Friday 4 October 2024

புன்னகை

'உள்ள போங்கணா'  என்று பின்னாடிருந்து சொல்லிக்கொண்டே இருந்தான் கோல்காரன். உள்ள போய்  கடைசி சீட்டில் உட்கார்ந்து தலையில் கட்டின துண்டை எடுத்து துடைத்துக் கொண்டான் வேடி. இந்த புரட்டாசி மாசத்துலயும் அக்னி வெயில் கணக்கா அடிக்குதே, என்று நினைத்துக் கொண்டான். 

அந்த ஊரில் இருப்பவர்கள் வண்டிவைத்துக் கொண்டு குல தெய்வ கோவிலுக்கு போவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி போக முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் தடங்கலாக வந்து கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வருடம் மொத சனிக்கிழமையே போய்விடலாம் என்று ஊர்காரர்கள் ஒரு மனதாக முடிவு செய்திருந்தனர்.

நெல்லு வெளஞ்சாலும், இல்லனாலும், கூழு குடிச்சாலும் குடிக்கலனாலும் இத மட்டும் பண்ணணுமடா என்று ஊர் கிழவிகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருந்தும் அஞ்சு வருஷம் போகாம போனது, எல்லார் மனசுலயும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. அதனால் இந்த வருஷம் சின்ன புள்ளயங்களிலிருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லாரும் சந்தோசமாக பழைய துணியா இருந்தாலும் நல்லா தொவச்சு கட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். 

ஊரென்றால் பெரிய ஊர் ஒன்றும் இல்லை. பதினைந்து குடும்பங்கள் மட்டுமே. அதனால் ஒரு பஸ்ஸிலேயே அடைத்துக் கொண்டு போக வேண்டியது தான் என்று முடிவு செய்தனர். ஊருக்கு ரோடெல்லாம் ஒன்றும் இல்லை. மண் சாலை தான். ஊருக்கு இன்னும் கவர்மெண்ட் பஸ் கூட வரவில்லை. அனைத்தும் சிறிய ஓட்டு வீடுகள். ஒரே ஒரு காரை வீடு. ரெண்டு குடிசை வீடு.

வேடிக்கு எப்படியாவது இந்த வருஷம் மண்ணுல போட்டதெல்லாம் வெளஞ்சருணும்னு ஆசை. ரெண்டு மூணு வருசமா எது வெரைச்சாலும், நட்டாலும் ஒண்ணமில்லாம போயிடுது. மூணு வேல கஞ்சிக்கே சில நாளு அல்லாட வேண்டியதா இருக்கு. அவனும் என்னென்னவோ செஞ்சி பாத்தான். ஒன்னும் பிரயஜோன படல. இயற்கையா இருக்கற உரமும் போட்டு பார்த்தான். ஆபீஸ் மருந்தும் அடிச்சி பார்த்தான். ஒன்னும் சரிப்பட்டு வரல. மழையும் பட்டத்துக்கு தவுந்தாப்புல வர்ரதுல்ல.

ஒரு முறை நல்லா வெளைஞ்சி வந்த நெல்லயும் எலியே கத்தரிச்சு போட்டுருச்சு. மழ பேஞ்சி தண்ணி இருக்கறப்ப வெளஞ்சதும் இப்படி ஆயிடுச்சேன்னு அவன் அதில இருந்து மனசே ஒடஞ்சி போய்ட்டான். பத்து வயசுலையும், அஞ்சு வயசுலயும் பசங்க மூக்கொழிகிகிட்டு அம்மணமா ரோட்ல நெஞ்சு பரி எலும்பு தெரிய நோஞ்சானுங்க மாதிரி விளையாடிட்டு இருக்கறது பாக்குற போது அவனை அறியாமலே கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கீழ எறங்கி வந்துரும்.  

பஸ்ஸில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இதையெல்லாம் யோசித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் வேடி. அனைவரும் ஏறிய பிறகு புழுதியை கிளப்பிக்கொண்டு ஆலமர வளைவில் மேடேறி போய்க்கொண்டிருந்தது பஸ். காலை ஐந்து மணிக்கே கிளம்பியதுனால் தூக்க கலக்கமாகவும், குழந்தைகள் அழுது கொண்டும், அம்மாமார்கள் அவர்களை அதட்டிக்  கொண்டும் இருந்தார்கள். முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு கரட்டில் பஸ் நின்றது. அனைவரும் கீழே இறங்கினர். அவர்களைப் போலவே வேறு ஊர் காரர்களும் பஸ் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். 

இவர்கள் ஊர் போல் இல்லாமல் மத்த ஊர் காரங்க கொஞ்சம் பரவால்ல. ஒத்தக் கல்லா இருந்த சாமிக்கு ஒரு கோயில் கட்டி இருக்காங்க. ஏதோ மத்த ஊர் காரங்க கொடுக்குற பணத்தால சாமிக்கு காரைல கோயிலும் எழுப்பியாச்சு. கோயில் எழுந்து மூணு வருஷம் ஆகியும் இந்த வருஷம் தான் அவுங்க ஊர் கண்களுக்கு கோயில பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கு. 

காலை ஆறு மணிக்கு வெயில் வரத் தொடங்கியது. குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் விக்கிறவன், ஐஸ் விக்கிறவன், வளையல் விக்கிறவன் என்று ஒரே கூச்சலாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள், அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து கடை முன்னாடி நிற்க வைத்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரே ஒரு அடுக்கு கொண்ட காரை கட்டிடம் தான் கோவில். ஒரு சின்ன கல்லா இருந்த சாமிய சுற்றி இந்த கட்டிடத்தை கட்டி இருந்தார்கள். வேடி உள்ளே சென்று சாமியை கும்பிட்டான். சாமிக்கு வெட்ட வெளில இருந்தப்போ இருந்த உக்கிரம், கட்டடத்துக்குள்ள வச்சப்புறம் கொஞ்சம் கொறஞ்ச மாறி தோணிச்சு அவனுக்கு. உள்ள ஒரு பக்கம் மின்-விசிறி  ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் சாமிக்கு போட்ட மாலை காற்றில் ஆடி கொண்டிருந்தது. இந்த வருஷம் நல்லா பயிர் வெளைஞ்சி சாப்பாட்டுக்கு வழி பண்ணுனு சாமி என்று வேண்டிக்கிட்டான். 

வெளியே வந்து கோவிலை சுற்றிக் வந்து கொண்டிருந்தான். ஒரு மூலையில் கோவிலின் மேற்கு பக்கம் காரை கூரையில் ஒரு மாஞ்செடி இள மஞ்சள் நிறத்தில் இலைகளோடு காற்றில் அசைந்து கொண்டிருந்தது. காரையில் அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்த செடியையே அவன் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

No comments:

Post a Comment