராஜு பாண்டே. கல்வி கற்பிக்க மாணவர்களை தேடும் வடுகநாத பண்டிதன். இரவில் போய் விளைந்த பூமியில் சிந்திய தானியங்களை பெருக்கும் பெண்டீர். நாட்டியக்கார சிறுவன் தவதியா. பரம சாது கிரிதாரி லால். காட்டை உருவாக்கும் யுகல் பிரசாத். அறுவடைக்கு வரும் மஞ்சி. காட்டு இளவரசி பானுமதி. காட்டு ராஜா தோப்புறு பன்னா. குந்தா.

யுகல் பிரசாத் என்பவர் காட்டில் வேறோர் இடத்தில கிடைக்கும் செடி கொடிகளை சரஸ்வதி குண்டத்து காட்டில் நட்டு வைத்து அங்கே அவரே உருவாக்கிய ஒரு காடு வளர்கிறது. அக்காடு என்றாவது ஒரு நாள் அழிக்கப்பட்டுவிடும் என்று இறுதியில் அறியும்போது, திரும்பவும் இன்னொரு இடத்தில வேறொரு காட்டை உருவாக்க மறுபடியும் செடி கொடிகளைக் தேடிக் கொண்டு செல்கிறார். 

காட்டு அரசர் தோப்புறு பன்னா தன் நிலங்களை இழந்தாலும், அவர் மக்களுக்கு இன்னும் அரசராகவே வாழ்கிறார். அவர்களின் வரலாறு மனித வரலாறு தோன்றுவதற்கு முன்பே ஆரம்பமாகி இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள யாரும் முயலவில்லை என்கிறார். அவர்களின் வரலாறு காட்டுவாசிக்கும், நாகரிகம் கொண்ட மனிதனுக்கும் இருக்கும் பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்டுள்ளது. அங்கு அரசரின் பெயரப்பெண்ணான பானுமதியிடம் காதல் கொள்கிறார். அவர்களின் அரசவையான பாதாள குகைகள், அவர்களின் மூத்தோர் சமாதிகள், அதைக் காக்கும் ஆல  மரம் என்று அவர்களின் வாழ்க்கையும் வரலாறும் அந்த காட்டின் ஒரு பகுதியோடு நின்று விடுகிறது.

மஞ்சி, ஒரு காட்டு நாடோடிப் பெண் நாகரிக உலகத்திற்குள் நுழைய விரும்பும் ஒரு குறீயீடாக வருகிறாள். காட்டில் வாழும் நாடோடி பெண்களுக்கு புதியதாக சந்தையில் வரும் சிறு சிறு அழகு சாதனப் பொருள்களின் மேல் மோகம் வருகிறது. அதனை வைத்தே நகர் வாழ்க்கையினை தாங்களே ஒரு கற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். அதை ஏதோ ஒரு புள்ளியில் ஒரு ஆண் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சீரழிக்கிறான். இன்று வாழும் நகரத்து பெண்களின் வாழ்க்கை ஆயிரமாயிரம் மஞ்சி போன்ற சீரழிந்த பெண்களின் ஆன்மாவின் மேலே கட்டப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

நாட்டு வைத்தியங்களையும், காட்டு வைத்தியங்களையும் நம்பி வாழும் மக்கள், ஊர் ஊராக அடித்து செல்லும் வைசூரி நோய், அவர்களின் சுகாதாரமற்ற வாழ்க்கை என அனைத்தையும் விவரிக்கிறார். அத்தனையிலும் நம்மால் முடிந்த வரை உதவி செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். அவரும் ராஜு பாண்டேவும் சேர்ந்து பல்வேறு மக்களை முயன்ற வரை காப்பாற்றுகிறார்கள். 

இரவில் மட்டுமே முளைக்கும் தாமரையாய் குந்தா அறிமுகம் ஆகிறாள். இரவில் அவர் சாப்பிட்ட எச்சி இலையில் ஒட்டிக் கொண்டிருப்பவைகளை தனக்கும், தன் பிள்ளைக்கும் கொடுக்க அவள் அவர் குடிசை முன் பல மணி நேரங்கள் நின்று நடு இரவு நெருங்கும் நேரத்தில் அந்த எச்சி இலைகளை வாங்கி கொண்டு இரவில் வழி இல்லாத காட்டில் தன் பிள்ளைகளுக்காக நடந்து செல்கிறாள். அவள் ஒருராஜபுத்திர ஜமீனுக்கு மனைவியாகி அழிந்த கதையும், அவள் ஒரு தேவதாசிக்குப் பிறந்தவள் என்பதால் அவளை ஊரில் யாரும் சேர்த்துக் கொள்ளாது போனதையும் சொல்கிறார். 

தான் ஒரு ஜமீன் போன்றவள் என்பதால் அவள் ஒரு போதும் தன் சுய கௌரவத்தை விட்டு கொடுக்கவில்லை. அவள் அவரின் எச்சி இல்லை சாப்பாட்டை சாப்பிட்டாலும் அது ஒரு ஜமீனுக்கு நிகரான ஒரு மேலாளர் உண்டதே. அவள் வேறு யாரிடமும் போய் இது போல் சென்று நிற்பதில்லை. அவள் ஒரு தாசியின் மகளாக இருந்தாலும் அவள் ஒரு போதும் தன சுயத்தை இழக்கவில்லை.

அவளுடைய நாடோடி வாழ்க்கை இறுதியில் அவரின் உதவியால் முடிவுக்கு வருகிறது. ஒரு சிறு நிலத்தை அவர் அவளுக்கு குத்தகைக்கு கொடுத்து பயிரிட்டு வாழ ஏற்பாடு செய்கிறார். எந்திரிக்கவே முடியாமல் நோயுற்று இருக்கும் கிரிதாரிலாலுக்கு மாதக்கணக்கில் பணிவிடை செய்து அவரை குணப்படுத்துகிறாள். அதற்கு ஊதியமாக அவரை அவள் 'அப்பா' என்று அழைக்கிறாள். அவள் வறுமையை காரணம் சொல்லி, அவள் செய்த இந்த பணிவிடைக்கு எளிதாக பணம் வாங்கி இருக்கலாம். தான் ஒரு தாசிக்கு பிறந்தவள் என்பதால் இயக்கையாககிடைக்கும் எந்த ஒரு உறவுகளும் அவளுக்கு கிடைக்காததால் அதன் வலியினை அவள் உணர்ந்ததால், அவளுக்கு மனித உறவுகளை பெறுவதே ஆத்ம திருப்தி. ஒரு வகையில் அவளே பெற்றடுத்த தந்தை தான் கிரிதாரிலால்.

ஒவ்வொரு அறுவடையின் போதும் அங்கு நடக்கும் சண்டைகள், விழாக்கள், நாடகங்கள் என்று அனைத்தும் நாவலில் வருகிறது. அங்கு வாழும் மக்களின் இன கட்டுப்பாடுகள், ஒரு இனத்தார் செய்த சாப்பாட்டை இன்னொரு இனத்தார் சாப்பிடாதது போன்றவையும் சொல்லப்பட்டிருக்கிறது. 

காட்டெருமைகளை காக்கும் தெய்வம், இரவில் குடிசைக்குள் வரும் வெள்ளை நாய் என்று மனித அறிவுக்கு எட்டாத நிகழ்வுகள் வருகிறது. அங்கு வாழும் மக்களின் உணர்வுகளில் அது இரண்டற கலந்துள்ளது. அதனை தன் அறிவினால் நம்ப முடியாவிட்டாலும், கண்ணில் காணும் காட்சியினாலும் அங்கு நடக்கும் சம்பவங்களினாலும் அதனோடு அவரும் ஒரு பகுதியாகவே வாழ்கிறார். 

ஒரு காட்டை அளந்து, குத்தகைக்கு விட்டு, அந்த குத்தகை எடுத்த மக்கள் காட்டினை திருத்தி, உழுது, பயிர் செய்து, அதனை காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்றி, அறுவடை செய்து, அதில் வரும் சொற்ப பணத்தினால் தன் குடும்ப செல்வுகளை மேற்கொண்டு, அதிலும் பத்தாமல் வட்டிக்குக் கடன் வாங்கி, அதை திருப்ப கொடுக்க முடியாமல் எருமைகளையும், மாடுகளையும், அறுவடைகளையும் அடகு வைத்து வாழும் எளிய பஞ்சத்தினால் வாடும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களே இந்நாவல்.  இவர்களுக்கு எதிர்பார்ப்பென்று ஒன்றும் இல்லை. வரகரசி சோறு கிடைத்தாலே, உலகின் பெரிய மகத்துவமான ஒன்று கிடைத்தது போல சாப்பிடும் மக்கள். ஆனால் தங்களுக்குள் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணம். முன்னேற்றம் அவர்கள் வைத்திருக்கும் எருமை மாட்டின் எண்ணிக்கையிலும், வரகரிசியின் அறுவடையிலும். அதனை தாண்டி எதுவுமே தெரியாத மக்கள்.

காட்டில் இருக்கும் பல்வேறு மலர்களின் பெயர்களும், மரங்களின் பெயர்களும் நாவல் முழுக்க வருகிறது. அவர் ஒவ்வொரு காட்டிற்கு சென்று அங்குள்ள புதிய வகை செடி கொடிகளின் அழகினில் தன்னை மறந்து வாழும் கணங்கள் நாவலில் பெரும்பகுதியாக வருகிறது. தான் கண்ட பல்வேறு பறவை வகைகளை  (கரிக்குருவி, பீசன்ட் கிரௌ, வல்லூறு, வெண்குருகு போன்றவை) வர்ணனை செய்கிறார். அவைகளின் சுததிரத்தினைக் கண்டு உள்ளூர மகிழ்கிறார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும், உலக யுத்தமும் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்தவையாக இருக்கும் இந்நாவலில் ஒரு இடத்தில கூட அதன் சிறு குறிப்புகள் கூட இல்லை. நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் மனிதர்களையும், நகரங்களையும் அறியாத மக்களின் வாழ்க்கையில் அவை இல்லாதது இருப்பது தான் நியாயமானதும் கூட. காடழித்து ரோடு வந்த பிறகே தேசியப் பெருமிதங்களும் வந்து இறங்குகிறது என்றே நினைக்கிறேன். 

காட்டினை எவ்வாறு காண வேண்டும் என்று அவர் வழியாக நாம் உணர்ந்துகொள்ளலாம். காட்டில் வாழ தனிமை பயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டும். தனிமையில் மனம் பிறழாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் என அத்தனையோடும் நாம் உரையாட தொடங்கும் போதுதான் நாம் உண்மையில் ஒரு காட்டுவாசியாக வாழ ஆரம்பிக்கிறோம். ஆனால் அங்கு எதுவும் நிச்சயம் இல்லை. ஆயிரமாயிரமாண்டுகள் அங்கே இருக்கும் கல்லும் ஏதோ ஒரு நொடியில் இல்லாமல் ஆகலாம். அங்கு காலம் இல்லாமல் ஆகிறது. அல்லது கரைந்து போகிறது.

காடு அழிக்கப்பட்டு , கடுகுப் பயிர்கள் விளைந்த அந்த வயல்களின் அழகைக் கண்டு, அதுவும் ஒரு அழகென்று ரசிக்கிறார் ஆசிரியர். மனிதன் அகத்தில் நிகழும் தன்  கற்பனைகளையும், ரசனைகளையும் புறத்தில் இருக்கும் அத்தனையையும் கொண்டு நிரப்ப முயல்கிறான். அல்லது புறம் தன்னை நிரப்பி கொள்வதற்காகவே அந்த கற்பனைகளை மனித அகத்தில் உருவாக்குகிறதோ என்ற கேள்வி எழுகிறது. கல்கத்தாவின் சந்துகளில் ஒரு சிறு வீட்டில் பின்னாளில் குடியேறிய பின்னர், அவர் அந்த காட்டின் நினைவுகளை அசை போட்டுப் பார்க்கிறார்.

காடழிந்து வயலாகி, வயலும் அழிந்து வரும் இக்கால கட்டத்தில் இந்நாவல் நாம் இயற்கையை அதன் முழு உயிர்ப்புடன் காண உதவுகிறது. காலம், வெளி போன்ற உணர்வுநிலைகளை காட்டில் இருப்பதற்கும், நம் அன்றாடத்தில் இருப்பதற்கும் வேறுபாட்டினை உணரச் செய்கிறது. இயற்கையை இயற்கையின் கண் கொண்டே பார்ப்பதற்கு இந்நாவல் உதவும். ஆனால் அது கடும் பயிற்சி இல்லாமல் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றல் நாம் கற்ற அன்றாட அறிவை அழித்துவிட்டோ  அல்லது மறைத்து வைத்தோ தான் நாம் இயற்கையை அதன் கன்னித்தன்மையை காண முடியும். அந்த கண்களை நாம் பெறுவதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். 

இந்நாவல் அந்த கன்னி தன்மையை அப்படியே நமக்கு அளிக்கிறது. நாம் இதில் பயணம் செய்ய கூட நம் அன்றாடங்களை கழட்டி வைக்க வேண்டும். ஒரு வாசிப்பில் நாம் அனைத்தையும் உணர்ந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த நாவலின் நுட்பமே அதன் நேரடியான, எளிமையான உணர்வுகளை அளிப்பது என்றே நினைக்கிறேன். 


No comments:

Post a Comment