Friday 10 March 2023

பறந்துபோய்விட்டான்


 

எட்கர் கீரத் அவர்களின் 'Fly Already' சிறுகதைத் தொகுப்பை , தமிழில் செங்கதிர் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

'பறந்துபோய்விட்டான்' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பைக் கோரும் கதைகள். சில கதைகள் நேரடியாகவும் , சில கதைகள் பல்வேறு தளங்கள் கொண்ட கதைகளாகவும் உள்ளன. 

உள்ளடுக்குகள் கொண்டும், பல்வேறு யுக்திகள் கொண்டும் பெரும்பாலான கதைகள் உள்ளது. தற்கால இஸ்ரேல் மனதின் ஒருவகைச்  சாட்சிகளாகவே இக்கதைகள் உள்ளன. விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருசேர பயன்படுத்தி சில கதைகள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அடியில் மனிதனின் அடிப்படை உணர்வுகளே பேசப்பட்டுள்ளதால் இது பெரும்பாலும் அனைத்து இடத்துக்கும் பொதுவாகவே உள்ளது.

மனித குரூரங்களையும், பழி உணர்ச்சியையும் சொல்லும் 'தபுலா ரஸா' ('எழுதாப் பலகை'  லத்தீன்)முதல் சிறுகதை. ஹிட்லர் போன்றே cloneஐ உருவாக்கி பழி தீர்க்கும் ஒருவன், clone பொண்டாட்டியை கொன்று நிஜப் பொண்டாட்டியோடு இன்பமாக வாழ நினைக்கும் கணவன். ஆனால் அந்த cloneஇற்கு தங்கள் எதிராளியின் குணாதியசங்களை வரவழைத்த பின்பே அவர்களை பழி தீர்க்கின்றனர். பழி தீர்த்தப் பின்னும் பழி எஞ்சியே உள்ளது. எந்தப் பழியையும் முழுமையாக தீர்க்க முடியுமா என்ன? அதனால் தான் மனிதன் இந்த 'எழுதாப் பலகை'யில் எழுதி எழுதி வரலாறு முழுவதும் அழித்துக் கொண்டே இருக்கிறான் போலும்.

குழந்தையின் பார்வையில் பறக்கும் சூப்பர்மேனாக தெரிகிறான் தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன். தங்கள் கொடை உள்ளத்தை வெளிக்காட்ட 'செயலி' செய்து ஆதரவற்றோரைக் காக்க நினைக்கும் மேல் வர்க்கத்தினர். ஆதரவற்றோர் இல்லாமல் போனால், தாங்களே ஆதரவற்றோராக நிற்கும் அவர்களின் முரண். உறவு முறிந்தவனின் தனிமை சொல்லும் கதை என்று ஒவ்வொரு கதையும்  வடிவிலும் தொட்டுச் செல்லும் உணர்விலும் வெவ்வேறு கோணங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் 365 நாட்களும் பிறந்தநாள் கொண்டாடி இன்பமாய் இருக்க, மற்றவர்களின்  பிறந்தநாட்களை விலை கொடுத்து வாங்குகிறான் ஒரு செல்வந்தன். ஒரு மனிதனின் ஒரு நொடி அவனின் மொத்த வரலாறும் அந்த இடத்தில கூடும் ஒரு புள்ளியாகவே இருக்கும். அதில் இன்பமும், வன்மமும், குரூரமும் அனைத்துமே கலந்து தான் இருக்கும். அவ்வாறு 'தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள்'ஐ வாங்கும் செல்வந்தன் என்னவாகிறான் என்கிறது ஒரு கதை. 

தங்கள் நாயின் ஒவ்வாமைகள் வழியாக, மனிதன் கட்டமைக்கப்பட்ட சமூக விழுமியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக துறந்து கற்காலத்துக்கே செல்லும் தம்பதிகள். இக்கதை குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகள் தேவை. 

'சாளரங்கள்' சிறுகதை என்னை மிகவும் பாதித்த சிறுகதை. மிகவும் நுட்பமாகவும், ஒரு சொல் பிழையாக புரிந்து கொண்டால் கூட கதை முற்றிலும் வேறு ஒன்றாக மாறும் கதையாகவும் இருக்கிறது. இக்கதை நேரடியாகவே இரண்டு விதமான வாசிப்புப் புரிதல்களைக் கொள்ளலாம். 

'செங்கதிர்' அவர்களின் மொழிபெயர்ப்பினைப் பற்றி கூறியாக வேண்டும். அனைத்து சிறுகதைகளும் மிகவும் நுட்பமாகவும் அதே சமயம் உணர்வுகளை மிகச்சிறந்த வகையில் கடத்துவதாகவும் மொழி பெயர்த்துள்ளார்.  'சாளரங்கள்' சிறுகதை நான் தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வாசித்தேன்.  இக்கதையில் 'neighour' என்னும் சொல் வருகிறது. அதை 'அண்டைவீட்டான்' என்று சுலபமாக கதை போகிற போக்கில் மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் அவ்வாறு செய்தால் கதையினை எவ்வளவு முறை வாசித்தாலும் புரிந்துக் கொள்ள முடியாது. அதை  'அண்டைவீட்டார்' என்று மொழிபெயர்த்தால் மட்டுமே அந்தக் கதையை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லிற்குள்ளும் அர்த்தங்களை புதைத்துக் கட்டி கதையின் அழகியலும், கூறுமுறையும், நுட்பமும் மாறாமல் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்  செங்கதிர்.

படித்து முடித்துப் பிறகு இக்கதைகள் வெறும் தொழில் நுட்ப கட்டுமானங்கள் மட்டும் தானோ என்று யோசித்துப் பார்க்கையில்,  கதையின் வடிவத்திலும், யுக்தியிலும்  மனிதனின் உணர்வுகளை படிப்படியாக வடித்துள்ளார் எட்கர் கீரத்.  ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகனும் கண்டிப்பாக பல முறை வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.  

நான்கு , ஐந்து முறை வாசித்தாலும் பிடி கிடைக்காத சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளது. 

              

No comments:

Post a Comment