Thursday 29 August 2024

'காவிரிக்கரை' பயணம் - 2

 காவிரியின் வடகரை வழியாக வந்து, திரும்பி செல்லும்போது தென்கரை வழியாக போக திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவிரியின் மேல் நிறைய இடங்களில் பாலம் இருந்ததால், நாங்கள் குறுக்கும் நெடுக்குமாக காவிரியோடு சென்று கொண்டிருந்தோம். மோகனூரில் காலையில் "அசல தீபேஸ்வரர்" கோவிலுக்கு சென்றோம். காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள தீபம் அனயா தீபம் என்றொரு ஐதீகம். காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. முந்தைய நாள் முழுவதும் ஜெயவேல் வண்டி ஓட்டியதால், நான் வண்டியை ஓட்டினேன். மோகனூரிலிருந்து, ஸ்ரீராமசமுத்திரம் வழியாக சென்றோம்.

நேற்று நாங்கள் பார்த்த காவிரிக் கரையின் வளம் இங்கிருந்து குறைய ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளும், குடிசை  வீடுகளும் தென்பட்டன. சில இடங்களில் சாலை நன்றாக இல்லை. அதே காவிரி கரை ஒரு இடத்தில வளமுடனும், ஒரு இடத்தில் வளமில்லாமலும் இருந்தது. வீடுகளின் அடர்த்தியும் அதிகமாக  இருந்தது. மாயனூர் பெரிய பாலத்தில் வண்டியை நிறுத்தி காவிரியை பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் தானே வண்டியை ஓட்டிக் கொள்வதாகச் சொன்னார்.

மாயனூரிலிருந்து NH வழியாக காவிரியின் தென்கரையில் சென்று கொண்டிருந்தோம். பெரியார் பாலத்தின் வழியாக திரும்பவும் வடகரைக்கு இறங்கி, முசிறியில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து முக்கொம்பு சென்றோம். நண்பகல் நேரமாதலால் வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. காவிரியின் முதல் கிளைநதியான (தமிழ்நாட்டில்) கொள்ளிடம் இங்கு தான் பிரிகிறது. நாங்கள் பார்த்த போது காவிரியை விட கொள்ளிடத்தில் மிகவும் குறைவாகவே நீர் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த காவிரி பாலத்தின் மேல் சிறிது நேரம் மர நிழலில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம். முக்கொம்பு ஒரு சுற்றுலா தலமாக நன்றாக பராமரித்து வருகின்றனர். நம் ஊரில், சுற்றுலா என்றால் பொதுவாக இருக்கும் ஒரு பூங்காவும் (அல்லது ஒரு பூங்கா இருந்தாலே அது சுற்றுலா தலமாக ஆகி விடுமோ?) இங்கு இருந்தது. நாங்கள் உள்ளே சென்று பார்க்கவில்லை.


                                                        முக்கொம்பு - மேலணை 

சமீபத்தில் சுற்றுலா என்ற சொல்லாடலே என்ன பொருள் கொள்கிறது என்று தெரியவில்லை. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துவிட்டால் மொத்த ஊரும் காலி செய்து வேறு ஊருக்கு சென்று, சொந்த ஊரில் எப்படி இருக்கிறார்களோ அதே வசதிகளுடன், அதே அன்றாட செயல்களுடன் தான் இருக்கிறார்கள். பொதுவாக நாம் நம் அன்றாடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, புதிய ஒன்றை அனுபவிக்க சுற்றுலா செல்வோம். ஆனால் இன்று வெறும் புகைப்படம் எடுப்பதற்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கும் நாம் சுற்றுலா செல்கிறோம். மேலும் விடுமுறை நாட்களில் எந்த சுற்றுலா தலமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல ஜனத் திரள்களால் நிரம்பி வழியும். அங்கு இயற்கையை இயற்கையாக காண முடியாது. அல்லது அதற்கான மனம் நம்மிடம்  எளிதில் அமையாது. 

இந்தியாவில் கடந்த இருபது வருடங்களின் அபாரமான வளர்ச்சி அடைந்த துறை சுற்றுலா. எல்லோரிடமும் இப்போது பணப் புழக்கம் இருப்பதால், கார் என்பது நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு பொருளாகி விட்டதால், காரை வாங்கி விட்டு, கார் வாங்கி விட்டோம் என்பதற்காக வெளியே எடுத்து கிளம்பி விடுகிறோம். ஹோட்டல்களில் ரூம்களும், பேருந்து / ரயில் / விமான பயண சீட்டுகளும் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முன்னரே செய்து விட வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான சூழல் தான். ஆனால் இது மட்டும் போதாது என்றே நினைக்கிறேன். நம்மிடம் பண்பாட்டு பயிற்சி இல்லையென்றால் இதனை எல்லாம் ஒழுங்காக பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. 

முக்கொம்பில் இருந்து  தென்கரை வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஸ்ரீரங்கம் நான் செல்வது இதுவே முதல் முறை. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் தீவு போல் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம். மதிய நேர வெயில் சுட்டெரித்தது. ஸ்ரீரங்கம் கோபுரம் வெகு முன்னரே தெரிந்தது.  கோவிலுக்கு அருகில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்துவிட்டு, அடுத்த முறை கோவிலுக்குள்ளே சென்று பார்க்கலாம் என்று கோவிலின் வெளி மதில் சுவரை சுற்றி அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருக்கும் காவிரியை காண ஒரு ஆஷ்ரமத்தில் நுழைந்தோம். சில பிராமணர்கள் ஏதோ சடங்கு செய்து கொண்டிருந்தனர். உள்ளே சென்று கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது அது தனியார் இடம் என்று. அங்கிருக்கும் படித்துறையில் காவிரியை பார்த்து விட்டு, சிறிது நேரம்  ஓய்வெடுத்துவிட்டு கல்லணை நோக்கி கிளம்பினோம்.

கல்லணை என்றதுமே ஏதோ ஒரு பெருமிதம் நம்மை அறியாமல் நம்மிடம் வந்து விடுகிறது. பல ஆயிரம் போலி பெருமிதங்களைக் கொண்டு நமக்கு நாமே பெருமை அடித்துக் கொள்வதை விட, கல்லணை உண்மையில் ஒரு பெருமைப்பட வேண்டிய பொறியியல் அற்புதம் என்றே நினைக்கிறேன். முக்கொம்பில் காவிரியில் பிரிந்த கொள்ளிடம், கல்லணையில் காவிரியின் நீரை மீண்டும் பெற்று, வடகிழக்கு நோக்கி பாய்கிறது. கல்லணையிலிருந்து காவிரி வேணாறாக பிரிந்து காவிரிக்கு தெற்கில் செல்கிறது. காவிரிக்கு வடக்கில் கொள்ளிடமும், தெற்கில் வேணாரும் பாய்கிறது. 




                                                       கல்லணை - பாலம் மேல் 

முக்கொம்பில் கொள்ளிடம் பிரிந்து செல்லுமிடத்தில் இருக்கும் அணை மேலணை என்றும், கல்லணையில் கட்டப்பட்டது கீழணை என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்லணை கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அதில் மாற்றம் கொண்டு வந்து, இப்பொழுது இருக்கும் அணையாக உள்ளது. காவிரியின் நீர் டெல்டா பகுதிகளுக்கு இவ்வணைக்கட்டு மூலமாகவே பிரிந்து வாய்க்கால் வழியாக செல்கிறது. வேணாற்றிருக்கு தெற்கே இந்த வாய்க்கால் வழியாக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் பாய்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து பூம்புகார் வரை காவிரியின் பல்வேறு இடங்களில் சிறிய வாய்க்கால்கள் அமைத்து நீரினை பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையத்தில் காவிரிக்கு வடக்கில் ராஜ வாய்க்கால் பிரிந்து செல்கிறது. தெற்கிலும் ஒரு வாய்க்கால் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். தெற்கில் செல்லும் வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுடன் இணைகிறது. வடக்கில் பிரிந்த ராஜ வாய்க்கால், மேலும் இரண்டாக பிரிந்து செல்கிறது. மேலும் மாயனூரில் ஒரு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு சிறு வாய்க்கால்கள் காவிரியின் கிளை நதி போலவே செல்கிறது. கல்லணையிலிருந்து பிரியும் வாய்க்கால் ஒரு நதி போலவே டெல்டா பகுதிகளுக்கு நீரினை கொண்டு செல்கிறது. 

கல்லணையில் குளிக்கலாம் என்ற எங்கள் எண்ணம் காவிரியின் வேகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. கல்லணை ஒரு முட்கரண்டியில் (fork) இருக்கும் நான்கு முட்கள் போல, காவிரி நீரை நான்கு திசைகளில் பிரித்து அனுப்புகிறது. அதில் ஒன்றே புதுக் காவிரியாக பூம்புகார் வரை பாய்கிறது. ஏன் நான் புதுக் காவிரி என்று சொல்கிறேன் என்றால், கல்லணைக்கு மேலே வேறு பண்பாடாகவும், கல்லணைக்கு கீழே வேறு பண்பாடாகவும் இருக்கிறது.



                                                    காவிரி - மேலணை - கீழணை (கல்லணை)

                                          source - http://www.thanjavurtourism.com/kallanai-dam.html

கல்லணையிலிருந்து திருவையாறு நோக்கி கிளம்பினோம். மதிய சாப்பாட்டினை ஒரு சிறு  கடையில் முடித்துக்கொண்டு சென்றோம். காவிரியின் இடது புறமாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். முக்கொம்பில் இருக்கும் போதே நண்பர் தண்டபாணி மொபைலில் அழைத்து இன்று இரவு ஆடுதுறை வந்துவிடுங்கள் என்று சொன்னார். நாங்களும் சரி என்று சொன்னோம். காவிரி கரையோரம் பூவரச மரங்கள் தென்பட ஆரம்பித்தது. செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளியில் வண்டியினை நிறுத்தி குடமுருட்டி ஆறு காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். காவிரிக்கு தெற்கில் குடமுருட்டி பிரிந்து செல்கிறது. 



அங்கு குளிக்கலாம் ஒரு படித்துறையில் இறங்கினோம். அங்கு ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு எங்கள் பின்னால் வந்தார். 

"இங்க ஆழம் எத்தன அடி இருக்கும், ணா" என்று கேட்டேன்.

"நானும் ஊருக்கு புதுசு தான். தஞ்சாவூர் பக்கத்துல. ஆத்த பாத்த ஒடனே குளிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அத்தான் படிதொறக்கி வந்தன்" என்று சொன்னார்.

நாங்களும் அங்கு படித்துறையில் கணுக்கால் அளவு நீரில் குளித்தோம். நீர் பயங்கர வேகமாக வந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்று குளிக்க முடியவில்லை. நீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தது. ஆலமரத்தடியில் படித்துறையில் நான்கு, ஐந்து பேர் லுங்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். நாங்கள் இறங்குவதை பார்த்த ஒருவர், பக்கத்தில் இருக்கும் சுவற்றிற்கு இப்பால் வந்து குளிக்கும் படி சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கெட்ட வார்த்தையில் திட்டுவது கேட்டது. நாங்கள் திரும்பி பார்த்தபோது அவர்  மொபைலில் யாரையோ கெட்ட வார்த்தைகளில் ஒரு இரண்டு நிமிடம் விடாமல் பயங்கர கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் கழித்து "தம்பி, உள்ள போகாதீங்க  மேலயே குளிங்க, தண்ணீல அடிச்சிட்டு போயிடுவீங்க" என்று எதுவுமே நடக்காதது போல் எங்களிடம் அமைதியாக பேசினார். அவ்வளவு கோபத்தையும் எப்படி விட்டுவிட்டு சாதாரணமாக பேசுகிறார் என்று ஆச்சரியப்பட்டோம். அப்படி பேசுவதே அந்த கோபத்தில் இருந்து வெளியே வருவதற்காக கூட இருக்கலாம்.




                                                          காவிரி - குடமுருட்டி பாலம் 

அரை மணி நேரம் நன்றாக குளித்து விட்டு, குடமுருட்டி ஆற்றுக்கும், காவிரிக்கும் இடையில் உள்ள வழியில் திருவையாறு நோக்கி கிளம்பினோம். நெல்லும், கரும்பும், வாழையும் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆனால் மக்களிடம் பெரிய வசதிகள் இல்லை. ஓட்டு வீடுகளும், சிறு மாடி வீடுகளும் இருந்தன. மொத்த ஊர்களுமே காவிரியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு புறமும் மர நிழலோடு நாங்கள் செல்லும் போது ஏதோ கேரளாவிற்குள் தவறி வந்து விட்டோமா என்றே நினைத்தோம். எங்கு பார்த்தாலும் நீரின்  வாசமும்,மரங்களும் இருந்தன. அங்கங்கே காவிரி ரோட்டிற்கு மிக அருகில் செல்கிறாள். ஆண்கள் பெரும்பாலும் லுங்கிகளிலேயே இருந்தனர். ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கங்கே காவிரியின் படித்துறைகளில் குளித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒரு இடத்தில் நடு ரோட்டில் ஒரு இளம் பெண்ணும் ஒரு முதியவரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆடு மேய்ப்பவர்கள். அப்பெண்ணை வண்டி போகிற வேகத்தில் சட்டென்று ஒரு நொடி பார்த்தேன. ஒரு இருபது வயது இருக்கும் இளம் பெண். கருப்பாக இருந்தாள். கையில் ஆடு ஓட்டும் குச்சுடன் இருந்தாள். அவள் கண்களில் இருந்த கள்ளமின்மை அவளை மிகவும் அழகாக காட்டியது. கல்லணைக்கு மேலிருக்கும் பெண்களிடம் இந்த கள்ளமின்மையும், அழகும் இல்லை. கல்லணைக்கு கீழிருந்து பெண்கள் கருப்பாகவும், அழகாகவும் இருந்தனர். உயரமும் சற்று குறைவாகவே இருந்தனர். 

இங்கு வாழை இலைகளை கட்டி ஏற்றிக்கொண்டிருந்தனர். தலைவாழை இலைகளை நன்றாக சுருட்டி வாழைக் தண்டுகளை கொண்டே மூடி எடுத்து செல்கின்றனர். 



திருவையாறு வந்து, ஒரு படித்துறையில் அமர்ந்து பேசி பேசிக்கொண்டிருந்தோம். திருவையாற்றில் காவிரி முழுவதும் தளும்பி  செல்கிறாள். நாங்கள் அமர்ந்த படித்துறைக்கு ஐந்தடி பக்கத்தில் வீடுகள் உள்ளன.திடீரென்று ஐந்து இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர்.  திருவையாற்றில் அசோகா என்னும் இனிப்பு பிரபலம் என்று நண்பர் சொன்னார். அங்கு குளித்துக் கொண்டிருந்த  ஒருவரிடம் கேட்டோம். அவர் ரெண்டு கடை இருப்பதாக சொன்னார். பங்காளிகளா என்று தெரியவில்லை. ஒரு கடையில் சுத்த நெய்யில் அசோகா கிடைக்கும் என்றும், மற்றோரு கடையில் டால்டா அசோகா கிடைக்கும் என்றும் கடையின் பெயர்களை சொன்னார். நாங்கள் அவற்றைக் கேட்டுக்கொண்டு வழக்கம் போல் பெயரினை மாற்றி டால்டா அசோகாவினை வாங்கிச் சென்றோம்.

பதினெட்டு / பத்தொம்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த  இசை மேதை தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த வீடு இப்படித்துறையின் சாலையில் தான் உள்ளது.  வீட்டின் அருகிலேயே இசைப்பள்ளியும் ஒன்று உள்ளது. அவற்றை கடந்து ஆடுதுறை நோக்கி புறப்பட்டோம்.

"இந்த தேக்கு மரமெல்லாத்தையும் அரசாங்கமே வெட்டி மாற சாமான்கள் செய்து வித்தா நல்லாருக்குமில்ல" என்று காவிரியின் கரையோரம் நிறைய வளர்ந்திருந்த தேக்கு மரங்களை பார்த்துக் கொண்டே நண்பருடன் சொன்னேன்.

"அது பெரிய ஊழலாயிடும்" என்று நண்பர் சொன்னார்.

"ஊழல் நடக்காதுன்னு முடிவு செஞ்சு தான் ஒரு துறைய உருவாக்கணும்னா, எந்த ஒண்ணுத்தையும் உருவாக்கவே முடியாது" என்று சொன்னேன். தேக்கு மரங்களும், பூவரசு மரங்களும் ஒட்டி, முழு அளவோடு ஓடும் காவிரியை பார்த்துக் கொண்டு சென்றோம். 

இன்னொரு பொதுவான ஒரு அம்சம் மயில்கள். பவானியை தாண்டியதிலிருந்தே மயில்கள் அதிகமாக தென்பட்டன. முசிறியில் ஒரு இடத்தில் ஆண் மயில் ஒன்று அழகாக தோகை விரித்திரிந்தது. ஆனால் நண்பர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டதால், ஒழுங்காக பார்க்க முடியவில்லை. ஒரு இடத்தில் காவிரிக் கரையின் மிக அருகில், மைல் கல்லில் மேல் தன் நீலக் கழுத்தினை ஒரு பக்கம் திருப்பிப் பார்த்துக் கொண்டு நீண்ட தோகைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்த காட்சி ஒரு ஓவியம் போல் மனதில் பதிந்தது. 

திருவையாறிலிருந்து ஆடுதுறைக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஆடுதுறைக்கு கூகுள் மேப் போட்டுக்  கொண்டு சென்றோம். காவிரிக்கரை ஒட்டியே மாநில நெடுஞ்சாலை உள்ளதால் வழியில் காவிரியை விட்டு பிரிந்தும் சேர்ந்தும் சென்று கொண்டிருந்தோம். காவிரியுடன் செல்வது ஒரு ஒளிந்து விளையாடும் ஆட்டம் போலவே இருந்தது. கல்லணைக்கு கீழே காவிரியின் அகலம் குறைந்து கொண்டே செல்கிறது. மெத்திட்டாரு என்ற இடத்தில் அரசலாறு என்னும் ஆறு பிரிந்து காவிரியின் தெற்கே செல்கிறது. ஒரு இடத்தில் டீக்குடிக்க நிறுத்தினோம். மாலை நேரமானதால் டீக்கடையில் கூட்டம் இருந்தது. 

நான்கைந்து இளைஞர்கள் 'பொட்டணம்' வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 18 முதல் 20 வரை வயதுள்ள இளைஞர்கள். ஐந்தாறு  பேர் இருந்தனர். எவரும் சிகரெட்டு அடிக்கவில்லை. அவர்கள் பேச்சும், கிண்டலும் கேலியாக இருந்தது. எங்கள் ஊரில் மட்டும் ஏன் நாலைந்து நண்பர்கள் சேர்ந்தால்  சிகரெட்டும், சினிமாவும் மட்டுமில்லாமல் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிவது போல் ஆளுக்கொரு வண்டியில் முறுக்கிக்கொண்டு போகிறார்கள் என்றே தெரியவில்லை. அல்லது நாங்கள் பார்த்த இளைஞர்கள் விதி விலக்குகலா என்று தெரியவில்லை. நாங்களும் பொட்டணம் வாங்கி சாப்பிட்டோம். எங்கள் ஊர் பக்கடா அளவில் ஒரு  பொட்டலத்தில் மடித்து கொடுத்தனர். நன்றாக இருந்தது.



திருப்பழனம், கபிஸ்தலம், சுவாமிமலை, திருவிசநல்லூ வழியாக சென்று கொண்டிருந்தோம். மேற்கே சூரியன் மறையும் மாலை ஒளி பக்கவாட்டில் காவிரியின் மேல் விழுந்து, வெள்ளி மின்னுவது போல் நீர் பிரதிபலித்தது. வண்டியில் சென்று கொண்டே இதை எல்லாம் பார்த்துச் சென்றதால், அந்த நொடியின் காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல் மனதில் பதிந்து விடிகிறது. பைக்கில் திறந்த வெளியில் காற்றையும் , ஒளியையும்  நேரடியாக நாம் உணர்வதால் இது போன்றவற்றை அறிய முடிகிறது. காரில் பயணிக்கும் போது இந்த அனுப்பவும் நமக்கு ஏற்படுவதில்லை. காரில் செல்வதால் வேறு பயன்கள் இருந்தாலும், இது போன்ற சில அனுபவங்கள் கிட்டுவதில்லை.

ஆடுதுறைக்குள் காவிரியையும் , வீரசோழ ஆற்றையும் (காவிரியின் இன்னொரு கிளை ஆறு) கடந்து உள்ளே சென்றோம். ஆடுதுறை ஒரு சிறு டவுன். நண்பர் தண்டபாணியிடம் கால் செய்து வந்து விட்டதாக கூறினோம். அவரும் சிறிது நேரத்தில் வந்தார். ஒரு டீ குடித்துவிட்டு, அவரது வீட்டிற்கு  சென்றோம். ஆடுதுறை ரயில் நிலையம் அருகிலேயே அவருடைய பணியிடமும், வீடும் உள்ளது. இரவு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

No comments:

Post a Comment