Friday 4 October 2024

புன்னகை

'உள்ள போங்கணா'  என்று பின்னாடிருந்து சொல்லிக்கொண்டே இருந்தான் கோல்காரன். உள்ள போய்  கடைசி சீட்டில் உட்கார்ந்து தலையில் கட்டின துண்டை எடுத்து துடைத்துக் கொண்டான் வேடி. இந்த புரட்டாசி மாசத்துலயும் அக்னி வெயில் கணக்கா அடிக்குதே, என்று நினைத்துக் கொண்டான். 

அந்த ஊரில் இருப்பவர்கள் வண்டிவைத்துக் கொண்டு குல தெய்வ கோவிலுக்கு போவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி போக முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் தடங்கலாக வந்து கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வருடம் மொத சனிக்கிழமையே போய்விடலாம் என்று ஊர்காரர்கள் ஒரு மனதாக முடிவு செய்திருந்தனர்.

நெல்லு வெளஞ்சாலும், இல்லனாலும், கூழு குடிச்சாலும் குடிக்கலனாலும் இத மட்டும் பண்ணணுமடா என்று ஊர் கிழவிகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருந்தும் அஞ்சு வருஷம் போகாம போனது, எல்லார் மனசுலயும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. அதனால் இந்த வருஷம் சின்ன புள்ளயங்களிலிருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லாரும் சந்தோசமாக பழைய துணியா இருந்தாலும் நல்லா தொவச்சு கட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். 

ஊரென்றால் பெரிய ஊர் ஒன்றும் இல்லை. பதினைந்து குடும்பங்கள் மட்டுமே. அதனால் ஒரு பஸ்ஸிலேயே அடைத்துக் கொண்டு போக வேண்டியது தான் என்று முடிவு செய்தனர். ஊருக்கு ரோடெல்லாம் ஒன்றும் இல்லை. மண் சாலை தான். ஊருக்கு இன்னும் கவர்மெண்ட் பஸ் கூட வரவில்லை. அனைத்தும் சிறிய ஓட்டு வீடுகள். ஒரே ஒரு காரை வீடு. ரெண்டு குடிசை வீடு.

வேடிக்கு எப்படியாவது இந்த வருஷம் மண்ணுல போட்டதெல்லாம் வெளஞ்சருணும்னு ஆசை. ரெண்டு மூணு வருசமா எது வெரைச்சாலும், நட்டாலும் ஒண்ணமில்லாம போயிடுது. மூணு வேல கஞ்சிக்கே சில நாளு அல்லாட வேண்டியதா இருக்கு. அவனும் என்னென்னவோ செஞ்சி பாத்தான். ஒன்னும் பிரயஜோன படல. இயற்கையா இருக்கற உரமும் போட்டு பார்த்தான். ஆபீஸ் மருந்தும் அடிச்சி பார்த்தான். ஒன்னும் சரிப்பட்டு வரல. மழையும் பட்டத்துக்கு தவுந்தாப்புல வர்ரதுல்ல.

ஒரு முறை நல்லா வெளைஞ்சி வந்த நெல்லயும் எலியே கத்தரிச்சு போட்டுருச்சு. மழ பேஞ்சி தண்ணி இருக்கறப்ப வெளஞ்சதும் இப்படி ஆயிடுச்சேன்னு அவன் அதில இருந்து மனசே ஒடஞ்சி போய்ட்டான். பத்து வயசுலையும், அஞ்சு வயசுலயும் பசங்க மூக்கொழிகிகிட்டு அம்மணமா ரோட்ல நெஞ்சு பரி எலும்பு தெரிய நோஞ்சானுங்க மாதிரி விளையாடிட்டு இருக்கறது பாக்குற போது அவனை அறியாமலே கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கீழ எறங்கி வந்துரும்.  

பஸ்ஸில் கடைசி சீட்டில் உட்கார்ந்து இதையெல்லாம் யோசித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் வேடி. அனைவரும் ஏறிய பிறகு புழுதியை கிளப்பிக்கொண்டு ஆலமர வளைவில் மேடேறி போய்க்கொண்டிருந்தது பஸ். காலை ஐந்து மணிக்கே கிளம்பியதுனால் தூக்க கலக்கமாகவும், குழந்தைகள் அழுது கொண்டும், அம்மாமார்கள் அவர்களை அதட்டிக்  கொண்டும் இருந்தார்கள். முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு கரட்டில் பஸ் நின்றது. அனைவரும் கீழே இறங்கினர். அவர்களைப் போலவே வேறு ஊர் காரர்களும் பஸ் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். 

இவர்கள் ஊர் போல் இல்லாமல் மத்த ஊர் காரங்க கொஞ்சம் பரவால்ல. ஒத்தக் கல்லா இருந்த சாமிக்கு ஒரு கோயில் கட்டி இருக்காங்க. ஏதோ மத்த ஊர் காரங்க கொடுக்குற பணத்தால சாமிக்கு காரைல கோயிலும் எழுப்பியாச்சு. கோயில் எழுந்து மூணு வருஷம் ஆகியும் இந்த வருஷம் தான் அவுங்க ஊர் கண்களுக்கு கோயில பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கு. 

காலை ஆறு மணிக்கு வெயில் வரத் தொடங்கியது. குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் விக்கிறவன், ஐஸ் விக்கிறவன், வளையல் விக்கிறவன் என்று ஒரே கூச்சலாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள், அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து கடை முன்னாடி நிற்க வைத்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரே ஒரு அடுக்கு கொண்ட காரை கட்டிடம் தான் கோவில். ஒரு சின்ன கல்லா இருந்த சாமிய சுற்றி இந்த கட்டிடத்தை கட்டி இருந்தார்கள். வேடி உள்ளே சென்று சாமியை கும்பிட்டான். சாமிக்கு வெட்ட வெளில இருந்தப்போ இருந்த உக்கிரம், கட்டடத்துக்குள்ள வச்சப்புறம் கொஞ்சம் கொறஞ்ச மாறி தோணிச்சு அவனுக்கு. உள்ள ஒரு பக்கம் மின்-விசிறி  ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் சாமிக்கு போட்ட மாலை காற்றில் ஆடி கொண்டிருந்தது. இந்த வருஷம் நல்லா பயிர் வெளைஞ்சி சாப்பாட்டுக்கு வழி பண்ணுனு சாமி என்று வேண்டிக்கிட்டான். 

வெளியே வந்து கோவிலை சுற்றிக் வந்து கொண்டிருந்தான். ஒரு மூலையில் கோவிலின் மேற்கு பக்கம் காரை கூரையில் ஒரு மாஞ்செடி இள மஞ்சள் நிறத்தில் இலைகளோடு காற்றில் அசைந்து கொண்டிருந்தது. காரையில் அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்த செடியையே அவன் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

சத்தம்

உள்ளங்கையில் வைத்து கட்டை விரலால் மொபைலை நோண்டிக்கொண்டே 'ஊம்' கொட்டிட்டிருந்தான் தேவராஜன்.  

"என்ன மச்சி, மொபைலையே பாத்துட்டு இருக்க" என்றான் அருண். இருவரும் தினமும் வேலைக்கு இந்த இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் சேர்ந்தே செல்வார்கள். கூடவே மற்ற இளைஞர்களும் அவர்களுடன் அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறிக்கொள்வார்கள்.

"என்ன மச்சான் இவன் போனயே பாத்துட்ருக்கான், யார்ட்டயும் பேசாம" விக்கி, அருணிடம் கேட்டான். "போன வாரம்  நடந்த சம்பவத்துலுருந்து , இப்டி தாண்டா இருக்கான்" என்றான் அருண்.

'ஆளுமா, டோலுமா' என்று ராகம் இழுத்து கோரஸாக பாடிக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு கறுப்பு   ப்ளூடூத் ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு போகுமிடம் எல்லாம் இசையை தூக்கிக்கொண்டு போகும் கூட்டம். தேவராஜனுக்கு குத்துப் பாட்டுன்னா ஒரே குஷிதான். எதிரில், பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தாலும் எந்த கவலையும் இல்லை.

காலைல வேலைக்கு போற இந்த ரெண்டு மணி நேரத்தை இசையால நிரப்பி அதை அந்த பெட்டில இருக்கும் எல்லாருக்கும் இலவசமா கொடுக்கறதுல இந்த பசங்க கில்லாடி. ஒவ்வொருத்தருக்கு ஒரு பாட்டு. ஒரு சுற்று முடிந்ததும் திரும்பவும் இன்னொரு சுற்று ஆரம்பிக்கும்.

ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மூட்ல பாட்டு போடுவான். காலையில் காதலி கிட்ட சண்டை போட்டவன் சோக பாட்டும், செல்லம் கொஞ்சனவன் குஷி பாட்டும் போடுவான். வெறும் வாய் பார்ப்பவன் அந்த சமயத்தில் ஹிட் ஆன பாடலை போட்டு கேட்பான். இவர்கள் கேட்கும் பாடலை வைத்தே எவன் என்னன்ன மூட்ல இருக்காங்கனு தெரிஞ்சிரும்.  

காலைல ஏழு  மணிக்கு வர வேண்டிய வண்டி, ஏழரை மணிக்கு தான் வந்தது, ஒன்பது மணிக்கு முன்னால லாகின் செய்யவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கட் ஆகிடுமே என்ற கவலையில் இருந்தான் தேவராஜன். ஒரு தனியார் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ளான். எப்போதும் வாடிக்கையாளர்களுடன் பேசும் வேலை. வெட்டிய தலையும், திருத்தி அழகுபடுத்தப்பட்ட தாடியும் வைத்திருந்தான். அவன் தான் அந்த கூட்டத்தில்  இருக்கும் alpha male. அருண் எப்போதும் தேவராஜனாக ஆக துடித்துக் கொண்டிருப்பவன். 

"மேஸ்திரி, வந்துட்டுருக்கன், கெலமங்கலம் வந்துட்டன். இன்னும் கால் மணி நேரத்துல வந்துருவன்" போனில் பேசினான் பச்சை சட்டை போட்டு படியோரம் நின்றிருந்தவன். பக்கத்தில், அவனை மாறியே முகத்தோற்றத்துடன், கையில் மதிய உணவு கொண்டு போகும் wire கூடையை வைத்திருந்தான் ஒருவன் . திரும்பவும் பச்சை சட்டை காரனுக்கு போன் வந்தது.

"இல்லனா, வந்துருவன். ரயில் லேட்டாயிடுச்சு. ஒரு 10 நிமிசம் தான. வேற எடத்துக்கு போல. அங்கேயே வந்துர்ரன். என்ன விட்டுட்டு போய்டாதீங்க." முகத்தில் வெறுப்புடன் படியிலிருந்து எச்சி மூஞ்சான். அவன் நின்று கொண்டிருந்த எதிர் இருக்கையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாட்டை போட்டு விட்டுட்டு அவனவன் போன் பார்த்துக் கொண்டிருந்தான்கள். 

"ஏன்டா சௌண்டு கம்மியா வச்சி கேட்க கூடாதா. பக்கத்தூரு வரிக்கும் கேக்குது." பச்சைசட்டைக்காரன் அருணைப் பார்த்து கேட்டான். "பாட்டு நல்லா தான இருக்கு" என்றான் அவன். "டேய் சௌண்ட கம்மியா வைங்கடான்னா பாட்டு நல்லாருக்கு, நாறிருக்குனு".

"வேண்ணா, நீ பக்கத்துக்கு பொட்டிக்கு போ" என்றான் தேவராஜன்,  மொபைலை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே. பச்சை சட்டைக்காரன் "இவங்கப்பன் ஊட்டு ரயிலு, இவன் சொல்றான்" என்று எகிறினான். பாட்டு சத்தத்திலும் , இவர்கள் வாக்கு வாதத்திலும் அங்கு ஒரே இரைச்சலாக இருந்தது. திடீரென்று பச்சை சட்டை ப்ளூடூத் ஸ்பீக்கரை புடுங்கி கீழ போட்டான்.

"தேவிடியா பயா, என்ன மயிருக்கு ஸ்பீக்கர் மேல கைய வக்கிர" சீட்டில்  இருந்து எழுந்து அவனுக்கு முன்னாள் வந்தான் தேவராஜன். அவனுடைய தலை ஆடிக்கொண்டே இருந்தது. பச்சை சட்டக்காரன் அவன் இடது கன்னத்தில் சடாரென்று ஒரு அரை விட்டான். தேவராஜன் ஒரு நொடி கலங்கி, சுதாரித்து, அவனை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் அவன் நண்பர்கள் அவனை பிடித்து பின்னுக்கு தள்ளினார். பச்சை சட்டகாரனை அவன் கூட வந்தவன் இழுத்துக் கொண்டு பக்கத்துக்கு பெட்டியை நோக்கி சென்றான். ஓசூர் ரயில் நிலையத்திற்குள் வண்டி மெதுவாக வந்து கொண்டிருந்தது. 

"மச்சான், ஏன்டா இப்டி இருக்க, அதான் புது ஹெட்போன்ஸ் வச்சிருக்க இல்ல. அதுல பாட்டு கேளு. சும்மா போனயா நோண்டிட்டிருக்க" என்றான் அருண். 

"எனக்கு தெரியும், நீ கொஞ்சம் மூடு" என்றான் தேவராஜன் பதிலுக்கு. "மச்சி இந்த சனி, ஞாயிறு எங்கியாவது அமைதியான எடத்துக்கு போலாமா, பசங்களோட" என்றான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு.

"ஆமா, மச்சி, தெகினிக்கோட்ட பக்கத்துல யாருமே போகாத எடம்  ஒன்னுருக்கு. அங்க போலாம்" என்றான் அருண்.

ரெண்டு வண்டியில் சனி காலையில் அவர்கள் நான்கு பேர் அந்த இடத்திற்கு சென்றனர். சுற்றிலும் சிறிய சிறிய குன்றுகள். அதில் ஒரு குன்றின் மேல் ஏறிச்  சென்றனர். அங்கு  இருப்பதிலேயே அது தான் பெரிய குன்று. மேல செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. வழியென்று ஒன்றும் இல்லை.  முற்றிலும் ஆள் அரவமற்று இருந்தது. காட்டு மரங்கள் இருந்தாலும், அடர்த்தியாக இல்லை. பாறைகள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தது. கையில் ஆளுக்கொரு கோல் வைத்துக் கொண்டு மேலே  ஏறினார். அரை மணி நேரத்தில் உச்சிக்கு வந்துவிட்டனர்.

மேலே ஒரு சமதள புல்வெளி இருந்தது. அங்கிருந்து, அருகிலிருக்கும் சிறு கிராமங்களும் தூரத்தில் இருக்கும் நகரமும் தெரிந்தன. எங்கோ தூரத்தில் ஒரு அணை இருந்தது. காற்று ஆளை தள்ளும் அளவுக்கு வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இருந்ததால் வெயில் இல்லாமல் இதமாக இருந்தது.

"மச்சி, அருமையான எடம் டா, பயங்கர அமைதியா இருக்கு மச்சி. டேய் அந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் எடுத்துட்டு வந்துருக்க இல்ல" என்றான் தேவராஜன்.