Friday 14 April 2023

மகாராஷ்டிரா பயணம் (3)

காலை 6:15 மணிக்கு அறையை காலி செய்து விட்டு லோனாவாலா நோக்கி புறப்பட்டோம். காலை  குளிரில் வண்டி ஓட்டுவதற்கு நன்றாக இருந்தது. காலையில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் சீக்கிரமாகவே நகரத்தை கடந்து சென்றோம். நெடுஞ்சாலையை அடைந்த உடன் ஒரு தள்ளு வண்டி கடையில் தேநீர் அருந்தினோம். லோனாவாலாவை நெருங்கும் போது மேக மூட்டமாக இருந்தது. 

லோனாவாலா போவதற்கு முன்பாகவே 'பாஜா குகைகள்' என்ற பௌத்த குகைகளை காண திட்டமிட்டோம். குகைக்கு 5கிமீ முன்பாக ஒரு சிற்றுண்டி கடையில், காலை உணவருந்திவிட்டு சென்றோம். 'வடா பாவ்' எங்கு சாப்பிட்டாலும் மிகச்சிறப்பாகவே இருந்தது. 'பாஜா குகை' போகும் வழியில் ஒரு ரயில் பாதை குறுக்கே கடந்து செல்ல வேண்டும். அப்பொழுது ரயில் வந்து கொண்டிருந்ததால், பாதை மூடி பத்து நிமிடம் காத்திருந்தோம். 

காலை 8:15 மணிக்கு பாஜா குகையின் அடிப்பகுதிக்கு சென்று விட்டோம். கீழிருந்து மேலே செல்ல கல் படிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு இளைஞர் கூட்டம் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். எங்களை பார்த்தவுடன், இந்த இடத்தை விட இன்னொரு இடம் நன்றாக இருக்கும், நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்காமல் மேலே ஏறி சென்றோம்.

இது ASI பராமரிப்பில் இருக்கும் இடமாகும். நாங்கள் வந்து சிறிது நேரம் கழித்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் ஊழியர் வந்தார். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். முதல் பார்வையிலேயே நான் அந்த குகையினுள் இழுக்கப்பட்டேன். நான் பார்க்கும் முதல் பௌத்த குகை அது. அதன் அமைப்பு, வடிவம், பெயர்கள் என்று எதுவுமே தெரியாது. அங்கு ஒரு நான்கைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் குகைகளை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். 

ஒரு பெரிய கல்லினை குடைந்து குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். மொத்தம் 22 குகைகள். நடுவில் இருக்கும் குகை ஒரு பெரிய மண்டப முகப்பு போல் அலங்காரமாக இருந்தது. அதன் உள்ளே உருளை வடிவில் ஒரு அமைப்பு இருத்தது. நண்பர் அதை 'சைத்தியம்' என்று சொன்னார்.  'சைத்தியம்' என்பது பௌத்தர்களின் பிரார்த்தனைக் கூடம். இதன் உள்ளே ஒரு தூபி (அரை கோல வடிவம் கொண்டது) அமைந்திருந்தது. சைத்யத்தின் உள்ளே மண்டபத் தூண்கள் செதுக்கப்பட்டிருந்தது. இந்த தூண்கள் ஒரு கணித விதிப்படி சீரான இடைவெளி விட்டு, ஒரே அளவில் உள்ளது. பாதி உயரத்திற்கு மேல், இந்த தூண்கள் நீள்வட்ட வடிவத்தில் மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. 

அதைக் கண்டு கொஞ்ச நேரம் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த குகைகளில் வாழ்ந்த பௌத்த துறவிகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மழை திடீரென பெய்யத் தொடங்கியது. அங்கிருக்கும் ஒரு குகைக்குள் சென்று நின்று கொண்டோம். அத்துறவிகளுக்கும், நமக்கும் பாலமாக இருப்பது இந்த கற்குகை மட்டுமே. காலத்தினால் உருமாறாத கற்கள். மழையை பார்த்துக்கொண்டு துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 

சிறிது நேரம் மழைக்குப் பிறகு, மற்ற குகைகளைப் பார்த்தோம். குகைகளுக்கு வெளியேயும் சில தூபிகள் இருந்தன. இக்குகைகள் பௌத்த விகாரங்கள் ஆகும். இதுவே பௌத்த பிக்குகளின் உறைவிடங்கள். சில விகாரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தன. சிலவற்றில் உறங்குவதற்கு கற்பலகைகள் மட்டுமே இருந்தன. இந்த குகை ஹீனயான பௌத்த மரபைச் சேர்ந்ததாகும்.


பத்து மணியளவில் கீழே இறங்கினோம். இறங்கும் வழியில் இந்தியாவில் இருக்கும் பௌத்த குகைத்தளங்களின் இடங்களை பலகையில் பொறித்து வைத்திருந்தார்கள். அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கீழிறங்கி "சுனில் மெழுகு அருங்காட்சியகம்" செல்ல கிளம்பினோம். செல்லும் வழியில் மழை மெல்லிதாக தூரிக் கொண்டே இருந்தது. 

லோனாவாலா நகர் புனேவிற்கும், மும்பையிற்கும் நடுவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைப்பகுதியாக இருப்பதால், நல்ல குளுமையாகவே இருக்கும். புனே மற்றும் மும்பை மக்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கழிக்கவே உருவாக்கப்பட்ட செயற்கை சுற்றுலா தளமாகும். இங்கு ஓரிரண்டு அருவிகள், கோட்டைகள் தவிர ஏதும் இல்லை. நகரின் உள்ளே நுழையும் இடங்களில், அருங்காட்சியகம் செல்ல வழி என்று போடப்பட்டிருந்தது. ஆனால் மேப்பில் வேறு வழி காட்டியது. அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் அது வேறு ஒரு  அருங்காட்சியகம். இரண்டு, மூன்று மெழுகு அருங்காட்சியகங்கள் இங்கு உள்ளன. ஆனால் "சுனில் அருங்காட்சியகமே" சிறந்தது.

நகரின் நடுவே ஒரு  வணிக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள சுனில் மெழுகு அருங்காட்சியகத்திற்குள் சென்றோம்.  உள்ளே சென்றதுமே காந்தியையும், நேருவையும் பார்க்க முடிந்தது. மிகவும் தத்ரூபமாக இருந்தன அச்சிலைகள். அருங்காட்சியகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட மெழுகுச் சிலைகள் உள்ளன. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், சினிமா நடிகர்கள்/ நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள் என்று வெவ்வேறு காலங்களை சேர்ந்தவர்களை சிலையாக வடித்திருக்கிறார்கள். எந்த சிலைகளையும் தொடக்கூடாது என்று உள்ளே செல்லும் போதே சொல்லி அனுப்பினார்கள். 



எனக்கு மிகவும் தத்ரூபமாக பட்டது பிரகாஷ்ராஜ் அவர்களின் ஆளுயர சிலை. ஒவ்வொரு சிலையும் அந்தந்த நிஜ மனிதரின் உயரம், எடைகளை கணக்கில் கொண்டு அதே போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திடீரென்று சிலையைக் கண்டதும் பிரகாஷ்ராஜே நின்றிருப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஒவ்வொரு சிலையும் சிறப்பாக இருந்தது. சில இன்னும் நன்றாக செய்திருக்கலாம். சில உண்மைப் போலவே இருக்கும். 



நாங்கள் எங்களுக்கு பிடித்த மனிதர்களின் சிலைகளிடம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். "சைராட்" மராத்தி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைச் சிலைகள் மிகவும் உயிர்ப்புடன் இருந்தன. அனைத்து சிலைகளையும் பார்த்து முடித்து விட்டு நாங்கள் வெளியே வந்தோம். நண்பர் அனைத்தையும் வீடியோ எடுத்து வாட்சப்  குரூப்பில் போட மீண்டும் உள்ளே சென்றார். வெளியே அமர்ந்திருக்கையில், மெழுகுச் சிலைகளை செய்ய ஒவ்வொருவரிடமும் எப்படி அளவுகளையும் முக அமைப்புகளையும் பெற்றார்கள் என்று டிவியில் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.



நண்பர் வீடியோ எடுத்துவிட்டு வெளியில் வந்தார். அங்கிருந்து "கர்லா குகை"யை நோக்கி புறப்பட்டோம். காலை 11:30 மணி அளவிலே ஒரு கடையில் சிக்கன் சாப்பாடு சாப்பிட்டோம். செல்லும் வழி முழுவதும் "மகன்லால் சிக்கி" என்ற விளம்பரம் கொண்ட கடலைமிட்டாய் கடைகள் இருத்தன. எப்படிதான் இருக்கிறது என்று பார்க்க ஒரு பெட்டி வாங்கினோம். லோனாவாலாவிலிருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு 10கிமீ தொலைவில் இடதுபுறம் திரும்பி ஒரு 3கிமீ தொலைவு செல்ல வேண்டும் கர்லா குகைக்கு.  அதே நெடுஞ்சாலையில் வலது புறம் திரும்பினால் நாங்கள் காலையில் சென்ற "பாஜா குகைக்கு" செல்லலாம்.



கீழிருந்து மூன்று கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். மேலே செல்லும் பாதை மிகவும் செங்கூத்தாக இருந்தது. ஏராளமான கூட்டம் அங்கிருந்தது. வண்டி நிறுத்த இடமில்லாமல் சற்று தள்ளி நிறுத்தி வந்தோம். பௌத்த குகையை பார்க்க இவ்வளவு கூட்டமா என்று யோசித்தோம். உள்ளே குகைக்கு செல்லும் பாதை தானா என்று கேட்டுக் கொண்டே சென்றோம். ஒரு 200 படிக்கட்டுகளாவது ஏறிய பின்னர் தான் தெரிந்தது அங்கு ஒரு கோவில் உள்ளது என்று. அந்த கோவிலுக்குச் செல்ல தான் இவ்வளவு கூட்டம். 

"ஏக்வீரா" என்ற அந்த கோவில் குகைக்கு பக்கத்திலேயே உள்ளது. முன்பு குகையாக இருந்த ஒரு பகுதி சிதிலமடைந்ததால் அதனை அப்படியே ஒரு கோவிலாக கட்டி இருக்கின்றனர். இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. எட்டாம் எண் கர்லா குகைக்கு உள்ளே பிரம்மாண்டமான ஒரு சைத்தியம் உள்ளது. அது பௌத்த குகைகளிலேயே பெரிய சைத்தியமாகும். உள்ளே சென்று கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். ஒவ்வொரு தூணிலும் யானையும், குதிரைகளும் அதற்கு மேலே ஆணும், பெண்ணும் அமர்ந்திருக்குமாறு செதுக்கப்பட்டுள்ளது.  

குகையின் வெளியில் இரு புறத்திலும் பிரம்மாண்ட யானைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை சாதவாகன ஆட்சி, கிபி 150 காலத்தை சேர்ந்ததாகும். குகை கட்ட கொடை அளித்தோரின் பெயர்களும் இருந்தது. 

கீழிறங்கும் வழியில் ஒரு தென்னை மரம் அளவு இருக்கும் அடி மரத்தினை ஒரு 4 அடி உயரம் வெட்டி வைத்திருந்தனர். அதன் தோல்கள் சீவப்பட்டு வழவழப்பாக இருத்தது. அதை சிறிய மாங்காய் துண்டுகள் போல நறுக்கி விற்கின்றனர். அருகில் சென்று அது என்ன என்று விசாரித்தோம். அது ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது என்று கூறினார். சுவைத்துப் பார்க்க இரண்டு துண்டுகளை வாங்கி சாப்பிட்டோம். துவர்ப்பு கலந்த சுவையாக இருந்தது. எங்களுக்கு பிடிக்கவில்லை.

கீழே இறங்கி புனே நெடுஞ்சாலையை அடைந்தோம். பாஜா குகையருகே படம் பிடித்த மற்ற குகைகளின் பெயர்களை கூகிளில் போட்டுப் பார்த்து வேறு ஏதாவது செல்லும் வழியில் உள்ளதா என்று பார்த்தேன். "பெட்ஸே" என்னும் குகை செல்லும் வழியில் பத்து கிமீ  உள்ளே உள்ளது என்று கூகிள் காட்டியது. 

மற்ற இரண்டு குகைகளைக் காட்டிலும் இது குறைவாக அறியப்பட்ட குகையாகும். அதனால் வழிப்பலகைகளும் ஏதும் இல்லை. அதனை நோக்கி புறப்பட்டோம். குகைக்கு பக்கத்தில் செல்ல வழியை தவற விட்டு கொஞ்சம் முன்னோக்கி சென்று விட்டோம். பின்பு அங்கிருந்த ஒரு சிறிய வழி பலகையில் பாதையினைப் பார்த்துச் சென்றால் அது ஒரு தோட்டத்திற்குள் சென்று விட்டது. அங்கிருந்து செல்ல வழி ஏதும் இருக்கவில்லை. மீண்டும் திரும்பி வந்து வழிபலகையை ஒழுங்காகப் பார்த்து ஒரு ஒற்றையடி பாதை போல் இருந்த ஜல்லிசாலைக்கு வந்தோம்.



அங்கிருந்து பார்க்கையில் எதுவுமே தெரியவில்லை. மலை அடிவாரத்தில் ஒரு சிறு அறை மட்டும் இருந்தது. அங்கு பக்கத்தில் சென்ற போது தான், ASI யினால் பொறிக்கப்பட்ட "பேட்சா குகை" என்னும் பலகை கண்ணுக்குப் பட்டது. அங்கு வண்டியினை நிறுத்திவிட்டு ,மேலே ஏறினோம். மதிய வெயில் சுட்டெரித்தது. தண்ணீரும் மிகவும் கொஞ்சமாகவே இருந்தது. பயணம் முழுவதும் ஷூ அணிந்திருந்ததால் சிரமப்படாமல்  நடக்க முடிந்தது. செருப்பு அணிந்து இவ்வளவு தூரம் நடந்திருக்க முடியாது. கற்படிக்கட்டில் ஏறி மேலேச் சென்றோம்.

மேலே நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். படிக்கட்டுக்கு இடுக்குகளில் சிமெண்ட்  பூசிக்கொண்டிருந்தனர். மேலே ஒரு இளைஞன் சாப்பிட்டுகொண்டிருந்தான். குகைகைளின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது. அதனால் காலைவேளையில் குகைகளை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சாதவாகனர் ஆட்சிக்கு முன் கிமு ஒன்றாம்  நூற்றாண்டில் இந்த குகை நிறுவப்பட்டுள்ளது. பேட்சா குடைவரை குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் சைத்தியத்துடன் கூடிய பிக்குகளின் தியான மண்டபமும், பெரிய தூபியும் உள்ளது. இங்குள்ள தூண்களும், தூபியும் கணித விகிதாச்சாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பை அங்கு பொறித்து வைத்துள்ளனர். 

குகை எண் 11ன் குடைவரை விகாரத்தின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில் உள்ளது. இந்த விகாரத்தில் பல்வேறு சிறு குகைகள் கல்பலகைகளுடன் பௌத்த பிக்குகள் ஓய்வெடுக்க செதுக்கப்பட்டுள்ளது. இந்த விகாரம் ஒரு தியான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நண்பர் ஒரு vlog செய்ய பல முயற்சிகள் செய்து, வீடியோ எடுத்து வாட்ஸாப் குரூப்பில் போட்டார். நானும் எடுக்க முயற்சி செய்தேன், பேச்சு திணறிக்கொண்டே இருந்ததால் விட்டு விட்டேன். நான் வீடியோ எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அந்த குகையினைப் பற்றி கூறும்படி கேட்டனர். நானும் அந்த குகையின் அமைப்பை ஆங்கிலத்தில் சொல்லி விளக்கினேன். ஒரு சுற்றுலா வழிகாட்டியாகி விட்டோமே என்று மனதிற்குள் புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து கீழே இறங்கி புனேவை நோக்கி புறப்பட்டோம். வழியில் திராட்சை கொஞ்சம் வாங்கிக்கொண்டு சென்றோம். புனேவிற்கு ஆறு மணி அளவில் சென்றோம். முந்தைய நாள் சாப்பிட்ட சிக்கன் மோமோஸ் கடைக்கு சென்று மோமோஸ் சாப்பிட்டோம். அங்கிருந்து வண்டியினை சுதீரிடம் கொடுத்துவிட்டு நடந்தே கொஞ்ச தூரம் சென்றோம்.

இரவு 9:30 க்கு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு ரயில் டிக்கெட் போட்டிருந்தோம். ஒரு தள்ளு வண்டி கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டிட்டோம். அங்கு நிறைய குட்டி ஸ்டூல்கள் போட்டு வைத்திருந்தனர். சாப்பிட வருபவர்கள் அதிலே அமர்ந்து சாப்பிடலாம். வழக்கம் போல், கல்லூரி நண்பர்களும் , காதல் ஜோடிகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நாங்கள் சாப்பிட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் சென்றோம். ரயில் ஏறி, புறப்பட ஆரம்பமானதும், நானும்,நண்பரும்  அவரவர்  படுக்கையில் படுத்தோம்.நண்பர் படுத்த உடனேயே உறங்கி விட்டார். நானும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டிருந்தேன். 

அடுத்த நாள் அவுரங்காபாத்தில் விடியல்.

No comments:

Post a Comment